Thursday 4 August 2022

2021 -2022 இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம் பொதுத்தமிழ் - தாள் - 3 காப்பியங்களும் புதினமும்

 

 

இரண்டாம் ஆண்டு - மூன்றாம்  பருவம்

பொதுத்தமிழ் - தாள் - 3 காப்பியங்களும் புதினமும்

21FTL03

 

அலகு - 1 ஐம்பெரும் காப்பியங்கள்

              சிலப்பதிகாரம் - இந்திர விழவு ஊர் எடுத்த காதை

மணிமேகலை  - பாத்திரம் பெற்ற காதை

சீவக சிந்தாமணி -குணமாலையார் இலம்பகம் (பாடல் 878 முதல் 895 வரை)

 

அலகு 2   இடைக்கால பிற்கால காப்பியங்கள்

பெரியபுராணம்  - கண்ணப்ப நாயனார் புராணம்

கம்பராமாயணம் - சுந்தரகாண்டம் திருவடி தொழுத படலம்

சீறாப்புராணம்   - உடும்பு பேசிய படலம்

இயேசுகாவியம்  - அன்புக் கட்டளை பிரியாவிடை

 

அலகு 3   புதினம்

                                பிச்சிப்பூ - பொன்னீலன்

 

அலகு 4   இலக்கிய வரலாறு

 

ஐம்பெரும் காப்பியங்கள்

ஐஞ்சிறு காப்பியங்கள்

கம்பராமாயணம்

இஸ்லாமியர்களின் தமிழ்த்தொண்டு

கிறிஸ்துவர்களின் தமிழ்த்தொண்டு

அலகு 5   மொழித்திறன்

 

யாப்பிலக்கணம் 

யாப்பு உறுப்புகள்

 

அணி இலக்கணம்

உவமை அணி

உருவக அணி

வேற்றுமையணி

பின்வருநிலையணி

தற்குறிப்பேற்ற அணி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சிலப்பதிகாரம்

. இந்திர விழவு ஊர் எடுத்த காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதைஇருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி 5

உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,
வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும், 10

கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும், 15

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 20

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்,
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர் 25

பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும் 30

பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் 35

வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்,
கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும், 40

பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர்
மாட மறுகும், மறையோர் இருக்கையும்,
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும், 45

திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் 50

பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர் 55

இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்,
இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய 60

கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத் 65

தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப் 70

பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர, 75

மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக் 80

கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோ ர் ஆர்அமர் அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென 85

நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி,
இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன் 90

வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப் 95

பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎன
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு,
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும் 100

மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் 105

நுண்வினைக் கம்மியர் காணா மரபின,
துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும், 110

வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக் 115

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்,
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று 120

வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்,
வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோ ர் 125

சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,
தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர் 130

பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து 135

உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,
மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ, 140

வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து 145

மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து,
மரகத மணியொடு வயிரம் குயிற்றிப்
பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்
கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து 150

மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன்
பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை
பாவை விளக்குப் பசும்பொன் படாகை
தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து 155

மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு,
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர்ப்பரித் தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி 160

அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் 165

புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி,
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் 170

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால், 175

நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்,
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் 180

திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்,
கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்,
கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்யாழ்ப் புலவர் பாடல் பாணரொடு 185

எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்,
முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்
காதல் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு 190

இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழிக் குவளை சூழ்செங் கழுநீர்
பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து
காமக் களிமகிழ்வு எய்திக் காமர்
பூம்பொதி நறுவிரைப் பொழில்ஆட்டு அமர்ந்து 195

நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில்
பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு 200

திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்,
கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு
இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி 205

அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்.
நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின்
சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி
மீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த 210

வான வல்லி வருதலும் உண்டுகொல்.
இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத்
திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி ஆம்என
எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்
கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு 215

உள்வரி கோலத்து உறுதுணை தேடிக்
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்.
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது 220

நாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப்
பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன,
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர் 225

எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ
விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப் 230

போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎனக்
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்:
உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து 235

கள்உக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன். 240

பொருள்:

கதிரவன் தோன்றுதல்

கண்ணகன்ற பரப்பினை உடைய மண்ணகம் என்னும் மடந்தைக்கு.
கடல் ஆடை
மலை முலை
ஆறு மாலை
மழை கூந்தல்
இவள் புதைந்திருக்கும் இருள் என்னும் போர்வைக்குள் புதைந்து கிடந்தாள்.
அந்தப் போர்வையை விலக்கிக்கொண்டு மலை முகட்டில் கதிரவன் தோன்றினான். உலகம் தொழும்படித் தோன்றினான்.

மருவூர்ப் பாக்கம்

புகார் நகரத்தில் மக்கள் மருவி வாழ்ந்த கடல்-சார்-ஊர்ப் பகுதி

திறந்தவெளி மாளிகைகள்
பொருள்களைப் பாதுகாக்கும் அகன்ற இருப்பிடங்கள்
மான் கண்ணை விழித்துப் பார்ப்பது போன்ற காற்று வரும் சன்னல்கள்
இப்படிப்பட்ட மாளிகை இடங்கள் இருந்தன.

கடலிலிருந்து நிலத்துக்கு நுழையும் கயவாய்ப் பகுதியில் யவனர் இருப்பிடங்கள் இருந்தன.
அங்குப் பயன்டுத்த முடியாத அளவுக்குப் பண்டங்கள் நிரம்பிக் கிடந்தன.
கப்பலில் சென்று பொருள் ஈட்டி வந்த உள்நாட்டு வணிகர்களும் யவனர்களும் அங்கு ஒன்று கலந்து இனிதாக வாழ்ந்தனர்.

மேனியில் பூசும் வண்ணப் பொடிகள், மணப் பொடிகள், சந்தனம், பூ, அகில் போன்ற புகையும் பொருள்கள், மணத் தூவிகள் (செண்டு) முதலானவற்றை விற்றுக்கொண்டு நகர-வீதியில் நடமாடும் வணிகர்கள் திரிந்தனர்.

பட்டு, மயிர், பருத்தி முதலானவற்றில் நூல்களை  நூற்று ஆடையாக நெய்யும் காருகர் (நெசவாளிகள்) வாழும் இருப்பிடங்கள் இருந்தன.

ஆடைகள், பவளங்கள், பூ-மாலைகள், (புகைத்துக் கூந்தலுக்கு மணம் ஊட்டும்) அகில் கட்டைகள், முத்துக்கள், மணிக்கற்கள், பொன்னணிகள் - இப்படிப் பல செலவங்கள் அளவிட  முடியாதபடி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தெருக்கள் இருந்தன.
அளந்து தரும் பண்டங்கள், பல வகையான உணவு தானியங்கள் விற்பனைக்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த தெருக்கள் இருந்தன.

பிட்டு விற்கும் காழியர்
அப்பம் விற்கும் கூவியர்
கள் விற்கும் பெண்டிர்
மீன் விற்கும் பரதவர்
உப்பு விற்பவர்
வெற்றிலை விற்கும் பாசவர்
(
சூடம், சாம்பிராணி போன்ற ) மணப்பொருள்களை விற்பவர்
பலவகையான புலால் கறிகளை விற்கும் ஓசுநர்
ஆகியோரின் இருப்பிடங்கள் இருந்தன.

வெண்கலப் பொருள்கள் செய்வோர்
செம்புப் பொருள்கள் செய்வோர்
மரப் பொருகள் செய்யும் தச்சர்
இரும்புக் கருவிகள் செய்யும் கொல்லர்
சிற்பங்கள் செய்யும் கண்ணுள்-வினைஞர்
மண்ணில் பாண்டங்களும் பொம்மைகளும் செய்யும் மண்ணீட்டாளர்
பொற்கொல்லர்
பொன்னணிகள் விற்போர்
துணி தைப்போர்
தோல்-அணி தைப்போர்
கிழிந்த துணியில் பொம்மை செயெய்வோர்
வெண்டுகளில் பொம்மை செய்வோர்
இப்படிப் பலவகைப்பட்ட தொழிலாளர்கள் பகுதி பகுதியாக வாழ்ந்தனர்.

குழலிலும், யாழிலும் குரல் முதலாகத் தொடங்கும் ஏழு பண்களையும் குற்றமின்றி இசைத்துப் பண்ணின் திறத்தைக் காட்டும் பெரும்பாணர் வாழும் இருப்பிடங்கள் இருந்தன.

சிறிய, குறுமையான கைவினைப் பொருள்களைச் செய்பவரோடு பெரிய கைவினைப் பொருள்கள் செய்பவர்களும் எத்தகைய குறைபாடும் இல்லாமல் ஒருவரோடு ஒருவர் மருவி இணக்கமாக வாழ்ந்த இடம் மருவூர்ப் பாக்கம்.

பட்டினப் பாக்கம்

அரசு சார் பெருங்குடி மக்கள் வாழும் இடம்

அரசன் நடமாடும் அரண்மனைத் தெரு
அரசனின் கொடி கட்டிய தேர் செல்லும் தெரு
அரங்க மேடைகள் இருக்கும் தெரு
பெருங்குடி வணிகர் வாழும் மாடமாளிகைகள் இருக்கும் தெரு
மறை ஓதுவோர் வாழும் தெரு
எல்லாரும் விரும்பும் உழவர் வாழும் தெரு
ஆயுளுக்கு வேது தரும் மருத்துவர்கள் வாழும் தெரு
காலத்தைக் கணக்கிடுவோர் வாழும் தெரு
இப்படிப் பாகுபட்ட தெருக்கள் பட்டினப் பாக்கத்தில் இருந்தன.

மணிகளுக்குப் பட்டை தீட்டித் துளையிடும் குயிலுநர் வாழும் தெரு
சங்குகளில் வளையல் அறுக்கும் அகன்ற தெரு

நின்றுகொண்டு அரசனை வாழ்த்தும் சூதர்
அமர்ந்துகொண்டு அரசனை வாழ்த்தும் மாகதர்
செல்லும்போது அரசனை வாழ்த்தும் வேதாளிகர்
நல்ல நேரம் பார்த்துச் சொல்லும் நாழிகைக்கணக்கர்
ஆடி மகிழ்விக்கும் மகளிர்
பூ விற்கும் பெண்கள்
குற்றேவல் செய்யும் மகளிர்
அரச குடும்பம் பயிலும் தொழில்களைக் கற்பிக்கும் கலைஞர்கள்
பல்வகை கருவிகளைடன் நின்று இவர்களைப் பாதுகாப்போர்
சிரிப்பு மூட்டி அரசனை மகிழ்விக்கும் நகை-வேழம்பர்
இப்படிப்பட்ட பெருமக்கள் வகைவகையாக வாழும் இருப்பிடங்கள் இருந்தன.

குதிரைப் படை மறவர்
யானைப்படை மறவர்
தேரோட்டும் மறவர்
நடந்து போரிடும் கடுங்கண் மறவர்
ஆகியோர் அரசனைச் சூழ்ந்திருந்து அவனுக்குப் பாய் போல் உதவுவோர்
பெருமை மிக்க சிறப்பு பெற்றவர்கள்
ஆகியோர் மலிந்து வாழ்ந்த இடம் பட்டினப் பாக்கம்.

நாள்-அங்காடிப் பூதத்தை மறக் குடி மகளிர் வழிபடுதல்
நாள்-அங்காடி

இரண்டு பெருவேந்தர்கள் போரிடும் களம் போல, மரத்தடியில் கொடுப்போர் ஓசையும் வாங்குவோர் ஓசையும் பெருகி, மருவூர்ப் பாக்கத்துக்ககும், பட்டினப் பாக்கத்துக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் அச்சமின்றி ஆரவாரம் மிக்கதாய் விளங்கியது நாளங்காடி.

காவல் பூதம்
புகாரை ஆளும் மன்னனுக்கு உற்ற துன்பத்தைச் சித்திரை மாதத்தில் சித்திரை விண்மீன் (மேழம் - மேஷம்) சிறப்புற்றிருக்கும் நாளில் போக்குவதற்கென்று தேவர் கோமானாகிய இந்திரனின் ஏவலால் புகார் நகரத்துக்கு வந்து காவல் புரிவது - காவல் பூதம்.

வேகவைத்த பயறு - புழுக்கல்
எள் உருண்டை - நோலை
புலவுச் சோறு - விழுக்குடை மடை
பூதம் சூடும் பூ
மணக்கும் புகை
பொங்கல்
ஆகியவற்றைப் படையல் செய்தனர்.

தோள்களைப் புடைத்துக்கொண்டு ஆடும் துணங்கை
கைகளைக் கோத்துக்கொண்டு ஆடும் குரவை
தெய்வம் ஏறிய ஆட்டம்
ஆகியவற்றை ஆடினர்.

பெரு நிலத்தை ஆளும் மன்னனின் நிலப் பரப்பு முழுவதும் பசி, பிணி, பகை ஏதும் இல்லாமல் நீங்கி, மழையும், வளமும் சுரக்கும்படிச் செய்ய வேண்டும் - என்று வேண்டி நாளங்காடிப் பூதத்தை முதுகுடிப் பெண்கள் குலவை ஒலி செய்தனர்.

பூதத்திற்கு வீரர்கள் உயிர்ப் பலி கொடுத்தல்

மருவூர்ப் பகுதியில் வாழும் மறம் கொண்ட வீரர்களும்
பட்டினப் பகுதியில் வாழும் படைவீரர்களும்
நான் முந்தி நீ முந்தி என்று போட்டிப் போட்டுக்கொண்டு சென்று நாளங்காடிப் பூதத்துக்குப் பலி கொடுப்பார்கள்.

விரும்பத் தகும் திறமை கொண்ட மன்னற்கு உற்ற துன்பம் நீங்க வேண்டும் என வேண்டிக்கொண்டு பலி கொடுப்பர்.
பலிக்கொடை புரிந்தவர்களின் வலிமைக்கு வரம்பாக வேறு சிலர் கல்லைக் கவணில் வைத்து எறிந்து பயிற்சி பெறுவர்.
சிலர் தோலாலான கவசம் அணிந்துகொண்டு மற்றவர் மீது வேல் வீசும் போரில் பயிற்சி பெறுவர்.
சிலர் ஒருவரை ஒருவர் கையால் குத்தித் தாக்கிப் பயிற்சி பெறுவ,ர்.
அப்போது ஆரவாரம் செய்வர்.
இது களப்போர் புரியும் பயிற்சியாளர்களின் ஆரவாரம்.
சிலர் அச்சம் தரும் வகையில் சிவந்து சுடும் கண் கொண்ட தன் கருந்தலையை பலி பீடிகையில் வைத்து, "வெற்றி வேந்தன் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டு தன்னைத் தானே பலியிட்டுக்கொள்ளும் முழக்கத்தைச் செய்வர்.
அப்போது அங்கு உள்ள மயிர்த்தோல் போர்த்திய முரசம் முழக்கப்படும்.
இதற்கு "வான்பலி" என்று பெயர்.

மண்டபங்களில் விழாக் கால்கோள்

வச்சிர நாட்டு வேந்தன் கொடுத்த கொற்றப் பந்தர்

பெரிய நிலப்பரப்பில் தன்னை எதிர்த்துப் போரிடுவோர் யாரும் இல்லாததால், திருமாவளவன் போர் வேட்கையோடு புறப்பட்டு, நல்ல நாளில் தன் வாள், குடை, மயிர்கண் முரசம் ஆகியவற்றை போருக்குப் புறப்பட ஏவினான்.
என் தோள் வலிமையைப் பகைவர்கள் எதிர்கொண்டு பெறுவார்களாக  - என முழங்கினான்.
புண்ணிய திசை எனக் கூறப்படும் வடதிசை நோக்கிப் புறப்பட்டான்.
அந்த நாளில்,

அவனது ஆசை நிறைவேறவில்லை.
காரணம் இமயமலை அவனது பகையை விலக்கியது.
அதனால் சினம் கொண்ட திருமாவளவன் தேவர்கள் வாழ்விடமாகக் கொண்ட அந்த இமயமலையின் பிடரியில் தன் புலிச் சின்னத்தை (கொடுவரி) பொறித்தான்.
பின் திரும்பி வரும்போது வச்சிர நாட்டு அரசன் திருமாவளவனைப் போற்றிப் புகார் நகருக்கு வந்து திருமாவளவனின் வெற்றியை விளக்கும் அடையாளமாக கொற்றப் பந்தல் அமைத்துக் கொடுத்தான்.
அந்தக் கொற்றப் பந்தலிலும் பொங்கலிடும் அரும்பலி நடைபெற்றது.

வாள் போரில் வல்ல மகத நாட்டு வேந்தன் தன் பகைமையை விட்டொழித்து, புகார் நகருக்கு வந்து பட்டி மண்டபம் கட்டித் தந்தான்.

அவ்வாறே, அவந்தி நாட்டு வேந்தன் புகார் நகரத்தின் நுழைவாயிலில் தோரண வாயில் ஒன்றை அமைத்துத் தந்தான்.

இந்த மண்டபங்கள் பொன்னும் மணியும் புனைந்து அமைக்கப்பட்டவை.
நுண்வினைக் கம்மியர் (கலைஞர்) இயற்றியவை என்று காணா வகையில் தேவ தச்சன் மயன் செய்து தந்தது போன்ற மரபினவாகக் காணப்பட்டன.
மண்ணுலகக் கம்மியர் இயற்றியதோ, விண்ணுலக மயன் விதித்ததோ - என்று உயர்ந்தோர் பலரும் பாராட்டும் பாங்கினைக் கொண்டவை,
இங்கெல்லாம் விழாவுக்குக் காப்புக் கட்டப்பட்டது (கால்கோள் நிகழ்ந்தது)

ஐவகை மன்றங்களில் அரும்பலி

வெள்ளிடை மன்றம்

புதிதாக ஊருக்குள் வருபவர் தன் பெயரை ஒவ்வொரு எழுத்தாகப் பதிவு செய்யும் கண்ணெழுத்துப் பதிவுகள் எண்ணிக்கையில் பலவாக இருக்கும் கடைமுக வாயில்
தாழிட்டு அரக்கு முத்திரை இடப்பட்ட கருந்தாழ் வாயில்
இங்கெல்லாம் காவல் காப்போரின் காப்பினை மீறித் திருடுபவர் உள்ளார் எனின்,
அவர்களின் தலையில் கடுமையான சுமையினை ஏற்றிச் சுற்றி அலையவிட்டு அல்லாமல் களவாடிய பொருளை அவர்கள் எடுத்துச் செல்ல விடாத, திருட நினைப்போரை நடுங்க வைக்கும் வெள்ளிடை மன்றம்,

இலஞ்சி மன்றம்

கூன், குருடு, ஊமை, செவிடு, அழுகும் குட்டம் முதலான உடல் குறைபாடு உள்ளவர்கள் குளத்தில் மூழ்கி, நல்ல உடம்பும், நல்ல நிறமும் பெற்று அந்தக் குளத்தைச் சுற்றி வந்து வணங்கிச் செல்லும் இலஞ்சி மன்றம்

நெடுங்கல் நின்ற மன்றம்

பிறரால் வஞ்சிக்கப்பட்டுப் பித்துப் பிடித்தவர்
தெரிந்தோ, தெரியாமலோ நச்சுப் பொருளைத் தின்றுவிட்டுத் துன்புறுபவர்
நஞ்சு கக்கும் நாகத்தின் பல் பட்டவர்
கனலும் கண்கொண்ட பேயால் தாக்கப்பட்டவர்
முதலானோர் சுற்றி வந்தால் துயரத்தைத் தீர்த்து வைக்கும் நிழலை அவர்கள் மேல் பாய்ச்சும் (ray treatment) நெடுங்கல் நிற்கும் மன்றம்.

பூதச் சதுக்கம்

தவ வேடம் பூண்டு அதில் தான் மறைந்துகொண்டு வாழும் நல்ல தன்மை இல்லாதவர்
அவம் செய்து மறைந்துகொண்டு பிறர் பொருளை ஏமாற்றிப் பறிக்கும் அலவல் பெண்டிர்
மாற்றரசனிடம் தன் அரசனைக் காட்டிக்கொடுக்கும் அறைபோகும் செயலைச் செய்யும் அமைச்சர்
அடுத்தவன் வீட்டுக்காரியை அடைய விரும்புபவன்
பொய் சாட்சி சொல்லுவோர்
கோள் மூட்டுபவர்
ஆகியோர் என் கைக்குள் படுவார்களாக என்று பாசக் கயிற்றை வீசிக்கொண்டு நாலாப் பக்கமும் காத தூரம் கேட்கும்படி முழக்கம் செய்யும் பூதம் நிற்கும் சதுக்கம்.

பாவை மன்றம்

அரசு கொடுங்காலாக மாறினாலும்
அறம் கூறும் அவையில் நீதி தவறி ஒருதலைப் பக்கமாகத் தீர்ப்பு சொன்னாலும்
நாவால் எதுவும் பேசாமல் துன்பக் கண்ணீர் விட்டுக்கொண்டு நிற்கும் பாவை நிற்கும் மன்றம்

உண்மை உணர்ந்து விழுமிய பெரியோர் போற்றும் இப்படிப்பட்ட ஐந்து மன்றங்கள்
ஆகிய இடங்களில் அரும்பலிப் பொங்கல்  படையல் தரப்பட்டது.

கால்கோள் விழா

முரசு அறைதல்

இந்திரனின் வச்சிரப்படை இருக்கும் கோயில் வச்சிரக் கோட்டம். அதில் இருக்கும் முரசம் கச்ச ஒப்பனை செய்யப்பட்ட அக் கோயில் யானையின் பிடரியில் ஏற்றி முரசு அறைந்து விழா பற்றி அறிவிப்பு செய்யப்பட்டது.
வெள்ளை யானை அரசன் இந்திரன், அவனுக்கு விழா. அவனுக்கு விழா தொடங்கும் நாள் இது. விழா முடியும் நாள் இன்ன நாள் - என்று சொல்லி முழசு அறையப்பட்டது

கொடி ஏற்றம்

தரும் தகைமை கொண்ட கற்பக மரம் காவல் மரமாக நின்றிருக்கும் இந்திரன் கோயிலில் மங்கலக் கொடி வானளாவப் பறக்க விடப்பட்டது.

வீதியின் மங்கலத் தோற்றம்

மரகத மணி, வயிரம், பவளம் முதலானவை பதிக்கப்பட்ட வேலைப்பாட்டுடன் கூடிய தூண்கள் இருக்கும் திண்ணைகளைக் கொண்ட மாளிகை வீடுகளின் வாயிலில் ஒப்பனைகள் செய்யப்பட்டிருந்தன.
ஆடி ஒலி எழுப்பும் கிம்புரிப் பகுவாய்
ஒளி வீசும் முத்து மாலைகள்
மங்கலச் சின்னம் பொறித்து மீன் வாய் போலத் தோன்றும் மகரவாசிகைத் தோரணம்
அங்கெல்லாம் நீர் நிறைந்த பொற்குடங்கள்
முளைப் பாலிகை
பாவை விளக்கு
பசும்பொன்னால் ஆன கொடி (பட்டுத்துணிக் கொடி)
மயிரால் செய்யப்பட்ட கவரி-விசிறி
மணக்கத் தூவும் அழகிய சுண்ணப் பொடிகள்
முதலானவை வீட்டுக்கு வெளியில் தெருவில் வைக்கப்பட்டன.

இந்திரனை நீராட்டுதல்

ஐம்பெருங்குழு
எண்பேராயம்
அரச குமரர்
கடல் வாணிகப் பரதகுமரர்
குதிரை வீரர்
யானை வீரர்
தேர் வீரர்
ஆகிய அனைவரும் ஒன்று திரண்டனர்.

அரசன் உள்ளப் பாங்கில் மேம்பட வேண்டும்
புகழ் மிக்க மன்னன் வெற்றிகள் பல பெறவேண்டும்
என்று சொல்லிக்கொண்டு இந்திரன் சிலையை நீராட்டினர்.

உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் காக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு
1008
பேர் தலையில் காவிரியாற்றுப் புண்ணிய நீரைச் சுமந்து வந்து
மண்ணுலகம் வியக்கும்படியும்
வானுலகம் மருளும்படியும்
விண்ணவர் தலைவனாகிய இந்திரன் சிலையை நீராட்டினர்.

விழா நிகழ்வு

கோயில்களில் வேள்வி

பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவன் கோயில்
ஆறு முகம் கொண்ட செவ்வேள் முருகன் கோயில்
வெள்ளை மேனி கொண்ட பலராமன் கோயில்
நீல நிற மேனி கொண்ட திருமால் கோயில்
மாரை அணிந்த வெண்கொற்றக் குடையை உடைய அரசன் கோயில்
ஆகிய இடங்களிலெல்லாம் பிரமனின் வழிவந்து அவனது நெறியை வழுவாமல் காக்கும் நான்மறையாளர் தீ வளர்த்து யாகம் செய்தனர்.
இது ஒரு பக்கம் நிகழ்ந்தது.

கடவுளர் திருவிழா

நான்கு வகையான தேவர்
18
வகையான தேவ கணங்கள்
குடிகொண்டுள்ள கோயில்களிலெல்லாம் விழா நடைபெற்றது.

அறவுரை பகர்தல்

அறம் புரியும் சமணர் கோயில்
பிறர் அறம் செய்யும் இடங்கள்
கோயில் புறநிலையாக உள்ள மண்டபங்கள்
ஆகிய இடங்களிலெல்லாம் திறனாளரின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

சிறைவீடு செய்தல்

வேந்தன் பகை மன்னர்களைச் சிறைபிடித்து வைத்திருந்தான். இந்திர விழா தொடங்கிய நாளில் அவர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டது. இது பக்கம் நடைபெற்றது.

இசை முழக்கம்

கண்ணுக்கு விருந்தளிக்கும் கூத்தாடுவோர்
கருவி இசையுடன் பாட்டுப் பாடுவோர்
யாழில் இசை பாடும் புலவர்
நாட்டுப்பாடல் பாடும் பாணர்
இவர்களின் எண்ணுதற்கு அரிய இசைப் பாட்டுகள் ஒருபுறம் நிகழ்ந்தன.

விழா மகிழ்ச்சி

ஊரின் மூலை முடுக்குகள், தெருக்கள், அகன்ற வெளியிடங்கள் போன்ற இடங்களில் கண்ணுறக்கம் இல்லாமல் விழா முழவின் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.

இளவேனில் - தென்றல் - தெரு

காதல் கொழுநனைப் பிரிந்து அலர் தூற்றப்படாத மாதவி போல,
ஆசை மூட்டும் காதணி குழை அணிந்த மாதவிநுடன்
ஆசை மூட்டும் தழைகளுடன் கூடிய மாதவிக் கொடியுடன்
இல்லத்தில் வளர்க்கப்படும் முல்லை. மல்லிகை, மயிலை ஆகிய பூக்களும்,
தாழியில் நிற்கும் நீரில் பூத்திருக்கும் குவளை, செங்கழுநீர் ஆகிய பூக்களும்
மாலையாகக் கட்டப்பட்டுப் பொலிவுற்றிருந்தன.
காமத்தின் களிப்பை மூட்டின.
இப்படி மணக்கும் பூக்கள் நிறைந்த மணம் மிக்க பூஞ்சோலையில் அமர்ந்து மக்கள் களித்தனர்.

மேலும் நறுமணப் புகை, சந்தனம் ஆகியனவும் சிறப்புற்று மணம் கமழ்ந்தன.
கோவலன் சிரித்து மகிழும் நகரத்துப் பரத்த நண்பர்களுடனுடனும் குழலூதும் பாணனுடனும் திரிவது போல வண்டுகள் பூக்களைத் தேடித் திரிந்தன.
தெருவில் பொதியமலைத் தென்றல் வீசியது.

வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்

கருங்கூந்தல் என்னும் மேகத்தைச் சுமந்துகொண்டு
நிலாவில் இருக்கும் குட்டி முயல் நிழலை நீக்கிவிட்டு
மூக்கு என்னும் குமிழம்பூவை எழுதிக்கொண்டு
வானத்தில் இருந்தால் ராகு-கேது நிழல் பாம்புகள் விழுங்கும் என்று ஆஞ்சி
மண்ணுக்கு வந்து திங்கள் இங்குத் திரிகின்றதோ?

ஆண் மீனைக் பொடியாபக் கொண்டவன் காமன். அவன் ஒரு பெண்ணை வளர்த்தான். அந்தப் பெண் வானத்தில் தோன்றும் மின்னல்-கொடி. அது நீருக்குள்ளே தோன்றும் நிலவாக இருந்து அங்குள்ள நீர்த் திவலைகளைப் பருகி, ஈரத்தோடு வந்து நிற்கும் மின்னலாக மண்ணுலகுக்கு வருவது உண்டு போலும்.

என் அழகைப் பார்" என்று சொலிக்கொண்டு திருமகள் இந்த ஊரில் புகுந்துகொண்டாள் போல, இங்குள்ள பெண்கள் தோன்றுகிறார்களே!

தீ நிறத்து இலவம் பூ - வாய்
முல்லைப் பூ - பல்
கருங்குவளைப் பூ - கண்
குமிழம் பூ - மூக்கு
பூத்து
உள்ளே வரிந்த ஒப்பனைக் கோலம் செய்துகொண்டு
தனக்கு உரிய துணையைத் தேடிக்கொண்டு
தேன் இருக்கும் தாமரை தெருவில் திருகின்றதோ?

ஆளும் மன்னவனின் செங்கோல் ஆணையை மறுப்பதற்கு அஞ்சி, பல உயிர்களைப் பருகும் கூற்றுவன், தன் ஆண் உருவத்தை மாற்றிக்கொண்டு, உயிரைக் கொல்லும் தொழிலிலிருந்து மட்டும் மாறாமல் நாணம் கொண்ட பெண் உருவத்தில் புன்னகை பூக்கும் தன் முகத்தைக் காட்டிக்கொண்டு, யாழ் போல் பண்ணிசைக்கும் மொழியைப் பேசிக்கொண்டு பெண்மைக் கோலத்தில் இங்குத் திரிதலும் உண்டு போலும்.

என்றெல்லாம் சொல்லும்படிக்கு உருவம் இல்லாத காமனின் படையாகிய மகளிர், போரிடும் பெண்ணாக எதிரில் நின்று, என்னை மேலும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, தன் ஒப்பனைக் கோலத்தால் தனது முழு உடம்பையும் காட்டிக்கொண்டு, காம விருந்தோடு மகளிர் கணவனோடு கூடி மகிழ்ந்திருந்தனர்.

மனை புகுந்த ஆடவர் - மனைவியர் ஊடல்

தெருவில் கண்ட அழகியரை வியந்து பேசிவிட்டு வீட்டுக்குள்ளே ஆடவர் நுழைந்தனர்.வீட்டில் இருந்த மகளிர் வடமீன் போன்ற கற்புடையவர். ஆசையை மூட்டும் ஒளி மிக்க முகம் கொண்டவர். நீல மணி நிறத்தில் பூத்திருக்கும் குவளை மலரின் மொட்டு போன்ற கண்களை உடையவர்கள். அவர்களின் கடைக்கண்கள் சிவக்கும்படி ஊடல் கொண்டனர். விருந்தோடு வந்தாலும் தீராத அளவுக்கு ஊடல் கொண்டிருந்தனர். அவர்களின் ஊடலை எவ்வாறு போக்குவது தெரியாமல் ஆண்கள் நடுங்கினர்.

கண்ணகிக்கும் மாதவிக்கும் கண் துடித்தல்

கண்ணகி, மாதவி இருவருக்கும் கழுநீர் பூ போன்ற கண்கள்.
அவர்கள் உள்ளத்தில் நிறையுடைமை.
அது வெளியில் புலப்படவில்லை.
இருவர் கண்களிலும் கண்ணீர்.
கண்ணகியின் கண்கள் கருமை நிறத்தில் இருந்தன. (கோவலனின் கூடலைப் பெறாத நிலை)
மாதவியின் கண்கள் சிவந்திருந்தன. (கோவலனோடு கூடித் திளைத்த சிவப்பு)
கண்ணகிக்கு இடக்கண் துடித்தது, (கோவலன்  வரப்போகும் நன்னிமித்தம்)
மாதவிக்கு வலக்கண் துடித்தது (கோவலனை நிலையாகப் பிரியப்போகும் தீ நிமித்தம்)
இது இந்திரனுக்கு விழா நடக்கப்போகும் முதல் நாள்.

மணிமேகலை

பாத்திரம் பெற்ற காதை

 

1

மணிமே கலாதெய்வம் நீங்கிய பின்னர்

மணிபல் லவத்திடை மணிமே கலைதான்

வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்

தண்மலர்ப் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக்

காவதம் திரியக் கடவுள் கோலத்துத்

தீவ திலகை செவ்வனந் தோன்றிக்

கலம்கவிழ் மகளிரின் வந்துஈங்கு எய்திய

இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும்,

விளக்கம்

 

2

எப்பிறப் பகத்துள் யார்நீ என்றது

பொன்கொடி அன்னாய் பொருந்திக் கேளாய்

போய பிறவியில் பூமியங் கிழவன்

இராகுலன் மனையான் இலக்குமி என்பேர்

ஆய பிறவியில் ஆடலங் கணிகை

மாதவி ஈன்ற மணிமே கலையான்

என்பெயர்த் தெய்வம் ஈங்குஎனைக் கொணரஇம்

மன்பெரும் பீடிகை என்பிறப்பு உணர்ந்தேன்

ஈங்குஎன் வரவுஇதுஈங்கு எய்திய பயன்இது

பூங்கொடி அன்னாய் யார்நீ என்றலும்,

விளக்கம்

 

3

ஆயிழை தன்பிறப்பு அறிந்தமை அறிந்த

தீவ திலகை செவ்வனம் உரைக்கும்

ஈங்குஇதன் அயலகத்து இரத்தின தீவத்து

ஓங்குஉயர் சமந்தத்து உச்சி மீமிசை

அறவியங் கிழவோன் அடிஇணை ஆகிய

பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்

அறவி நாவாய் ஆங்குஉளது ஆதலின்

தொழுதுவலம் கொண்டு வந்தேன் ஈங்குப்

பழுதுஇல் காட்சிஇந் நன்மணிப் பீடிகை

தேவர்கோன் ஏவலின் காவல் பூண்டேன்

தீவ திலகை என்பெயர் இதுகேள்:

விளக்கம்

 

4

தரும தலைவன் தலைமையின் உரைத்த

பெருமைசால் நல்அறம் பிறழா நோன்பினர்

கண்டுகை தொழுவோர் கண்டதன் பின்னர்ப்

பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி

அரியர் உலகத்து ஆகுஅவர்க்கு அறமொழி

உரியது உலகத்து ஒருதலை யாக

ஆங்ஙனம் ஆகிய அணியிழை இதுகேள்

விளக்கம்

 

5

ஈங்குஇப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது

மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய

கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி

இருதுஇள வேனிலில் எரிகதிர் இடபத்து

ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்

மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்

போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்

ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்

மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்

அந்நாள் இந்நாள் அப்பொழுது இப்பொழுது

நின்ஆங்கு வருவது போலும் நேர்இழை

விளக்கம்

 

6

ஆங்குஅதின் பெய்த ஆர்உயிர் மருந்து

வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது

தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்

நறுமலர்க் கோதை நின்ஊர் ஆங்கண்

அறவணன் தன்பால் கேட்குவை இதன்திறம்

என்றுஅவள் உரைத்தலும், -இளங்கொடி விரும்பி

மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித்

தீவ திலகை தன்னொடும் கூடிக்

கோமுகி வலம்செய்து கொள்கையின் நிற்றலும்

விளக்கம்

 

7

எழுந்துவலம் புரிந்த இளங்கொடி செங்கையில்

தொழுந்தகை மரபின் பாத்திரம் புகுதலும்.

பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்

மாத்திரை இன்றி மனமகிழ் எய்தி

விளக்கம்

 

8

மாரனை வெல்லும் வீர நின்அடி

தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்அடி

பிறர்க்குஅறம் முயலும் பெரியோய் நின்அடி

துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்அடி

எண்பிறக்கு ஒழிய இறந்தோய் நின்அடி

கண்பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்அடி

தீமொழிக்கு அடைத்த செவியோய் நின்அடி

வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி

நரகர் துயர்கெட நடப்போய் நின்அடி

உரகர் துயரம் ஒழிப்போய் நின்அடி

வணங்குதல் அல்லது வாழ்த்தல்என் நாவிற்கு

அடங்காது என்ற ஆயிழை முன்னர்,

போதி நீழல் பொருந்தித் தோன்றும்

நாதன் பாதம் நவைகெட ஏத்தித்

தீவ திலகை சேயிழைக்கும் உரைக்கும்:

விளக்கம்

 

9

குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது

விளக்கம்

 

10

புல்மரம் புகையப் புகைஅழல் பொங்கி

மன்உயிர் மடிய மழைவளம் கரத்தலின்

அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்

இருநில மருங்கின் யாங்கணும் திரிவோன்

அரும்பசி களைய ஆற்றுவது காணான்

திருந்தா நாய்ஊன் தின்னுதல் உறுவோன்

இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்

வந்து தோன்றிய வானவர் பெருந்தகை

மழைவளம் தருதலின் மன்உயிர் ஓங்கிப்

பிழையா விளையுளும் பெருகியது அன்றோ

விளக்கம்

 

11

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்

கயக்குஅறு நல்அறம் கண்டனை என்றலும்,

விளக்கம்

 

12

விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்

திட்டி விடம்உணச் செல்உயிர் போவுழி

உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து

வெயில்விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய

சாது சக்கரன் தனையான் ஊட்டிய

காலம் போல்வதுஓர் கனாமயக்கு உற்றேன்

ஆங்குஅதன் பயனே ஆர்உயிர் மருந்தாய்

ஈங்குஇப் பாத்திரம் என்கைப் புகுந்தது

நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து

வித்தி நல்அறம் விளைந்த அதன்பயன்

துய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர் உடுத்து

வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி

வெயில்என முனியாது புயல்என மடியாது

புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்

அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்

ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித்

தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே

நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து

அகன்சுரைப் பெய்த ஆர்உயிர் மருந்துஅவர்

முகம்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேன்என,

விளக்கம்

 

13

மறந்தேன் அதன்திறம் நீஎடுத்து உரைத்தனை

அறம்கரி யாக அருள்சுரந்து ஊட்டும்

சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது

ஆங்ஙனம் ஆயினை அதன்பயன் அறிந்தனை

ஈங்குநின்று எழுவாய் என்றுஅவள் உரைப்ப,

விளக்கம்

 

14

தீவ திலகை தன்அடி வணங்கி

மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக்

கோமகன் பீடிகை தொழுது வலம்கொண்டு

வான்ஊடு எழுந்து மணிமே கலைதான்

வழுஅறு தெய்வம் வாய்மையின் உரைத்த

எழுநாள் வந்தது என்மகள் வாராள்

வழுவாய் உண்டுஎன மயங்குவோள் முன்னர்

வந்து தோன்றி,

அந்தில் அவர்க்குஓர் அற்புதம் கூறும்

விளக்கம்

 

15

இரவி வன்மன் ஒருபெரு மகளே

துரகத் தானைத் துச்சயன் தேவி

அமுத பதிவயிற்று அரிதில் தோன்றித்

தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்

அவ்வையர் ஆயினீர் நும்மடி தொழுதேன்

வாய்வ தாக மானிட யாக்கையில்

விளக்கம்

 

16

தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்குஈங்கு

அறவண வடிகள் தம்பால் பெறுமின்

செறிதொடி நல்லீர் உம்பிறப்பு ஈங்குஇஃது

ஆபுத் திரன்கை அமுத சுரபிஎனும்

மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழும்எனத்

தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்

பழுதுஅறு மாதவன் பாதம் படர்கேம்

எழுகென எழுந்தனள் இளங்கொடி தான்என்.

விளக்கம்

 

பாத்திரம் பெற்ற காதை முற்றிற்று.

மணிமேகலை : பாத்திரம் பெற்ற காதை சுட்டும் அறக்கருத்துகள்

. முன்னுரை 

 

. மணிமேகலை கதைச் சுருக்கம்

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவே கருதப்பட்டு வருகின்றது. இக்காப்பியத்தில் கதாநாயகியாக வலம் வரும் மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாவாள். மணிமேகலை, இள வயதிலேயே துறவறம் பூண்டு அமுதசுரபி மூலம் மக்களின் பசியைப் போக்கும் மேன்மைச் செயலை மேற்கொள்ளும் பாத்திரமாகவே இக்காப்பியத்தில் வலம் வருகிறாள். இக்காப்பியம் உலக மக்களுக்குப் புத்த மதக் கோட்பாட்டினைத் தெரிவிக்கும் வண்ணம் அமைந்திருந்தாலும், இதில் பல அறக்கருத்துகள் நம் வாழ்வுக்குத் துணை புரியும் வகையில் இடம்பெற்றுள்ளன.

 

 பாத்திரம் பெற்ற காதை

மணிமேகலையில் காதைகளில்  வது காதையாகப் ‘பாத்திரம் பெற்ற காதை’ இடம்பெற்றுள்ளது இக்காதையில்தான், மணிமேகலை அள்ள அள்ள குறையாத அமுதசுரபியைப் பெற்ற நிகழ்வு இடம்பெறுகிறது. மணிமேகலை தன் தோழி சுதமதியுடன் நந்தவனத்தில் மலர் கொய்யும் போது, அங்கு அவளைத் துரத்தி வந்த உதயகுமாரன் எனும் இளவரசனிடமிருந்து தப்பும் பொருட்டு ஒரு பளிங்கு அறையில் புகுந்தாள். அங்கிருந்து அவள் மணிமேகலா தெய்வத்தால் மணிபல்லவத் தீவிற்குக் கொண்டுச் செல்லப்பட்டாள். அத்தீவில் இருந்த புத்த பீடிகையை வணங்கி பழம் பிறப்பை அறிகிறாள். பின்பு அங்குத் தோன்றிய தீவதிலகையிடம் தன்னைப் பற்றி கூறி, முன்னொரு காலத்தில் ஆபுத்திரனால் கைவிடப்பட்ட அமுதசுரபியைப் பெறுகிறாள். அதன் பின் தீவதிலகை அவளுக்கு அறங்கள் சிலவற்றை உரைக்கிறாள்.

 

.  பாத்திரம் பெற்ற காதை சுட்டும் இன்றைய வாழ்வோடு தொடர்புடைய அறக்கருத்துகள் :

 

.அன்னமிடுதலின் மேன்மை

தானங்களில் சிறந்த உயரிய தானமாகக் கருதப்படுவது அன்னதானம்3 என்று கூறினால் மறுப்பாரில்லை. உணவைப் பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதே அன்னதானத்தின் சிறப்பம்சமாகும். இது, சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.  இவ்வாறு அன்னமிடுதலின் மேன்மையைப் பற்றி மணிமேகலையில், பாத்திரம் பெற்ற காதையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே 5

 

என்ற வரிகளின் வழி, பசித்தோருக்கு உணவிடுதல், உயிரையே கொடையாக அளித்ததற்குச் சமமாகக் கருதப்படும் என்று கூறப்படுகின்றது.6 இறைவனுக்கடுத்து உலகில் உயிர்கள் பசித்திருக்கும் வேளையிலும் தக்க தருணத்தில் உணவளிப்போரே நமக்கு உயிர் கொடுத்தவர்களாகின்றனர் என்பது இவ்வரிகளின் வழி தெளிவாக அறிய முடிகின்றது.7

பசி என்பது ஒரு நோயாகவே கருதப்படுகின்றது. இப்பசியானது ஒருவரது சிறப்பை அழிக்கவல்லது. இதைத்தான் மணிமேகலையில்,

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்

பிடித்த கல்வி பெரும்புனை விடூஉம்

நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் 8

 

என்று சீத்தலை சாத்தனார் எடுத்தியம்பியுள்ளார். அதாவது பசி மனிதன் ஒருவனை ஆட்கொள்ளும் போது, அம்மனிதன் தன்னை மறக்கிறான்; தன் சுற்றுப்புறத்தை மறக்கிறான். அவன் கற்ற கல்வி அந்நேரத்தில் பயன்படாமல் மனிதனுக்குரிய நாணப் பண்புகளைக் கைவிட்டு பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டான்.9 அவ்வாறான கொடுமைகளை இன்றும் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நகர்ப்புறங்களில், கைகளில் குழந்தையுடனும், வயோதிகர்களும் பசிக்கொடுமயினால் பொது இடங்களில் பிச்சை எடுத்த வண்ணமாகத் தான் உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க வெறும் கோயில்களிலும் விழாக்களிலும் வழங்கப்படும் அன்னதானமானது இந்நிலை சீர் அடைய பெரிதும் உதவாது என்றே கூறலாம்.

அதே வேளையில், மக்களது பசிப்பிணியைப் போக்குபவர்களை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்று தீவதிலகை,

பசிப்பிணி யென்னும் பாவியது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக் கொன்நா நிமிராது 

 

 

என்ற வரிகளின் வழி இக்காதையில் மணிமேகலையிடம் கூறுகிறாள்.

இவ்வாறு சோற்றுக்கொடையின் சிறப்பும் அக்கொடையாளியரின் உலகப் புகழும் இந்நூலால் பறைசாற்றப்படுகின்றன.

எனினும், பசிப்பிணியைப் போக்கும் ஆற்றல் இல்லாதவர்களுக்கு அன்னமிடுதலே அறச்செயலாகக் கருதப்படுகின்றது. ஏனையவர்களுக்கு உணவிடுதல் அந்த அறச்செயலையே விலை கூறுவது போல் கருதப்படும்

 

இதையே, சாத்தனார் பெருமான்,

ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர்

மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை

 

என்று எடுத்தியம்பியுள்ளார். அதையே திருவள்ளுவரும்,

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீ துடைத்து 

 

 

அதாவது, இல்லாதவர்களுக்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.5 எனவே, பசியால் வாடும் மக்களுக்கு உதவி செய்து நல்லலறத்தை மேற்கொள்ளும் கடமை நாம் அனைவருக்கும் உண்டு. இவ்வாறு செய்யப்படும் அறமானது, இப்பூவுலகில் நிலைத்து நிற்கும் தன்மையுடையது.

 

  அன்பின் மேன்மை

 

. உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல்

அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒர் உணர்வும் அனுபவமும் ஆகும்.6

ஈன்ற குழவி முகங்கண் டிரங்கித்

தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே

நெஞ்சு வழிப்படூ  7

 

என்ற வரிகளின் வழி, ஈன்ற குழந்தையின் முகம் கண்டு, பெற்ற தாய்க்குப் பால் சுரப்பதைப் போல், பசியால் வாடி, அயர்ந்து, சோர்ந்திருக்கும் வரியோர்களைக் கண்டவுடன் அன்பால் கிரங்கி இப்பாத்திரம் அமுதத்தைச் சுரக்கும் என மணிமேகலை தீவதிலகையிடம் கூறுகிறாள். இங்கு உயிர்கள் பால் மணிமேகலை கொண்டிருக்கும் அன்பு மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது. உயிர்களிடத்தில் செலுத்தப்படும் அன்பானது தெய்வத்திற்குச் சமம் என்பதை ‘அன்பு என்பது தெய்வமானது’ என்ற முன்னோர்களின் கூற்று புலப்படுத்துகிறது. மனிதர்கள் சக மனிதர்களிடம் அன்பு செலுத்துதல் புனிதமான செயலாகும்.

 

 தாய் மகள் மீது கொண்ட அன்பு

வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த

எழுநாள் வந்த தென்மகள் வாராள்

வழுவாய் உண்டென மயங்கி 8

 

என்ற வரிகளின் வழி மாதவியின் கலக்கத்தைச் சாத்தனார் பெருமான் படம் பிடித்து காட்டுகின்றார். தெய்வம் கெடு கொடுத்த ஏழு நாட்கள் முடிவடைந்த பின்னும் தன் மகள் இன்னும் இல்லம் திரும்பவில்லையே என்று  மணிமேகலையின் தாய் மாதவியும் செவிலித் தாய் சுதமதியும் கலங்கி வருந்தி காத்திருப்பதாக இப்பாடல் வரிகள் அமையப் பெற்றுள்ளன.9 இது மகள் மீது தாய் கொண்டிருக்கும் அன்பையும் பாசத்தையும் காட்டுகின்றது.

இன்றைய பரபரப்பு மிகுந்த வாழ்க்கைச் சூழலில், மக்கள் அன்பிற்குக் கொடுத்து வரும் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பி எந்நேரமும் பொருளீட்டுவதிலேயே குறிக்கோளாக இருக்கும் மக்கள் வாழ்வில், அன்பு இன்று வெறும் சொல்லாகவே இருந்து வருகிறது. குடும்ப அமைப்பில் இந்த அன்பு சரியான முறையில் வெளிகாட்டப்படாததால், குடும்பங்களில் அமைதி காணப்படுவதில்லை.

உலக அரங்கிலோ, அன்பின்மை காரணமாக, வன்முறைச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. உலக அரங்கில் போர்கள் பல நடந்த வண்ணமாகவே உள்ளன. சமயங்கள் அனைத்தும் உயிர்களிடத்தில் அன்புடைமையை வலியுறுத்தினாலும், உலகில் வன்முறைச் சம்பவங்கள் அதிமாகவே காணப்படுகின்றன. இதிலிருந்து, உயிர்களிடத்து அன்பு செலுத்தும் பண்பு மக்களிடையே குறைந்து வருகிறது என்று தெள்ள தெளிவாகப் புரிகிறது.

 

.3 மூத்தோரை மதித்தல்

 

.3. பெற்றோரை மதித்தல்

இக்காதையில் மணிமேகலை ஏழு நாட்கள் கழித்து,  தீவதிலகையிடம் இருந்து விடைபெற்று தன் தாயையும் செவிலித் தாயையும் சந்தித்து அவர்களது பழம்பிறப்பை விளக்கி கூறி பின் அவர்களது காலில் விழுந்து வணங்குமாறு பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

இரவி வன்மன் ஒருபெரு மகளே

துர்கத் தானைத் துச்சயன் தேவி

அமுத பதிவயிற் றரிதில் தோன்றித்

தவ்வைய ராகிய தாரையும் வீரையும்

அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன்  

பெரியோரின் ஆசி பெறுதல் இன்னும் சமூகத்தில் ஒர் வழக்கமாகவே இருந்து வருகிறது. விழாக்களிலும் பண்டிகைகளிலும் நம்மவர்கள் இன்னும் வீட்டின் உள்ள பெரியோர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவதைக் கண்கூடாகக் காண இயலும்.

 

.3 குருவைப் போற்றுதல்

மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழுமெனத்

தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்

பழுதறு மாதவன் பாதம் படர்கேம்

எழுகென வெழுந்தனர் இளங்கொடி தானென் 

 

மணிமேகலையின் கையில் இருந்த அமுத சுரபியை மாதவியும் சுதமதியும் வணங்கிய பின், குற்றமற்ற பெருந்தவம் உடைய அறவண அடிகளது பாதங்களை வணங்கச் செல்வோம் வாரீர் என மணிமேகலை மாதவியையும் சுதமதியையும் அழைத்துக் கொண்டுச் செல்கிறாள் இங்கு இம்மூவரும் தங்களுக்குக் குருவாகச் செயல்பட்டு வந்த அறவண அடிகளைப் பெரிதும் மதித்து வந்தனர் என்பது நன்கு புலப்படுகிறது.

இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள் நம் ஆசிரியர்களேகுருவருளால் தான் திருவருள்அதாவது இறைவனின் அருள் கிடைத்து நிம்மதியாக வாழ முடியும். இக்காதையில் அறவண அடிகள் மணிமேகலை, மாதவி, சுதமதி ஆகியோருக்குக்  குருவாக வலம் வருகிறார். அவரே இவர்களுக்குப் பௌத்த சமயத்தைப் போதித்து அற நெறியில் நிற்க வகை செய்கிறார். இவர் மணிமேகலை, மாதவி, சுதமதி ஆகிய மூவரும் இறைவனிடம் நெருங்க உற்ற துணையாக இருந்துள்ளார்.

இதிலிருந்து, நாம் வாழ்வில் ஒன்றைக் கற்றுக் கொள்ளவும், இறைவனை நெருங்கவும் குருவருள் மிகவும் அவசியமாகும். இன்றும் நம் வாழ்வில் குருவைப் போற்றும் பண்பு இருந்து கொண்டு தான் வருகின்றது. ஆங்காங்கே, பல குருமார்களின் ஆசிரமங்கள் வழிபாட்டுக்கு உரியவையாக இருந்து வருகின்றன.

எனினும், இந்நிலை போலி குருக்கள் உருவாவதற்கும் காரணியாக அமைந்து விட்டது. இப்பொழுது எங்கும் நேற்று பெய்த மழையில் பூத்த காளான்களைப் போல் பலர் சரியான தகுதிப்பாடு இல்லை எனினும் தங்களைக் குரு என்று அடையாளப்படுத்தி கொள்கின்றனர். இவர்களில் பலர் பணம் தேடும் நோக்கத்திற்காகவே இவ்வாறு செயல்படுகின்றனர். உண்மையை அறியாத மக்களும் இது போன்ற ’குருக்களை’ நம்பி வழிபட்டு பணத்தையும் பொருளையும் இழந்த கதைகள் பல உண்டு. இன்றும் தமிழகத்தில் பல போலி குருக்கள் காவல் துறையினரினால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆகவே, இது போன்ற விஷயங்களில் நம்மவர் இன்னும் விழிப்பாகச் செயல்படுவது மிகவும் அவசியம்.

 

. மனித வாழ்வில் இறை நம்பிக்கை

மணிமேகலை முழுக்க முழுக்க பௌத்த சமய காப்பியமாகும். இக்காப்பியத்தில் புத்தர் பெருமான் தெய்வமாகக் கருதி வணங்கப்பட்டுள்ளார். இக்காப்பியத்தில் எங்கு திரும்பினாலும் பௌத்த சமய மேன்மையே மேலோங்கி நிற்பதைக் காண முடிகின்றது.

போதி நீழற் பொருந்தித் தோன்றும்

நாதன் பாதம் நவைகெட ஏத்தித்

தீவ திலகை சேயிழைக் குரைக்கும்

 

போதி மரத்தின் கீழ் வீற்றிருக்கும் குற்றமற்ற புத்தர் பெருமானை வணங்கி, குற்றங்கள் நீங்குமாறு போற்றி தீவதிலகை மணிமேகலைக்கு அறங்கள் உரைக்கத் தொடங்குவதாக இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன. இங்கு புத்தர் தெய்வமாக வணங்கப்படுகின்றார். அறங்கள் கூறுமுன் இறைவனை வழிப்பட்டது, மணிமேகலையிடம் உள்ள இறை நம்பிக்கையைப் படம் பிடித்து காட்டுகின்றது.

இறைநம்பிக்கை, ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் வழி தவறாமல் சரியான பாதையில் நடக்க உற்ற துணை புரிகிறது. மனித வாழ்விற்கு இறைநம்பிக்கை ஒரு தண்டவாளத்தைப் போன்றது என்றால் மறுப்பாரில்லை. உண்மையான இறைநம்பிக்கை நற்செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது.

நம் நாட்டில் இறைநம்பிக்கை மக்களிடையே மிகவும் ஆழமாகப் பதிய நம் நாட்டின் ’இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்’ என்ற முதல் தேசிய கோட்பாடே வழிவகுக்கின்றது. அதாவது, எந்தச் சமயமாக இருந்தாலும் அந்தந்த சமய வழிபாட்டிற்கு ஏற்ப தங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது நாட்டின் கோட்பாடாக அமைந்திருப்பது இறைநம்பிக்கையின் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றது.

இக்காதையில் வேறொரு சூழ்நிலையிலும் இறைவன் மீது கொண்ட பக்தி வெளிப்படுகிறது.

 

தீவ திலகை தன்னடி வணங்கி

மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக்

கோமகன் பீடிகை தொழுது வலங்கொண்டு 

 

இங்கு, மணிமேகலை தீவதிலகையிடமிருந்து விடைபெற்று தன் ஊருக்குச் செல்லும் முன், தீவதிலகையை வணங்கி புத்த பெருமானது பீடிகையை வலம் வந்து தொழுத பின்னே மீண்டும் வான் வழியே தன் ஊருக்குப் புறப்படுகிறாள்5 இங்கு மீண்டும் புத்தரை வழிபடுவது போல் இந்த காட்சி அமைகின்றது. இது, மணிமேகலை புத்தர் மீது கொண்டிருக்கும் இறைநம்பிக்கையை நமக்குப் படம் பிடித்து காட்டுகின்றது.

 

.5 வினைக் கோட்பாடு

இக்காதையில் மனித வாழ்வில் வினைக் கோட்பாட்டின் செயல்பாடு குறித்து கூறப்பட்டுள்ளது. இந்தியச் சமயங்கள்  யாவும் வினைக்கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவை. பௌத்த சமயமும் இதற்கு விதிவிலக்கன்று.

நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து

வித்தி நல்லறம் விளைந்த வதன்பயன்

துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து 6

 

இந்த வரிகளில்,  நாவலந்தீவு எனும் பெரிய தீவில் நல்லறத்தை மேற்கொண்டதால், அதன் விளைவாக செல்வத்தை அனுபவிப்பவர்கள் வீடுகளில் மக்கள் பிச்சை எடுக்கின்றனர்7 என்று சீத்தலை சாத்தனார் கூறியுள்ளார். அதாவது, நல்ல வினைகளைச் செய்தவர்களுக்கு வசதியான வாழ்க்கை கிட்டியுள்ளதை நாம் இங்கு காண இயலுகிறது.

வினைகள் இருவகைப்படும். அவை நல்வினைதீவினை என்பனவாகும். உயிர்கள் நல்வினைதீவினை என்னும் இருவினைப் பயனால் தத்தமக்குரிய பிறவி எடுத்துதம் வினைகள் பயனைத் தரும் காலத்தில் தாம் செய்த வினைக்கு ஏற்ப இன்பமும் துன்பமும் அடைகின்றன. அதாவது, பழம் பிறப்பில் நல்லறம் செய்தவர்கள் அதற்கு அடுத்த பிறவிகளிலும் அதன் பயனைத் தொடர்ந்து அனுபவிப்பர் எனவும், நாம் செய்த தீவினைகளும் நம்மை அடுத்தடுத்த பிறப்புகளில் துரத்தும் எனவும் இவ்வரிகளின் வழி அறிய முடிகிறது. நம் முன்னோர்கள் கூறிச் சென்ற ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்ற பழமொழி இக்காதையில் கூறப்பட்டுள்ள வினைக் கோட்பாட்டிற்கு நன்கு பொருந்தும். ஒருவன் எதை விதைக்கிறானோ அதுவே விளையும். அதே போல நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும்.

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அது நாம் செய்த வினையைப்பொறுத்தே அமையும். சுவற்றில் எறிந்த பந்து அதே போல் திரும்பி வந்தே தீரும். அதே போல், ஓவ்வொரு மனிதனும் இப்பூதவுடல் எய்தி உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினைப் பயன்கள் மட்டுமே.

 

.6மறுபிறப்புத் தத்துவம்

தாம் செய்த வினைகளுக்கு ஏற்ப உயிர்களுக்கு மறுபிறவி உண்டு8 என்ற கோட்பாட்டில் பௌத்த சமயத்திற்கு ஆழமான நம்பிக்கையுண்டு. அதாவது, நாம் நிச்சயமாக, முற்பிறப்பின் பலாபலன்களை அடுத்தடுத்த பிறப்புகளில் அடைவோம்  என்ற செய்தி இக்காதையில் இடம்பெற்றுள்ளது.

விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்

திட்டி விடமுணச் செல்லுயிர் போவுழி

உயிரோடு வேவே னுணர்வொழி காலத்து

வெயில்விளங் கமையத்து விளங்கித் தோன்றிய

சாது சக்கரன் றனையா னூட்டிய

காலம் போல்வதோர் கனாமயக் குற்றேன்

ஆங்கதன் பயனே ஆருயிர் மருந்தாய்

ஈங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது 9

 

மணிமேகலை முற்பிறப்பில் தன் கணவன் ராகுலன் அரவம் தீண்டி மாண்டு போக, அவனுடன் சேர்ந்து தானும் தீயில் குதித்து மாண்டாள். அத்தீயில் தம் உணர்வு அடங்கும் வேளையில் அவள் முன்னொரு சமயத்தில் சாதுசக்கரன் என்ற முனிவருக்கு உணவளித்தது அவளுக்குக் கனவு போல் தோன்றியது. அந்த நினைவுடனேயே மணிமேகலை மாண்டாள்.3

அதன் விளைவாகவேஇப்பிறப்பில் அமுதசுரபி எனும் பாத்திரம் அவள் கைக்கு வந்ததாக மணிமேகலை தீவதிலகையிடம் கூறுவது போல் இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன.3 அதே வேளையில், முற்பிறப்பில் செய்த தீவினையால் இப்பிறப்பில் துன்பப்படுவோரையும் இக்காதையில் சாத்தனார் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.

துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து

வயிறுகாய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி

வெயெலென முனியாது புயலென மடியாது

புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்

அறங்கடை நில்லா தயர்வோர் பலரால்

 

இந்த வரிகளின் வழி, முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனாக, மக்கள் கிழிந்த கந்தல் ஆடைகளை அணிந்து, கடும் பசியால் அதிக துன்பப்பட்டு, வெயில் என்று வெறுப்படையாமலும், மழை என்று ஓரிடத்தில் தங்காமலும் செல்வந்தர்கள் வீட்டு வாயிலில் பிச்சை எடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது அறிய வருகிறது.33

 

.7 வீடுபேறு அடைதலே நிலையான இன்பம்

உலக வாழ்வு நிலையற்றது.3 தெய்வ நிலைக்கு முன்னேறிய மனிதன், எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து வந்தானோஅந்தப் பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே முக்திஅதுவே மோட்சம்அதுவே வீடுபேறுஅதுவே ஆன்ம விடுதலைகர்ம கொள்கைப்படிஒருவன் செயலுக்கு ஏற்ப ஒரு  பலன் உண்டு. கர்மாவின் பலனை அது நல்லதோ, கெட்டதோ அழித்தால் தான் உயிர்வீடு பேற்றினை அடைய முடியும். முற்பிறப்பினை உணர்ந்தவர்களுக்குத்  தருமபதம் உரியது என்பது புத்த சமயக் கொள்கையாகும். இதனை இக்காப்பியம்,

தரும தலைவன் தலைமையின் உரைத்த

பெருமை சால் நல்லறம் பிறழா நேன்பினர்

கண்டு கைதொழுவோர் கண்ட தற்பின்னர்

பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி

உரிய துலகத் தொரு தலையாக5

 

என எடுத்துரைக்கின்றது. இவ்வகையில் புத்தசமயத்தின் தலையாய கொள்கையினை விளக்கம் செய்யவும் இம்முற்பிறப்புச் செய்தியினை ஆசிரியர் உத்தியாகக் கொள்கின்றார்.36

வாய்வ தாக மானிட யாக்கையில்

தீவினை அறுக்கும் செய்தவம்7

 

என்ற வரிகளின் வழி, ’மனித உடலால் செய்யப்படும் பாவங்களைப் போக்குவதற்காகக் கிடைக்கப்பெறும் தவம் கிட்ட’ என்று மணிமேகலை தன் தாயிடமும் செவிலித் தாயிடமும் கூறுகிறாள். இவ்வரிகளில், மனிதவுடலால் செய்யப்படும் பாவங்கள் முக்திக்குத் தடையாக அமையும் என்ற கருத்து புதைந்துள்ளது. அதாவது ஆன்மா இறைவனடி சேர உடலால் செய்யப்பட்ட பாவங்களை நீக்குவது அவசியமாகும். இவ்வாறு குற்றம் குறைகள் நீங்கிய மாசற்ற உடலின் ஆன்மா உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு எல்லையில்லா இன்பமான வீடு பேற்றை அடைகின்றது.

இதுவே பகவத் கீதையில்,

எதை நீ கொண்டுவந்தாய்அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய்வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
நாளை அது மற்றவருடையது ஆகிறது
மற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.

 

என்று கூறப்படுகின்றது. இவ்வுலகில் நமக்குச் சொந்தமானதென்று எதுவுமில்லை என்பதை இக்கீதைச் சாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இதிலிருந்து, ஓர் ஆன்மாவின் நிலையான இன்பம் அந்த ஆன்மா முக்தி அடைவதில் தான் உண்டு என்ற உண்மை புரிகிறது.

 

 

3. முடிவுரை :

சுருங்கக்கூறின், உலகிலேயே மிகவும் கொடுமையான ஒன்று பசிப்பிணி என்று கூறினால் அதை மறுப்பாரில்லை. மானிட வாழ்வின் மிகப் பெரிய நோய் பசி. இன்று வரை தீர்க்க இயலாத நோயும் இதுதான். ஔவையார் பசிப்பிணியின் கொடுமையை இப்படிச் சொல்கிறார்.

மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளான்மை - தேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திட பறந்து போகும்8 

                                                 

மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள பாத்திரம் பெற்ற காதையில், பசிப்பிணியின் கொடுமைகள் தெளிவாக விளக்கப்பட்டதோடு, அப்பிணியைப் போக்கும் செயல் மேன்மையானது என்றும் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. அதே வேளையில், இக்காதையில்  பல அறக்கருத்துகள் இன்றைய வாழ்க்கை முறையோடு நெருங்கிய தொடர்பு உள்ளதைக் காண இயலுகிறது. மணிமேகலை வெறும் காலத்தால் அழியாத காப்பியமாகத் திகழாமல், இக்காப்பியத்தில் போதிக்கப்பட்டுள்ள அறக்கருத்துகள் இன்றும் நாம் அனைவராலும் பின்பற்றக் கூடியதாகவே உள்ளன

 

சீவக சிந்தாமணி அறிமுகம்

 சீவக சிந்தாமணி

      சோழர்களுடைய ஆட்சிக் காலத்தில் இயற்றப்பெற்ற காப்பியம் சீவக சிந்தாமணி. இது கி.பி. ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது என்பர். சீவக சிந்தாமணிக்கு முன்னர் எழுந்த பெரிய நூல்கள் எல்லாம் வெண்பாவாலும் அகவலாலும் இயற்றப்பட்டன. ஆனால் முதன்முறையாக ~விருத்தம்என்ற ஒரு புதுச்செய்யுள் வகையில் எழுதப்பட்டது சீவக சிந்தாமணி. ~இது வரையிலும் பெரிய நூல்கள் எல்லாம் வெண்பாவாலும் அகவலாலும் இயற்றப்பட்டு வந்த தமிழிலக்கிய வரலாற்றில், கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில், ஒரு புதுமையைப் புகுத்தியவர் திருத்தக்கதேவர் என்னும் சைன முனிவர். அவர் சீவகன் என்ற அரசனுடைய வரலாற்றை ஒரு காப்பியமாகப் பாடியபோது, விருத்தம் என்ற புதுச் செய்யுள் வகையைப் பயன்படுத்தினார்.      மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டுகள் கொண்ட ஒரு பெருங்காப்பியத்தை அந்தப் புதிய செய்யுள் வகையிலேயே முழுதும் பாடி முடித்தார்எனப் பேரா. மு. வரதராசனார் திருத்தக்க தேவரின் சிறப்பினை எடுத்துரைக்கின்றார். விருத்தம் என்பது நான்கு அடிகள் உடையது. முதல் அடியில் எத்தனை சீர்கள் வருமோ அத்தனை சீர்களே பிற மூன்று அடிகளிலும் வரும். முதல் அடியில் அமைந்த சீர்களின் அமைப்பே அடுத்த அடிகளிலும் அதே முறையில் வரும். அதனால் முதலடியின் ஓசையே பிற மூன்று அடிகளிலும் திரும்பத் திரும்ப ஒலிக்கும். ஓர் அடிக்கு இத்தனை சீர்கள் வரவேண்டும், இன்ன அளவான சீர்கள் வரவேண்டும் என்ற வரையறை இல்லாமையால், விருத்தம் பலவகையாக விரிவு அடைந்தது. ஒரு விருத்தத்தின் அடிகள் நீண்டு வரலாம்மற்றொரு விருத்தத்தின் அடிகள் குறுகி வரலாம். சிறு சிறு சீர்கள் கொண்ட ஒரு விருத்தம் பரபரப்பாகவோ, துடிதுடிப்பாகவோ ஒலிக்கலாம். நீண்ட சீர்கள் கொண்ட மற்றொரு விருத்தம் ஆழமுடையதாகவோ, அமைதியுடையதாகவோ, உணர்ச்சி நீண்டதாகவோஒலிக்கலாம். ஆகவே, விருத்தம் என்ற பெயர் கொண்ட இது, ஒரு செய்யுள் வகையாக இருந்தாலும் நூற்றுக்கணக்கான ஓசைவேறுபாடுகளைப் படைத்துக்காட்ட இடம் தந்தது. தமிழ்க்கவிதையில் ஏற்பட்ட இந்தப் புரட்சியால் உணர்ச்சிக்கு ஏற்றவாறு கவிதையின்நடையை மாற்றியமைக்கும் வடிவச் சிறப்பு மேலும் வளர்ந்து பெருகத் தொடங்கியது. பிற்காலத்தில் கம்பர் இதில் பெரும் வெற்றிபெற்றார். சேக்கிழார், கச்சியப்பர் ஆகியோரும் இந்த யாப்பைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.      வடமொழியிலுள்ள ஷத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஸ்ரீபுராணம் ஆகிய நூல்களில் உள்ள கதையைத் தழுவிச் சீவக சிந்தாமணி எழுதப்பட்டது. சீவகசிந்தாமணி கூறும் சீவக மன்னனது வரலாறு, வடநாட்டுச் சார்பு உடையது. எனினும் தமிழகத்துச் சமூகத்தைப்பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இந்த நூல் பிற்கால இலக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமைந்தது என்பர். கம்பர், இக்காப்பியத்திலிருந்து, ~ஓர் அகப்பையைமுகந்து கொண்டார்என்று கூறும் மரபு உண்டு. நாடு நகரம் முதலியவற்றை வருணிக்கும் முறையிலும், ஐந்திணையாகப் பகுக்கப்படும்நிலங்களின் இயற்கை அழகுகளை விளக்கும் முறையிலும், இசை முதலிய கலைகளை விளக்கும் முறையிலும், சீவக சிந்தாமணி, காப்பிய அமைப்பின் முன்னோடியாகச் சிறப்புற்றுத் திகழ்கிறது. காதல் சுவை மிகுந்திருந்தாலும், எண்வகைச் சுவையும்இக்காப்பியத்தில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் சிறந்த உரை ஒன்று எழுதியுள்ளார்.

 பெயர்க் காரணம்

     ~சிந்தாமணிஎன்பது தேவர் உலகத்து மணிகளுள் ஒன்று. வேண்டியோர்க்கு வேண்டியதை வழங்கும் தன்மையுடையது. சிந்தாமணிக் காப்பியமும் கற்போர்க்கு வேண்டியதை வழங்கும் சிறப்புடையது. சீவகனின் தாயார் முதன் முதலில் தன் மகன் சீவகனுக்கு இட்டபெயர் சிந்தாமணி. ~சீவஎன்பது பின்னர் ~அசரீரி|யாக ஒலித்ததால் சீவகசிந்தாமணி என்று பெயர் பெற்றது என்பர்.

 நூலின் அமைப்பு

      இந்நூல் 13 இலம்பகங்களையும் (இலம்பகம் - காண்டம் என்பது போன்ற பகுப்பு), 3145 செய்யுட்களையும் உடையது. நாமகள்இலம்பகம் (379), கோவிந்தையார் இலம்பகம் (84), காந்தருவ தத்தையார் இலம்பகம் (358), குணமாலையார் இலம்பகம் (315), பதுமையார் இலம்பகம் (246), கேமசரியார் இலம்பகம் (145) , கனகமாலையார் இலம்பகம் (339) , விமலையார் இலம்பகம் (106), சுரமஞ்சரியார் இலம்பகம் (107), மண்மகள் இலம்பகம் (225), பூமகள் இலம்பகம் (51), இலக்கணையார் இலம்பகம் (221) , முக்திஇலம்பகம் (547) என்பன 13 இலம்பகங்கள். சீவகசிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர். இவர் சோழர் குலத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் உரை குறிப்பிடுகின்றது. இவர், தமிழிலும் வடமொழியிலும் புலமை உடையவர். இளமையிலேயே சமண சமயத்தைத் தழுவித் துறவுபூண்டவர்.

 திருத்தக்க தேவர் சான்றோர்களுடன் தொடர்புகொள்ளக் கருதி, மதுரைக்குச் சென்று, அங்கு சங்கப் புலவர்களோடு கூடி அளவளாவிஇருந்தபோது அங்கிருந்த தமிழ்ப் புலவர்களில் சிலர், ஆருகத சமயத்தைச் சார்ந்தவர்கள் துறவு முதலியவற்றையே பாடுவார்களே யன்றிக்காமச் சுவைபடக் காப்பியம் பாட இயலாதவர் என்று கூறினர் என்றும் இதைக் கேட்ட திருத்தக்க தேவர், காமச் சுவையுடன்சிந்தாமணியை இயற்றினார் என்றும் ஒரு கதை நிலவுகிறது. காப்பியம் செய்யக் கருதிய திருத்தக்க தேவர்தம் கருத்தினைத் தம் ஆசிரியருக்குக் கூற, அதற்கு அவர்திருத்தக்க தேவரின் புலமையைஅறிய, அப்பொழுது அங்கே ஓடிய ஒரு நரியைச் சுட்டிக் காட்டி, ~நீங்கள் காவியம் பாடுமுன்னர், இந்த நரியைப் பொருளாக வைத்துஒரு நூல்இயற்றிக் காட்டுகஎன்று கட்டளை இட்டார் என்றும், உடனே தேவரும் ஒரு சிறு நூல் பாடி அதற்கு ~நரிவிருத்தம்என்றுபெயரிட்டுத் தம் ஆசிரியருக்குக் காட்டினார் என்றும் குறிப்பிடுவர். அது நரியின் செயலைக் கொண்டு நீதியை வற்புறுத்தும் நூல். நூலின்சிறப்பினை அறிந்த ஆசிரியர், ~இனி நீயிர் நினைத்தபடியே பெருங்காப்பியம் செய்கஎன்று பணிக்க அப்பணியைத் தலைமேற்கொண்டு அக்காப்பியத்திற்குக் கடவுள் வாழ்த்துப் பாடி வழங்குமாறு வேண்டினார் என்றும், ஆசிரியரும் ~செம்பொன் வரைமேற்பசும்பொன்என்று தொடங்கும் பாட்டைப் பாடிக் கொடுத்தார் என்றும், பின்னர்த் திருத்தக்க தேவர், ~மூவர் முதலா உலகம்என்னும்கடவுள் வாழ்த்தைப் பாடிக் காப்பியத்தைத் தொடங்கினார் என்றும் குறிப்பிடுவர்

04. குணமாலையார் இலம்பகம்

878 சுண்ணம் தோற்றனம் தீம் புனல் ஆடலம்
எண் இல் கோடி பொன் ஈதும் வென்றாற்கு என
வண்ண வார் குழல் ஏழையர் தம்முளே
கண் அற்றார் கமழ் சுண்ணத்தின் என்பவே

879 மல்லிகை மாலை மணம் கமழ் வார் குழல்
கொல் இயல் வேல் நெடும் கண்ணியர் கூடி
சொல் இசை மேம்படு சுண்ண உறழ்ச்சியுள்
வெல்வது சூது என வேண்டி விடுத்தார்

880 இட்டிடையார் இரு மங்கையர் ஏந்து பொன்
தட்டு-இடை அம் துகில் மூடி அதன் பினர்
நெட்டு-இடை நீந்துபு சென்றனர் தாமரை
மொட்டு அன மெல் முலை மொய் குழலாரே

881 சீர் தங்கு செம்பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து
வார் தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர்
ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர்
கார் தங்கு வண் கை கழல் சீவகன் காண்-மின் என்றார்

882வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர்
தாள் மின்னு வீங்கு கழலான்-தனை சூழ மற்ற
பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில்
கோள் மின்னும் மீன் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே

883காளை சீவகன் கட்டியங்காரனை
தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல்
வாளை வவ்விய கண்ணியர் வார் கழல்
தாளை ஏத்துபு தம் குறை செப்பினார்

884சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு
அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும்
கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல்
வண்ண மாலையினீர் என கூறினான்

885மற்று மாநகர் மாந்தர்கள் யாவரும்
உற்று நாறியும் கண்டும் உணர்ந்து இவை
பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி
கற்றதும் அவர் தங்களொடே-கொலோ

886ஐயனே அறியும் என வந்தனம்
பொய் அது அன்றி புலமை நுணுக்கி நீ
நொய்தில் தேர்ந்து உரை நூல் கடல் என்று தம்
கையினால் தொழுதார் கமழ் கோதையார்

887நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது
அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல்
புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம்
அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே

888வாரம் பட்டுழி தீயவும் நல்ல ஆம்
தீர காய்ந்துழி நல்லவும் தீய ஆம்
ஓரும் வையத்து இயற்கை அன்றோ எனா
வீர வேல் நெடுங்கண்ணி விளம்பினாள்

889உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால்
வள்ளல் நீங்க பெறாய் வளைத்தேன் என
கள் செய் கோதையினாய் கரி போக்கினால்
தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான்

890கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும்
எண்ணின் நின் சொல் இகந்து அறிவார் இலை
நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா
அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள்

891காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி
போவர் பொன் அனையாய் என கைதொழுது
ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள்
கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள்

892மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று
எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்
வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது
உண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள்

893சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும்
மாலை என்னும் மட மயில் சுண்ணமும்
சால நல்லன தம்முளும் மிக்கன
கோலம் ஆக கொண்டு உண்-மின் என சொன்னான்

894வண்ண வார் சிலை வள்ளல் கொண்டு ஆயிடை
விண்ணில் தூவி இட்டான் வந்து வீழ்ந்தன
சுண்ண மங்கை சுரமைய மாலைய
வண்ணம் வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே

895தத்தும் நீர் பவளத்து உறை நித்திலம்
வைத்த போல் முறுவல் துவர் வாயினீர்
ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு
உய்த்து உரை-மின் இவ்வண்ணம் என சொன்னான்

 

சீவகசிந்தாமணியின் ஆசிpயார் யார்? 2. சீவகசிந்தாமணி எந்த சமயத்தைச் சாரந்தது? 3. சீவகசிந்தாமணி எத்தனை இலம்பகங்களைக் கொண்டது? 4. சீவகசிந்தாமணியில் எத்தனை செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன? 5. சீவகசிந்தாமணியின் தலைமைக்கதாபத்திரம் யார்? 6. சீவகனின் தாய் பெயார் என்ன? 7. சீவகனின் தந்தை பெயார் என்ன? 8. சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்படும் நாடு எது? 9. சீவகசிந்தாமணியில் சீவகன் மணந்த எட்டு மகளிரின் பெயர்களை எழுதுக. 10. சீவகனின் நண்பர்கள் பெயர் களை எழுதுக. 11. சீவகனின் வளார்ப்பு தாய் தந்தையின் பெயார்களை எழுதுக. 12. சீவகனை மணப்பதற்காகத் தவம் புரிந்தவள் யார்? 13. சீவகன் பிறந்த இடம் எது? 14. அரசி விசயை எதன் மூலம் அரண்மனை விட்டு வெளியேறினாள்? 15. குணமாலையின் பெற்றோர் பெயர் என்ன?

குறுவினாக்கள்

1. சீவகசிந்தாமணி நூற்குறிப்பு எழுதுக. 2.

சீவகசிந்தாமணியில் குணமாலையார் இலம்பகத்தின் கதைச்சுருக்கத்தினை எழுதுக.

3. சீவகனின் நண்பா;கள் குறித்து எழுதுக.

4. சீவகன் மீது கட்டியங்காரன் மேற்கொண்ட செயல்களை எழுதுக.

5. சீவகன் பிறப்பின் ரகசியத்தை திருத்தக்கத்தேவா; எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்?

 நெடுவினா

 1. குணமாலையார் இலம்பகத்தில் திருத்தக்கத்தேவா; கூறியுள்ள கதை நிகழ்வுகளை எழுதுக.

2. குணமாலையார் இலம்பகத்தில் உவமைச்சிறப்புகளை எழுதுக.

3. ஏமாங்கத நாட்டின் இயற்கை வளங்கள் குறித்து திருத்தக்கத்தேவா; கூறியுள்ளவற்றைஎழுதுக.

 

UNIT 2  அலகு – 2

பெரிய புராணம்

செயற்கு அரிய செய்வர் பெரியர் என்னும் குறள் வரிக்கேற்ப அறுபத்து மூன்று நாயன்மார்கள் புரிந்த இறைப் பக்தியையும், தொண்டு நெறியையும் வரலாற்று முறையில் கூறும் நூலே பெரிய புராணம் (பெரியர் புராணம்) ஆகும். இந்நூல் பல்வேறு நாடு, ஊர், சாதி, தொழில் கொண்ட நாயன்மார்களுடைய வாழ்க்கையை விவரிக்கிறது. அக்காலச் சமுதாய வரலாற்றையும் எளிய, இனிய நடையில் எடுத்து சொல்கிறது. தில்லை அம்பலத்தே ஆடும் சிவபெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கச் சேக்கிழார், பக்தி வளமும், இறையருட் திறமும் குறைவிலாது சிறக்குமாறு இலக்கியப் பெருங்களஞ்சியமாக, பெரிய புராணத்தை இயற்றி அருளினார்.

காப்பிய அமைப்பு

பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும், 63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது. இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது. 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும். சுந்தரரின் சிறப்பு, அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருட்திறம், குரு (ஆசிரியன்), இலிங்கம் (இறைவன் திருமேனி), சங்கமம் (அடியார்) ஆகிய முறைகளில் சிவனை வழிபட்ட நிலைகள், தொண்டின் திறம், சாதி, மத, இன வேறுபாடில்லாமல் அடியார் நோக்கில் கண்டு வழிபட்டு முத்தி பெற்ற தன்மைகள், சிவன் அடியார்களை ஆட்கொண்ட விதம் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. அடியார்களின் வரலாறும். அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறியும், இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதமும் இந்நூல் முழுதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார், திருத்தொண்டர் மாக்கதை என்று பெயரிட்டார். செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் (பெரியார்களின்) சிறப்பினை உரைப்பதால் இதனைச் சான்றோர்கள் பெரியர் புராணம் என்று கூற காலப் போக்கில் பெரிய புராணம் என்று வழங்கப்பட்டது.

காப்பிய நோக்கம்

கி.பி.11, 12-ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆட்சி செய்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழனாவான் (அநபாய சோழன்). அம்மன்னனின் அவையில் முதல் அமைச்சராகப் பணி புரிந்தவர் சேக்கிழார். சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவனடியார்களின் உயர்ந்த வாழ்க்கையைக் கதைப் பின்னலாகக் கொண்டு பெரிய புராணத்தைப் பாடினார் சேக்கிழார். சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு பெரிய புராணத்தைச் சார்பு நூலாகப் படைத்தார் சேக்கிழார். சிவனை முதன்மைப்படுத்தி வழிபடும் சமயமாகிய சைவத்தையும், அடியார்களது வரலாறு, தொண்டு நிறைந்த வாழ்வு, முத்தி பெற்ற நிலை ஆகியவற்றையும் விரிவாகவும் தெளிவாகவும் புலப்படுத்துவதே பெரிய புராணத்தின் நோக்கம் ஆகும்.

காப்பியச் சிறப்பு

அறுபத்து மூன்று நாயன்மார்களின் புகழ் மிக்க வரலாற்றினை உலகறிய, பக்திச் சுவையோடு விரிவாக எழுதிய பெருமைக்கு உரியவர் சேக்கிழார் ஆவார். அவர் சோழ நாட்டு அமைச்சராக இருந்தமையால் நாட்டின் பல பகுதிகளுக்கும், நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கும் நேரில் சென்று, அவ்விடத்தில் செவிவழி மரபாக வழங்கும் வரலாற்றுச் செய்திகளையும் தொகுத்து இந்நூலை அமைத்தார் என்பர். பிற மொழிக் கதைகளைத் தழுவாமல், தமிழ் மக்களையும், தமிழகச் சூழலையும் மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களைப் போலவே பெரியபுராணம் என்னும் நூல் சிறப்புற்றுத் திகழ்கின்றது. ஆண் பெண் வேறுபாடின்றிப் பல இனங்களையும், தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களைப் பற்றிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலைத் தேசிய இலக்கியம் என்று சான்றோர்கள் பாராட்டுவர்.

நூலாசிரியர்

சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்தவர் அருண்மொழித் தேவர். இப்பெயரே அவருக்குப் பெற்றோர் இட்டு வழங்கியதாகும். சேக்கிழார் என்பது இவரது குடிப்பெயராகும். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால், இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதலமைச்சராகப் பணிபுரிந்தார். அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று, அடியார்களின் பெருமையை வரலாறாக எழுதினார். இந்நூலின் பெருமையை உணர்ந்த மன்னன், அவரைப் பட்டத்து யானையின் மீதேற்றி நகர்வலம் செய்து உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் தந்து சிறப்பித்தான். இவருடைய காலம் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். சிவத் தொண்டர்களின் வரலாற்றைச் சிறப்பித்த காரணத்தால் இவருக்குத் தொண்டர் சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. கல்வெட்டுகள் இவரை மாதேவடிகள் என்றும், இராமதேவர் என்றும் சிறப்பிக்கின்றன. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று இவரைப் பாராட்டுகின்றார்.

கண்ணப்ப நாயனார் புராணம்

பெரிய புராணம் என்னும் காப்பியத்துள் 63 நாயன்மார்கள் வரலாற்றில் கண்ணப்பநாயனார் வரலாறு இலைமலிந்த சருக்கத்தில் 10-ஆவது புராணமாக (காதையாக) இடம் பெற்றுள்ளது. இந்நாயனார் வரலாற்றைச் சேக்கிழார், 186 விருத்தப் பாக்களினால் பாடியுள்ளார். திண்ணனார் சிவலிங்கத் திருவுருவத்தின் கண்ணிலிருந்து இரத்தம் கசிந்ததைக் கண்டு, தன் கண்ணைத் தோண்டி அப்ப இறைவனால் கண்ணப்பன் என்று அழைக்கப்பட்ட செய்தியினை இக்கதை விளக்குகின்றது. இக்கதை நிகழ்ந்த இடம் இன்று காளத்தி என வழங்கும் திருக்காளத்தி மலையாகும் (பொத்தப்பி நாடு).

சுந்தரமூர்த்தி சுவாமிகளால் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்றும், பட்டினத்தாரால் நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என்றும், திருநாவுக்கரசரால் திண்ணன், கண்ணப்பன், வேடன் என்றும் பலவாறாகச் சான்றோர்கள் பலரால் கண்ணப்பர் பாராட்டப்படுகிறார்.

கதைச் சுருக்கம்

பொத்தப்பி என்னும் நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் நாகன் என்பவன் வேடர்குலத் தலைவனாக இருந்து மக்களைக் காத்து வருபவன். தத்தை, அவன் மனைவியாவாள். நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறில்லாமல் இருக்கவே, முருகனை வேண்டி விழா எடுத்தனர். அவர்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட முருகன் அருள் புரிந்தான். அவர்களுக்கு அழகான வலிமை மிக்க ஆண்குழந்தை பிறந்தது. நாகன் அக்குழந்தையைத் தன் கைகளால் தூக்கும்போது திண் என்று இருந்தமையால் திண்ணன் என்று பெயரிட்டான். திண்ணன் வளர்ந்து குல மரபிற்கேற்ப வில், அம்பு, ஈட்டி, வாள் முதலான போர்ப் பயிற்சிகளைக் கற்றுச் சிறப்படைந்தான். நாகன் முதுமை காரணமாகத் தன் பதவியினைத் தன் மகனாகிய திண்ணனிடம் தந்து நாடாளும்படி பட்டம் சூட்டினான். இதனைக் கண்டு, தேவராட்டியும் வந்து, நலம் சிறக்க என வாழ்த்திச் சென்றாள். ஒரு நாள் திண்ணன் நாணன், காடன் ஆகிய நண்பர்களோடு வேட்டையாடச் சென்றார்.

வேட்டைக்காக விரித்த வலைகளை அறுத்துக்கொண்டு ஒரு பன்றி மட்டும் ஓடியது. விடாது துரத்திச் சென்று, புதருள் மறைந்த அந்தப்பன்றியைத் திண்ணன் தம் குறுவாளால் வெட்டி வீழ்த்தினார். இதனைக் கண்ட நண்பர்கள் வியந்து, திண்ணனின் வலிமையைப் பாராட்டினார்கள். அருகே ஓடும் பொன்முகலி ஆற்றையும் வானாளாவ நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார் திண்ணன். இதனைக் கண்ணுற்ற நாணன். இம் மலையின் மீது குடுமித் தேவர் இருக்கிறார். அவரைக் கும்பிடலாம் வா என்றான். மலை ஏறும்போது திண்ணனுக்கு மட்டும் புதுவிதமான இன்பமும் உணர்வும் ஏற்பட்டன.

குடுமித் தேவருக்கு, சிவ கோசரியார் என்பவர் ஆகம விதிமுறைப்படி பூசை செய்வதனை நாணன் மூலம் அறிந்தார். மலையேறிய திண்ணன், குடுமித் தேவரைக் கண்டவுடன் அவரை வணங்கியும், கட்டித் தழுவியும் ஆடினார்; பாடினார். நண்பன் காடன் ஆற்றங்கரையில் தீயில் இட்டுப் பக்குவப்படுத்திய இறைச்சியைத் தன்னுடைய ஒரு கையில் எடுத்துக் கொண்டார், மறு கையில் வில் இருந்ததால் வாய் நிறைய ஆற்று நீரையும், அருகில் இருந்த மரத்தின் மலர்களைத் தலையில் செருகியும் கொண்டு வந்தார். குடுமித் தேவருக்குத் திருமஞ்சனமாகத் தன் வாய் நீரையும், அமுதமாகப் பன்றி இறைச்சியினையும் தலையில் சூடிய மலரை வழிபாட்டு மலராகவும் இட்டு மகிழ்ந்தார் திண்ணனார். பின் இரவு முழுவதும் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலையில் குடுமித் தேவருக்குத் திருவமுது தேடி வரப் புறப்பட்டார்.

வழக்கம் போல, பூசை புரிய வந்த சிவ கோசரியார் இறைவன் மீதிருந்த இறைச்சி முதலானவற்றைக் கண்டு வருந்தினார், புலம்பினார். பின் அவற்றை நீக்கித் தூய்மை செய்து பூசனை புரிந்து சென்றார். அடுத்து, திண்ணனாரும் வந்து இறைச்சி முதலானவற்றை வைத்து வழிபட்டார். மறுநாளும் இறைச்சி முதலானவை இருப்பது கண்டு வருந்திச் சிவ கோசரியார் இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான் தோன்றித் திண்ணனாரின் அன்பு வழிபாட்டை நாளை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்று கூறி மறைந்தருளினார். ஆறாம் நாள் திருக்காளத்தி நாதர் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, வலக் கண்ணில் இருந்து உதிரம் பெருகும்படிச் செய்தார். அதனைக் கண்ட திண்ணனார், செய்வதறியாமல் திகைத்தார். பின் தம் கைகளால் துடைத்தாலும் பச்சிலை இட்டாலும் நிற்கவில்லையே என வருந்தி நின்றபோது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது.

உடனே தம் வலக்கண்ணை அம்பினால் அகழ்ந்து எடுத்து அப்பினார். உதிரம் நின்றுவிட்டது. இதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகும்படிச் செய்தார். தம் இடக்கண்ணையும் பெயர்த்து எடுத்து அப்பினால் உதிரம் நின்றுவிடும் என்று உணர்ந்தார். தம் மறு கண்ணையும் பெயர்த்துவிட்டால் இறைவனின் இடக்கண்ணைச் சரியாகக் கண்டறிய முடியாது என்பதால், அடையாளத்துக்காகத் தம் காலின் பெருவிரலை இறைவனின் உதிரம் பெருக்கும் கண் மீது ஊன்றிக் கொண்டார். அம்பினால் தம் இடக்கண்ணைப் பெயர்க்கத் தொடங்கினார். உடனே காளத்தி நாதர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவன் அருளில் மூழ்கித் திளைத்தார். அன்று முதல் இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.

குறிப்பு :

பொத்தப்பி நாடு : ஆந்திர மாநிலத்தின் இப்போதைய கடப்பை மாவட்டத்தில் புல்லம் பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.

உடுப்பூர் : இவ்வூர் குண்டக்கல் -அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டைக்கு அருகில் உள்ளது. உடுக்கூர் என இன்று வழங்கப்படுகிறது.

கதைமாந்தர்

கண்ணப்ப நாயனார் வரலாற்றில் இடம்பெறும் கதை மாந்தர்கள். நாகன், தத்தை, திண்ணன், நாணன், காடன், வேடுவர்கள், தேவராட்டி, குடுமித் தேவர், சிவ கோசரியார்.

இடம் பெறும் நிகழ்ச்சிகள்

நாயனாரின் வாழ்க்கையையும் அதில் ஏற்பட்ட மாற்றத்தையும் விரிவாகக் காணலாம்.

திண்ணனார்

பொத்தப்பி எனும் மலைநாட்டில் உள்ள உடுப்பூர் என்னும் ஊரினை வேடர் குலத் தலைவன் நாகன் என்பான் ஆட்சி செய்து வந்தான். அவன் மனைவி தத்தையாவாள். அவர்களுக்கு நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறு இல்லாமல் இருக்கவே, முருகனுக்கு விழா எடுத்தனர். அம்முருகனின் அருளால் பிறந்தவனே திண்ணன். திண் என்று இருந்த காரணத்தால் தன் மகனுக்குத் தந்தையாகிய நாகன் திண்ணன் என்று பெயரிட்டான். வேடுவர் குல மரபிற்கு ஏற்ப வில், வேல், ஈட்டி, முதலான ஆயுதங்களைக் கற்றுத் தேர்ந்து கையில் ஏந்தியவன், திண்ணன், அவன் கரிய நிறமுடையவன். உரத்த குரலுடையவன். தலை மயிரைத் தூக்கிக் கட்டியவன். தலையிலே மயிற்பீலி அணிந்தவன். சங்கு மணிகளும், பன்றிக் கொம்புகளும் கோத்த மாலையும், புலித் தோலினால் செய்யப்பட்ட தட்டை வடிவமான வெற்றி மாலையினையும் மார்பிலே அணிந்தவன். இடையிலே புலித் தோல் ஆடையணிந்தவன், குறுவாளையும் வைத்திருப்பவன். கால்களில் வீரக் கழல் பூண்டு, தோல் செருப்பு அணிந்தவன். வேட்டையாடுவதற்கு நாயினைத் துணையாகக் கொண்டவன்.

குடுமித் தேவரைக் காணல்

தந்தை நாகனுக்கு வயது முதிர்ந்தது. அதனால் நாட்டுக்கு இடையூறு விளைவிக்கும் விலங்குகளை வேட்டையாட வேண்டி, தன் மகனை வேடர் தலைவனாக்கினான் நாகன். இதனைக் கண்ட தேவராட்டியும் நலம் சிறக்க எனக் கூறித் திண்ணனாரைப் பாராட்டி வாழ்த்திச் சென்றாள். ஒருநாள் நாணன், காடன் என்னும் இரு நண்பர்களோடு வேட்டைக்குச் சென்றார் திண்ணனார். காட்டில் திரிந்த வலிய பன்றியைத் தம் குறுவாளால் வீழ்த்தினார். அருகில் ஓடும் பொன்முகலி ஆற்றினையும் வானளாவி நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார். நண்பர்கள், "இம்மலையில், குடுமித் தேவர் இருக்கிறார். அவரைக் கும்பிடலாம் வாஎன்றார்கள். திண்ணனாருக்கு மலையேறும் போதே புதுவிதமான இன்பமும், உணர்வும் உண்டாயின.

வழிபடல்

மலையேறிய திண்ணனார் பேருவகை கொண்டு ஓடிச் சென்று, காளத்தி நாதரைக் கட்டித் தழுவினார். ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். மேலும் கன்றை ஈன்ற பசுவைப் போலப் பிரிய மனமின்றிச் சுழன்று சுழன்று இறைவனிடமே நின்றார். பின்பு பொன் முகலியாற்றங் கரையினருகில் காடன், தீயில் இட்டு பக்குவப்படுத்திய பன்றி இறைச்சியினைத் தம் வாயினால், சுவையும் பதமும் பார்த்துப் பின் ஒருகையில் அதனை எடுத்துக்கொண்டு, மற்றொரு கையில் வில்லம்பு ஏந்தினார். இறைவனது திருமஞ்சனத்திற்காகப் பொன்முகலியாற்று நீரை வாயில் நிறைத்துக்கொண்டு, பூசனைக்காகப் பூங்கொத்துகளைத் தம் தலையில் செருகிக் கொண்டு, மலையுச்சிக்கு வந்தார். குடுமித் தேவரின் மேல் இருந்த சருகுகளைச் செருப்பணிந்த தம் பாதங்களால் விருப்பமுடன் தள்ளினார். தம் வாயிலிருந்த நீரால் திருமஞ்சனம் செய்தார். தம் தலையில் இருந்த மலர்களைத் திருமுடி மீது சார்த்தி, பன்றி இறைச்சியினைத் திருவமுதாகப் படைத்து மகிழ்ந்தார். குடுமித் தேவருக்கு இரவில் துணை யாருமில்லை என்று எண்ணி, இரவு முழுவதும் அவரே கையில் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலை புலர்ந்தது. திண்ணனார், காளத்தி நாதருக்குத் திருவமுது தேடிவரப் புறப்பட்டார்.

சிவபிரானின் அருள் வாக்குப் பெறல்

திண்ணனார் சென்றவுடன் வழக்கம் போல் சிவ கோசரியார் பூசை செய்ய வந்தார். மேலுள்ள இறைச்சி முதலானவற்றை நீக்கி ஆகம முறைப்படி பூசை செய்துவிட்டுச் சென்றார். திண்ணனார் முன் போலவே வேட்டையாடி விலங்குகளைத் தீயில் சுட்டு அமுதாக்கிப் படைத்திட வந்தார். தொடர்ந்து, சிவ கோசரியார் வழிபட்டுச் சென்றவுடன், திண்ணனார் வந்து அவற்றை நீக்கி வழிபடுவதும் தொடர்ந்தது. தினமும் சிவன் திருமேனி மீது இறைச்சி இருப்பது கண்டு சிவ கோசரியார் வருந்தினார். மனம் கசிந்து இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான், நீ கூறும் மறைமொழிகள் அவன் அன்பு மொழிகளுக்கு ஈடாகாது, நீ வேள்வியில் தரும் அவியுணவைக் காட்டிலும் அவன் தரும் ஊனமுது இனியது என்றும் இந்நிகழ்ச்சியினை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்றும் கூறினார்.

அவனுடைய வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்புஎன்றும் அவனுடைய அறிவுஎல்லாம் நமை அறியும் அறிவு என்றும் அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனிய வாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறிநீஎன்று அருள்செய்தார்.

(பெரி: .பு.:157)

என்றும் திண்ணனாரின் பக்திச் சிறப்பைச் சிவபிரான் கூறினார்.

கண்ணப்பன் ஆதல்

ஆறாம் நாள், திருக்காளத்திப் பெருமான் திண்ணனார் தம் மீது கொண்டுள்ள அன்பின் பெருமையைக் காட்ட, தமது வலக்கண்ணில் இருந்து உதிரம் பெருகச் செய்தார். இதனைக் கண்ட திண்ணனார் தாம் செய்வதறியாமல் திகைத்தார். பூசைக்காகக் கொண்டு வந்த பொருள்கள் சிதறின. தம் கையால் இரத்தம் கசிவதைத் துடைத்தாலும் நிற்கவில்லை. உடனே பச்சிலைகளைத் தேடிக் கொண்டுவந்து தடுத்துப் பார்த்தார். நிற்கவில்லை. இந்த நிலையில் திண்ணனார் அடைந்த துயரத்தையும், தவிப்புகளையும் சேக்கிழார் உணர்ச்சி மிக்க கவிதையாய் வடித்திருக்கிறார்.

பாவியேன் கண்ட வண்ணம்
பரமனார்க்கு அடுத்தது என்னோ
ஆவியின் இனிய எங்கள்
அத்தனார்க்கு அடுத்தது என்னோ
மேவினார் பிரிய மாட்டா
விமலனார்க்கு அடுத்தது என்னோ
ஆவது ஒன்று அறிகி லேன்யான்
என்செய்வேன் என்று பின்னும்...

(.புராணம் :174)

(பரமனார், அத்தனார், விமலனார் = சிவபிரானின் சிறப்புப் பெயர்கள்; மேவினார் பிரிய மாட்டா= சேர்ந்தவர்கள் பிரிய இயலாத பேரன்பு கொண்ட)

இனி என்ன செய்வது என்று சிந்தித்து நின்றார். அப்பொழுது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. உடனே அம்பினால் தமது வலக்கண்ணை அகழ்ந்தெடுத்து, ஐயன் திருக்கண்ணில் அப்பினார். இரத்தம் நின்றுவிட்டது. இதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். அடுத்து, சிவபிரான் தமது இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார். அதைக் கண்ட திண்ணனார், 'இதற்கு யான் அஞ்சேன், முன்பே மருந்து கண்டுபிடித்துள்ளேன். அதனை இப்பொழுதும் பயன்படுத்துவேன். எனது இன்னொரு கண்ணையும் அகழ்ந்தெடுத்து அப்பி ஐயன் நோயைத் தீர்ப்பேன்' என்று எண்ணினார். அடையாளத்தின் பொருட்டு, காளத்தி நாதர் திருக்கண்ணில் தமது இடக்காலை ஊன்றிக் கொண்டு, மனம் நிறைந்த விருப்புடன் தமது இடது கண்ணைத் தோண்டுவதற்கென அம்பை ஊன்றினார். குடுமித் தேவர் நில்லு கண்ணப்ப! என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார். மேலும், என்றும் என் வலப்பக்கம் இருக்கக் கடவாய் என்று பேரருள் புரிந்தார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவனருளில் மூழ்கித் திளைத்தார். இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் அன்று முதல் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.


கண்ணப்ப நாயனார் புராணம்



650


மேலவர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு

3.3.1


651


இத் திரு நாடு தன்னில் இவர் திருப் பதியாதென்னில்
நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர்
மத்த வெம் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும்

3.3.2


652


குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யாத்த
வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்

3.3.3


653


வன் புலிக் குருளையோடும் வயக் கரி கன்றினோடும்
புன்றலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி
அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும்
இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்

3.3.4


654


வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்

3.3.5


655


ஆறலைத்து உண்ணும் வேடர் அயற் புலங் கவர்ந்து கொண்ட
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி
ஏறுடை வானம் தன்னில் இடிக் குரல் எழிலி யோடு
மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கை மாநிரைகள் எங்கும்

3.3.6


656


மைச் செறிந்தனைய மேனி வன் தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார்
பொச்சை யின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற்பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான்

3.3.7


657


பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான்
வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்

3.3.8


658


அரும் பெறல் மறவர் தாயத்தான்ற தொல் குடியில் வந்தாள்
இரும் புலி எயிற்றுத் தாலி இடை இடை மனவு கோத்துப்
பெரும் புறம் அலையப் பூண்டான் பீலியும் குழையும் தட்டச்
சுரும்புறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வான்

3.3.9


659


பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனிப் புதல்வர் பேறே
அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே
முருகலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று
பரவுதல் செய்து நாளும் பராய்க் கடன் நெறியில் நிற்பார்

3.3.10


660


வாரணச் சேவலோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை

3.3.11


661


பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு
எயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன
மயிலுடைக் கொற்ற ஊர்தி வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே

3.3.12


662


கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோ டும்
ஆன அத் திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலே
பான்மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது

3.3.13


663


கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும்
பொருப்பின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி
வரிச் சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும்
அரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த

3.3.14


664


அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயம்
பெரு விழா எடுத்து மிக்க பெருங்களி கூறும் காலைக்
கருவரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை
பொருவரைத் தோள்களாரப் புதல்வனை எடுத்துக் கொண்டான்

3.3.15


665


கருங் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி தானும்
இரும்புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி
அரும் பெறல் உலகமெல்லாம் அளப்பரும் பெருமை காட்டித்
தருங்குறி பலவும் சாற்றும் தன்மையிற் பொலிந்து தோன்ற

3.3.16


666


அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும்
திண்ணன் என்றியம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார்
புண்ணியப் பொருளாய் உள்ள பொருவில் சீர் உருவினானைக்
கண்ணினுக்கு அணியாத் தங்கள் கலன்பல அணிந்தார் அன்றே

3.3.17


667


வரையுறை கடவுட் காப்பு மறகுடி மரபில் தங்கள்
புரையில் தொல் முறைமைக்கு ஏற்பப் பொருந்துவ போற்றிச் செய்து
விரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த
அரை மணிக் கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில்

3.3.18


668


வருமுறைப் பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப்
பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க்கெல்லாம்
திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே
அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார்

3.3.19


669


ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடித் தளர்வு நீங்கிப்
பூண் திகழ் சிறு புன் குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்த
நாண்டரும் எயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பில் தூங்க

3.3.20


670


பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணிச் சதங்கை ஏங்க
காசொடு தொடுத்த காப்புக் கலன் புனை அரைஞாண் சேர்த்தித்
தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன
மாசறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில்

3.3.21


671


தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில்
உண்ணனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ் சொல்
வண்ண மென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார்

3.3.22


672


பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொற்கை நீட்டப்
பரிஉடைத் தந்தை கண்டு பைந்தழை கைக் கொண்டோ ச்ச
இரு சுடர்க் குறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி
வருதுளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி

3.3.23


673


துடிக் குறடு உருட்டி ஓடித் தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப்
பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல்
அடிச் சிறு தளிரால் சிந்தி அருகுறு சிறுவரோடும்
குடிச் செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து

3.3.24


674


அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின்
வனை தரு வடிவார் கண்ணி மறச் சிறு மைந்த ரோடும்
சினை மலர்க் காவுகள் ஆடி செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த
புனை மருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற் போகி

3.3.25


675


கடு முயல் பறழினோடுங் கான ஏனத்தின் குட்டி
கொடு வரிக் குருளை செந்நாய் கொடுஞ் செவிச் சாபம் ஆன
முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து
இடு மரத் திரளில் கட்டி வளப்பன எண்ணிலாத

3.3.26


676


அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக்
குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டு கண் துயிற்றிக் கங்குல்
புலர ஊன் உணவு நல்கிப் புரி விளையாட்டின் விட்டுச்
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார்

3.3.27


677


தந்தையும் மைந்தனாரை நோக்கித் தன் தடித்த தோளால்
சிந்தை உள் மகிழப் புல்லிச் சிலைத் தொழில் பயிற்ற வேண்டி
முந்தை அத் துறையில் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி
வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான்

3.3.28


678


வேடர் தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற
சேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று
ஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு
மாடுயர் மலைகள் ஆளும் மறக் குலத் தலைவர் எல்லாம்

3.3.29


679


மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்
கொலை புரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் தேனும்
தொலைவில் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்றச்
சிலை பயில் வேடர் கொண்டு திசை தொறும் நெருங்க வந்தார்

3.3.30


680


.
மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தா எங்கும்
பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க் கடன் பலவும் செய்து
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன்

3.3.31


681


பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த
தேனலர் கொன்றையார் தம் திருச்சிலைச் செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும்
கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினைக் காப்புச் செய்தார்

3.3.32


682


சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்த
நலமிகு காப்பு நன்னாண் நாகனார் பயந்த நாகர்
குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள்

3.3.33


683


ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புற்பாற் சொன்றி
மெய் வரைத் தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும்
கைவினை எயினர் ஆக்கிக் கலந்த ஊன் கிழங்கு துன்றச்
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர்

3.3.34


684


செம் தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து
வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு
அந்தமில் உணவின் மேலோர் ஆயினர் அளவிலார்கள்

3.3.35


685


அயல் வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார்
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம்
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவில் பல் நறவு மாந்தி
மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார்

3.3.36


686


பாசிலைப் படலைச் சுற்றிப் பன் மலர்த் தொடையல் சூடிக்
காசுடை வடத் தோல் கட்டி கவடி மெய்க் கலன்கள் பூண்டார்
மாசில் சீர் வெட்சி முன்னா வருதுறைக் கண்ணி சூடி
ஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற் சிலை மருங்கு சூழ்ந்தார்

3.3.37


687


தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்
எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்
திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக்
கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள்

3.3.38


688


குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர் துணங்கை ஆட
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆட
வென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம்
அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர்

3.3.39


689


வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத்
தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத் தொழில் வலவர் தம்பால்
பொங்கொளிக் கரும் போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித்தார்கள்

3.3.40


690


பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன் முன் செய்த
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும்
அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்றக்
கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம்

3.3.41


691


வண்ணவெஞ் சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்று
கண்ணகல் சாயல் பொங்கக் கலை வளர் திங்களே போல்
எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லாப்
புண்ணியம் தோன்றி மேல் மேல் வளர் அதன் பொலிவு போல்வார்

3.3.42


692


இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில்

இருங் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய
மை வண்ண வரை நெடுந் தோள் நாகன் தானும் மலை எங்கும்

வனம் எங்கும் வரம்பில் காலம்
கை வண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர் கண

நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து
மெய் வண்ணந்தளர் மூப்பின் பருவம் எய்தி வில்லுழவின்

பெரு முயற்சி மெலிவன் ஆனான்

3.3.43


693


அங்கண் மலைத் தடஞ்சாரல் புனங்கள் எங்கும்

அடலேனம் புலி கரடி கடமை ஆமா
வெங் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள்

மிக நெருங்கி மீதூர் காலைத்
திங்கள் முறை வேட்டை வினை தாழ்தது என்று சிலை

வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல்

நாகன் பால் சார்ந்து சொன்னார்

3.3.44


694


சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து

வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி
முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல்

வேட்டையினில் முயல கில்லேன்
என் மகனை உங்களுக்கு நாதனாக எல்லீரும் கைக்

கொண்மின் என்ற போதின்
அன்னவரும் இரங்கிப் பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி

இம் மாற்றம் அரைகின்றார்கள்

3.3.45


695


இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி இனிது

உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும்
அத்த! நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி

வேறு உளதோ அதுவே அன்றி
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம் படவே

பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை

ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர்

3.3.46


696


சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை

முன் கொண்டுவரச் செப்பி விட்டு
மலை மருவு நெடும் கானில் கன்னி வேட்டை மகன் போகக்

காடு பலி மகிழ்வு ஊட்ட
தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை அழைமின் என

அங்குச் சார்ந்தோர் சென்று
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து

விருப்பினோடும் கடிது வந்தாள்

3.3.47


697


கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக் கலை

மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து
மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு மயில் கழுத்து

மனவு மணி வடமும் பூண்டு
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழத் தாழைப்பீலி

மரவுரி மேல் சார எய்திப்
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கிப் போர் வேடர்

கோமானைப் போற்றி நின்றாள்

3.3.48


698


நின்ற முதுகுறக்கோலப் படிமத்தாளை நேர் நோக்கி

அன்னை நீ நிரப்பு நீங்கி
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன்

எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை

வளனும் வேண்டிற்று எல்லாம்
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி

என் என்றாள் அணங்கு சார்ந்தாள்

3.3.49


699


கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் எங்கள்

குலத் தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு
பூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மைக் காக்கும் பொருப்புரிமை

புகுகின்றான் அவனுக்கு என்றும்
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு

புலங் கவர் வென்றி மேவு மாறு
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடு பலி

ஊட்டு என்றான் கவலை இல்லான்

3.3.50


700


மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி மனமகிழ்ந்து

இங்கு அன்போடு வருகின்றேனுக்கு
எற்றையினுங் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன்

மைந்தன் திண்ணனான வெற்றி வரிச்
சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான்

என்று விரும்பி வாழ்த்திக்
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன

குறைவின்றிக் கொண்டு போனாள்

3.3.51


701


தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார்

சிலைத் தாதை அழைப்பச் சீர்கொள்
மைவிரவு நறுங் குஞ்சி வாசக் கண்ணி மணி நீல

ஒன்று வந்தது என்னக்
கைவிரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி

தாதை கழல் வணங்கும் போதில்
செய்வரை போல் புயம் இரண்டும் செறியப் புல்லிச்

செழும் புலித்தோல் இருக்கையின் முன்சேர வைத்தான்

3.3.52


702


முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன்

மூப்பு எனை வந்து அடைந்தலினால் முன்புபோல
என்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட இனி

எனக்குக் கருத்து இல்லை எனக்கு மேலாய்
மன்னு சிலை மலையர் குலக் காவல் பூண்டு மாறு

எறிந்து மா வேட்டை ஆடி என்றும்
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்றுடைய

தோலும் சுரிகையும் கைக் கொடுத்தான் அன்றே

3.3.53


703


தந்தை நிலை உள்கொண்டு தளர்வு கொண்டு தங்கள்

குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட

குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை

உடை தோலும் வாங்கிக் கொண்டு
சிந்தை பரங்கொள நின்ற திண்ணனார்க்குத் திருத்

தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான்

3.3.54


704


நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு

பரித்து அதன் மேல் நலமே செய்து
தெம் முனையில் அயற் புலங்கள் கவர்ந்து கொண்ட திண்

சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய்
வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்

விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட
இம் முரண் வெஞ் சிலை வேடர் தங்களோடும் எழுக என

விடை கொடுத்தான் இயல்பில் நின்றான்

3.3.55


705


செங்கண் வயக் கோளரியேறு அன்ன திண்மை

திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற
வெங்கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடை

கொண்டு புறம் போந்து வேடரோடும்
மங்கல நீர்ச் சுனை படிந்து மனையின் வைகி வைகிருளின்

புலர் காலை வரிவிற் சாலைப்
பொங்கு சிலை அடல் வேட்டைக் கோலம் கொள்ளப் புனை

தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார்

3.3.56


706


நெறி கொண்ட குஞ்சிச் சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய்யொளிப் பீலி சேர்த்தி
வெறி கொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொளப் பின்பு செய்து

3.3.57


707


முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னில் புரி கொண்ட மயிர் கயிறாரச் சாத்தி
மின்னல் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின்
மன்னிப் புடை நின்றன மா மதி போல வைக

3.3.58


708


கண்டத்திடை வெண் கவடிக் கதிர் மாலை சேர
கொண்டக் கொடு பன் மணி கோத்திடை ஏனக் கோடு
துண்டப் பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல்
தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க

3.3.59


709


மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலைத் தாழத்
தாரிற் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்னச்
சேர்விற் பொலி கங்கண மீது திகழ்த முன் கைக்
கார்விற் செறி நாண் எறி கைச் செறி கட்டி கட்டி

3.3.60


710


அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத்து
திரையில் படு வெள்ளலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி
நிரையில் பொலி நீளுடை தோல்கரி கைப்புறம் சூழ்
விரையில் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி

3.3.61


711


வீரக் கழல் காலின் விளங்க அணிந்து பாதம்
சேரத் தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்
பாரப் பெரு வில் வலம் கொண்டு பணிந்து திண்ணன்
சாரத் திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி

3.3.62


712


அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கித்
துங்கப் பெரு மா மழை போன்று துண் என்று ஒலிப்ப
வெங்கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்
செங்கைத் தலத்தால் தடவிச் சிறு நாண் எறிந்தார்

3.3.63


713


பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி
வில் வேடர் ஆயத் துடி மேவி ஒலிக்கு முன்றில்
சொல் வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து விம்ம
வல்லேறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார்

3.3.64


714


மானச் சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில்
பானற்குல மாமலரில் படர் சோதியார் முன்
தேனற்றசை தேறல் சருப் பொரி மற்றும் உள்ள
கானப் பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள்

3.3.65


715


நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்கப் புக்குச்
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி
உன் தந்தை தந்தைக்கும் இந் நன்மைகள் உள்ள வல்ல
நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள்

3.3.66


716


அப் பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி தன்னைச்
செப்பற்கு அரிதாய சிறப்பு எதிர் செய்து போக்கிக் கைப் பற்றிய
திண் சிலை கார் மழை மேகம் என்ன
மெய்ப் பொற்புடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார்

3.3.67


717


தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர்
வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார்
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்ணிலார்
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே

3.3.68


718


வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதமுன்
சென்று நீளுமாறு போல்வ செய்ய நாவின் வாய வாய்
ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடெலாம்

3.3.69


719


போர் வலைச் சிலைத் தொழில் புறத்திலே விளைப்பச்
சார் வலைத் தொடக்கு அறுக்க ஏகும் ஐயர் தம் முன்னே
கார் வலைப் படுத்த குன்று கானமா வளைக்க நீள்
வார் வலைத் திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார்

3.3.70


720


நண்ணி மா மறைக் குலங்கள் நாட என்று நீடும் அத்
தண்ணிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார் தமைக்
கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன்
எண்ணில் பார்வை கொண்டு வேடர் எம் மருங்கும் ஏகினார்

3.3.71


721


கோடுமுன் பொலிக்கவும் குறுங் கணா குளிக்குலம்
மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்
சேடு கொண்டகை விளிச் சிறந்த ஓசை செல்லவும்
காடு கொண்டு எழுந்த வேடு கை வளைந்து சென்றதே

3.3.72


722


நெருங்கு பைந்தருக் குலங்கள் நீடு காடு கூட நேர்
வருங்கருஞ் சிலைத் தடக்கை மான வேடர் சேனை தான்
பொருந் தடந் திரைக்கடல் பரப்பு இடைப் புகும் பெருங்
கருந்தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே

3.3.73


723


தென் திசைப் பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம்
பன்றி வெம் மரைக் கணங்கள் ஆதியான பல் குலம்
துன்றி நின்ற என்றடிச் சுவட்டின் ஒற்றர் சொல்லவே
வன் தடக்கை வார்கொடு எம் மருங்கும் வேடர் ஓடினார்

3.3.74


724


ஓடி எறிந்து வாரொழுக்கி யோசனைப் பரப்பு எலாம்
நெடிய திண் வலைத் தொடக்கு நீளிடைப் பிணித்து நேர்
கடி கொளப் பரந்த காடு காவல் செய்து அமைத்த பின்
செடி தலைச் சிலைக்கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார்

3.3.75


725


வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடி முன்
மஞ்சலைக்கு மாமலை சரிப் புறத்து வந்த மா
அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள்
செஞ்சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர்

3.3.76


726


வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பராயம் ஓடி நேர்
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும்
மொய் குரல் துடிக் குலங்கள் பம்பை முன் சிலைத்து எழக்
கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கானெலாம்

3.3.77


727


ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலைக் குலம்
கான மேதி யானை வெம் புலிக் கணங்கள் கான் மரை
ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன்
சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார்

3.3.78


728


தாளறுவன் இடை துணிவன தலை துமிவன கலைமா
வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா
நீளுடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா
மீளிகொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே

3.3.79


729


வெங்கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய்
செங் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனைப்
பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள்

3.3.80


730


பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய்
முன் நடுமுக மிசை உருவிட முடுகிய விசையுடன் அக்
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவத்
தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள்

3.3.81


731


கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர்
குரிசில் முன் விடும் அடுசரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே
பொரு கரி யொடு சின அரியிடை புரையறவுடல் புகலால்
வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ்வனமே

3.3.82


732


நீளிடை விசை மிசை குதிகொள நெடு முகில் தொட எழு மான்
தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம்
வாள் விடுகதிர் மதி பிரிவுற வருமென விழும் உழையைக்
கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே

3.3.83


733


கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல்
அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால்
மிடை கரு மரை கரடிகள் ஓடு விழுவன வன மேதி

3.3.84


734


பல துறைகளின் வெருவரலொடு பயில் வலையற நுழை மா
உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய்
நிலவிய இரு வினை வலை இடை நிலை சுழல் பவர் நெறி சேர்
புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவுளவே

3.3.85


735


துடியடியன மடி செவியன துறுகய முனி தொடரார்
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார்
அடி தளர்வுறு கரு உடையன அணை உறு பிணை அலையார்
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர்

3.3.86


736


இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிரக்
கைவரைகலும் வெருவுற இடை கான் எழுவதோர் ஏனம்
பெய் கருமுகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி
மொய் வலைகளை அற நிமிர் முடுகிய கடு விசையில்

3.3.87


737


போமது தணை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறு
ஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில்
தாம் ஒருவரும் அறிகிலரவர் தனி தொடர்வுழி அதன்மேல்
ஏமுனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார்

3.3.88


738


நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில்
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்
கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல்

3.3.89


739


குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இடக் குரல் நீள்
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிதோடித்
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல்
சென்று அதனிடை நின்றது வலிது தெருமர நிரையில்

3.3.90


740


அத் தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முன்
கைத் தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி
மொய்த்தெழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர்

3.3.91


741


வேடர் தங்கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன்
காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார்

3.3.92


742


மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச்
சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து
வெற்றி கொள் வேட்டைக் காடு குருகுவோம் மெல்ல என்றார்

3.3.93


743


என்று அவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றும் இவ் வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன்
நின்ற இப் பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட
குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான்

3.3.94


744


பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையில் கண்டார்
செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை

3.3.95


745


நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான்

3.3.96


746


ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம்
போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல்
மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும்
தேவர் அங்கு இருப்பது எங்கே போகென்றார் திண்ணனார் தாம்

3.3.97


747


உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து
கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும்
வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும்
திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினைச் சார்ந்தார்

3.3.98


748


ஆங்கு அதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டு
வாங்கு வில் காடன் தன்னை மரக் கடை தீக் கோல் பண்ணி
ஈங்கு நீ நெருப்புக் காண்பாய் இம்மலை ஏறிக் கண்டு
நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார்

3.3.99


749


அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின்
தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம்
களி வரும் மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டு
குளிர் வரு நதி ஊடு ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார்

3.3.100


750


கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சி
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட
இது என் கொல் நாணா என்றார்க்கு இம் மலைப் பெருந்தேன் சூழ்ந்து
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி கொல் என்றான்

3.3.101


751


முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆன
அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி
மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி
என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கை யோடும்

3.3.102


752


நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும்
பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி
ஆணையாம் சிவத்தைச் சாரா அணைபவர் போல ஐயர்
நீணிலை மலையை ஏறி நேர் படச் செல்லும் போதில்

3.3.103


753


திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே
அம் கண்ணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்பு உருவம் ஆனார்

3.3.104


754


மாகமார் திருக் காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள
ஏக நாயகரைக் கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின்
வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும்
மோகமாய் ஓடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்

3.3.105


755


நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும்
வடிவெலாம் புளகம் பொங்க மலர்க் கண்ணீர் அருவி பாய
அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று
படி இலாப் பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற

3.3.106


756


வெம் மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல்
கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம் தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன்
இம் மலைத் தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார்

3.3.107


757


கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்தப்
பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற
அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான்

3.3.108


758


வன்றிறல் உந்தை யோடு மா வேட்டை ஆடிப் பண்டிக்
குன்று இடை வந்தோம் ஆகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி
ஒன்றிய இலைப் பூச்சூட்டி ஊட்டி முன்பு அறைந்த தேர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான்

3.3.109


759


உண்ணிறைந்து எழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில்
திண்ணனார் திருக் காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை
எண்ணிய இவைகொலாம் என்று இது கடைப் பிடித்துக் கொண்டு அவ்
அண்ணலைப் பிரிய மாட்டா அளவில் ஆதரவு நீட

3.3.110


760


இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னே
இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை
இவர் தமைப் பிரிய ஒண்ணாது என்செய்கேன் இனி யான் சால
இவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு எய்தவும் வேண்டும் என்று

3.3.111


761


போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீளப் போவர்
காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆப் போல்வர்
நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார்

3.3.112


762


ஆர்தமராக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன்
நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று
சோர் தரு கண்ணீர் வாரப் போய் வரத் துணிந்தார் ஆகி
வார் சிலை எடுத்துக் கொண்டு மலர்க் கையால் தொழுது போந்தார்

3.3.113


763


முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன்
பின்பு வந்து அணைய முன்னைப் பிற துறை வேட்கை நீங்கி
அன்பு கொண்டு உய்ப்பச் செல்லும் அவர் திரு முகலி ஆற்றின்
பொன் புனை கரையில் ஏறிப் புது மலர்க் காவில் புக்கார்

3.3.114


764


காடனும் எதிரே சென்று தொழுது தீக் கடைந்து வைத்தேன்
கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்
மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று
நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன்

3.3.115


765


அங்கிவர் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு
வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு என்ன நீங்கான்
இங்கும் அத் தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏகப் போந்தான்
நம்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான்

3.3.116


766


என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள்
முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார்
வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க
இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு

3.3.117


767


கோலினில் கோத்துக் காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ
வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச்
சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை
ஏலவே கோலிக் கூட அதன் மிசை இடுவார் ஆனார்

3.3.118


768


மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான்
பெரும் பசி உடையன் ஏனும் பேச்சிலன் எமக்கும் பேறு
தரும் பரிசு உணரான் மற்றைத் தசை புறத்து எறியா நின்றான்

3.3.119


769


தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்று இதனைத் தீர்க்கல்
ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அவ் வேட்டைக் கானில்
ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணிப் போனார்

3.3.120


770


கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்
ஊன் அமுது அமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி
மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்த
தூ நறும் பள்ளித் தாமங் குஞ்சி மேல் துதையக் கொண்டார்

3.3.121


771


தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப்
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி
இனிய எம்பிரானார் சாலப் பசிப்பர் என்று இரங்கி ஏங்கி
நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம்

3.3.122


772


இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச் சென்று எய்தி வெற்பின்
முளைத்து எழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில்
வளைத்த பொற் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர் தன்னை
விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடிமேல் விட்டார்

3.3.123


773


தலை மிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங் காளத்தி
மலை மிசைத் தம்பிரானார் முடி மிசை வணங்கிச் சாத்திச்
சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை
இலை மிசைப் படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து

3.3.124


774


கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு
அழலுறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில்
பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சால
அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார்

3.3.125


775


அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்
மன்னனார் திருக் காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன்
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு
பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான்

3.3.126


776


அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும்
வெவ்விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித் திருக் கையில் சிலையும் தாங்கி
மைவரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார்

3.3.127


777


சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மை
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார்

3.3.128


778


கழை சொரி தரளக் குன்றில் கதிர் நிலவு ஒருபால் பொங்க
முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒருபால் மொய்ப்பத்
தழை கதிர்ப் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில்
குழையணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும்

3.3.129


779


விரவு பன்மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை பொங்க
மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி
பொர இரு சுடருக்கு அஞ்சிப் போயின புடைகள் தோறும்
இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும் எங்கும்

3.3.130


780


செந்தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும்
மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும்
ஐந்தும் ஆறடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும்
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை

3.3.131


781


வரும் கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமஞ் சென்று
சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டுக்
கருங்கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர்
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி

3.3.132


782


ஏறுகாற்பன்றியோடும் இருங்கலை புனமான் மற்றும்
வேறு வேறு இனங்கள் வேட்டை வினைத் தொழில் விரகினாலே
ஊறுசெய் காலம் சிந்தித்து உருமிகத் தெரியாப் போதின்
மாறடு சிலையும் கொண்டு வள்ளலைத் தொழுது போந்தார்

3.3.133


783


மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி
மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை
எய்காட்டின் மாவளைக்க இட்ட கரும் திரை எடுத்துக்
கை காட்டும் வான் போலக் கதிர் காட்டி எழும் போதில்

3.3.134


784


எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக்
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழி பாடு
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார்

3.3.135


785


வந்து திருமலையின் கண் வானவர் நாயகர் மருங்கு
சிந்தை நியமத்தோடும் செல் கின்றார் திரு முன்பு
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி
இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார்

3.3.136


786


மேவநேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார்
தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து
போவதே இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம்
ஆவதோ எனப் பதறி அழுது விழுந்து அலமந்தார்

3.3.137


787


பொருப்பில் எழுஞ் சுடர்க் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான்
இருப்பது இனி ஏன் என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும்
செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின்
விருப்பின் ஒடும் திருமுகலிப் புனல் மூழ்கி விரைந்து அணைந்தார்

3.3.138


788


பழுது புகுந்தது அது தீரப் பவித்திரமாம் செயல் புரிந்து
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி
வழுவில் திரு மஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை
முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார்

3.3.139


789


பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால்
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர்த் திங்கள்
அணிந்த சடை முடிக் கற்றை அங்கணரை விடை கொண்டு
தணிந்த மனத் திருமுனிவர் தபோ வனத்திடை சார்ந்தார்

3.3.140


790


இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால்
மைவண்ணக் கருங் குஞ்சி வன வேடர் பெருமானார்
கைவண்ணச் சிலை வளைத்துக் கான் வேட்டை தனி ஆடிச்
செய்வண்ணத் திறம் மொழிவேன் தீவினையின் திறம் ஒழிவேன

3.3.141


791


திரு மலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல்
பெருமலைகள் இடைச் சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து
வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கான் இடை நின்று
ஒரு வழிச் சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி

3.3.142


792


பயில் விளியால் கலை அழைத்துப் பாடு பெற ஊடுருவும்
அயில் முகவெங் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள்
துயில் இடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து
வெயில் படு வெங்கதிர் முதிரத் தனி வேட்டை வினை முடித்தார்

3.3.143


793


பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல்
இட்டு அருகு தீக் கடை கோல் இரும் சுரிகை தனை உருவி
வெட்டி நறுங் கோல் தேனும் மிக முறித்துத் தேக்கு இலையால்
வட்டமுறு பெருங் கல்லை மருங்கு புடை பட அமைத்தார்

3.3.144


794


இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில்
வெம் தழலைப் பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள்
கொந்தி அயில் அலகம்பால் குட்டம் இட்டுக் கொழுப்பரிந்து
வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து

3.3.145


795


வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின்
ஆய உறுப்பு இறைச்சி யெலாம் அரிந்து ஒருகல் இலையில் இட்டு
காய நெடும் கோல் கோத்துக் கனலின் கண் உறக்காய்ச்சி
தூய திரு அமுது அமைக்கச் சுவை காணல் உறுகின்றார்

3.3.146


796


எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும்
வண்ண எரி வாயின் கண் வைத்தது எனக் காளத்தி
அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்குத்
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது

3.3.147


797


நல்ல பதமுற வெந்து நாவின் கண் இடும் இறைச்சி
கல்லையினிற் படைத்துத் தேன் பிழிந்து கலந்து கொண்டு
வல் விரைந்து திருப் பள்ளித் தாமமும் உந்தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார்

3.3.148


798


வந்து திருக் காளத்தி மலை ஏறி வனசரர்கள்
தந்தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்தி
அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின்
முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார்

3.3.149


799


ஊனமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்றால்
ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில்
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்
தேனும் உடன் கலந்து இதுதித்திக்கும் என மொழிந்தார்

3.3.150


800


இப் பரிசு திரு அமுது செய்வித்துத் தம்முடைய
ஒப்பரிய பூசனை செய்து அந்நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும் அன்பால் காளத்தி
அப்பர் எதிர் அல்லுறங்கார் பகல் வேட்டை ஆடுவார்

3.3.151


801


மாமுனிவர் நாள் தோறும் வந்து அணைந்து வன வேந்தர்
தாம் முயலும் பூசனைக்குச் சால மிகத் தளர்வு எய்தித்
தீமை என அது நீக்கிச் செப்பிய ஆகம விதியால்
ஆமுறையில் அர்ச்சனை செய்து அந் நெறியில் ஒழுவாரால்

3.3.152


802


நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின்
ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு
பேணு மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்துக்
காணு நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார்

3.3.153


803


முன்பு திருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால்
இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கைத்
தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற
அன்பு பிழம் பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ?

3.3.154


804


அந்நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப
மன்னிய ஆகமப் படியால் மாமுனிவர் அருச்சித்து இங்கு
என்னுடைய நாயகனே இது செய்தார் தமைக் காணேன்
உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என

3.3.155


805


அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலே
மின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்து அருளி
வன்திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல்
நன்றவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள் என்று

3.3.156


806


அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு என்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ என்று அருள் செய்வார்

3.3.157


807


பொருட்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பென்மேல்
அருப்புறுமென் மலர்முன்னை அவை நீக்கும் ஆதரவால்
விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற் றெனவீழ்ந்த
செருப்படி அவ்விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்.

3.3.158


808


உருகிய அன்பொழிவின்றி நிறைந்த அவன் உருவென்னும்
பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கியினி தொழுகுதலால்
ஒருமுனிவன் செவிஉமிழும் உயர்கங்கை முதல்தீர்த்தப்
பொருபுனலின் எனக்கவன்தன் வாயுமிழும் புனல்புனிதம்.

3.3.159


809


இம்மலைவந் தெனையடைந்த கானவன்தன் இயல்பாலே
மெய்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால்
செம்மலர்மேல் அயனொடுமால் முதல்தேவர் வந்துபுனை
எம்மலரும் அவன் தலையால் இடுமலர்போல் எனக்கொல்வா

3.3.160


810


வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால்
நையுமனத் தினிமையினால் நையமிக மென்றிடலால்
செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில்
எய்யும்வரிச் சிலையவந்தான் இட்டஊன் எனக்கினிய.

3.3.161


811


மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும்
இன்பமொழித் தோத்திரங்கள் மந்திரங்களியாவையினும்
முன்பிருந்து மற்றவன்தன்முகமலர அகநெகிழ
அன்பில்நினைந் தெனையல்லால் அறிவுறா மொழிநல்ல.

3.3.162


812


உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால்
எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய்
மனக் கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள் செய்து
புனல் சடிலத் திரு முடியார் எழுந்து அருளிப் போனார்

3.3.163


813


கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குல் இடைப்
புனை தவத்து மாமுனிவர் புலர் அளவும் கண் துயிலார்
மனம் உறும் அற்புதமாகி வரும் பயமும் உடன் ஆகித்
துனை புரவித் தனித் தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற

3.3.164


814


முன்னை நாள் போல் வந்து திருமுகலிப் புனல் மூழ்கிப்
பன் முறையும் தம்பிரான் அருள் செய்த படி நினைந்து
மன்னு திருக் காளத்தி மலை ஏறி முன்பு போல்
பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார்

3.3.165


815


கருமுகில் என்ன நின்ற கண் படா வில்லியார் தாம்
வருமுறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த காலை
அருமறை முனிவனார் வந்தணை வதன் முன்னம் போகித்
தருமுறை முன்பு போலத் தனிப்பெரு வேட்டை ஆடி

3.3.166


816


மாறில் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி
ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு
தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி
ஆறுசேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார்

3.3.167


817


இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன்
மொய்த்த பல்சகுனம் எல்லாம் முறை முறை தீங்கு செய்ய
இத் தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரங் காட்டும்
அதனுக்கு என் கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில்

3.3.168


818


அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவனார்க்கு
திண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார்

3.3.169


819


வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக்
கொந்தவர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார்

3.3.170


820


விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது
ஒழிந்திடக் காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னா
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும்

3.3.171


821


வாளியுந் தெரிந்து கொண்டு இம் மலையிடை எனக்கு மாறா
மீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ? விலங்கின் சாதி
ஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ? அறியேன் என்று
நீளிருங் குன்றைச் சாரல் நெடிதிடை நேடிச் சென்றார்

3.3.172


822


வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும்
நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத்தோடு நிறை மலர்ப் பாதம் பற்றி
மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார

3.3.173


823


பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ?
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ ?
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ?
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும்

3.3.174


824


என் செய்தால் தீருமோதான்? எம்பிரான் திறத்துத் தீங்கு
முன்செய்தார் தம்மைக் காணேன் மொய் கழல் வேடர் என்றும்
மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடிப்
பொன்செய் தாழ் வரையிற் கொண்டு வருவன் நான் என்று போனார்

3.3.175


825


நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும்
இனத்திடை பிரிந்த செங்கணேறு என வெருக் கொண்டு எய்திப்
புனத்திடைப் பறித்துக் கொண்டு பூத நாயகன்பால் வைத்த
மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார்

3.3.176


826


மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக் காளத்திக்
கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை படாது இழியக் கண்டும்
இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச் செயல் என்று பார்ப்பார்
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார்

3.3.177


827


இதற்கினி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று
மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தங்கண்
முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப

3.3.178


828


நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்

3.3.179


829


வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம்
நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில்
உலப்பில் செம் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்
குலப்பெருந் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்

3.3.180


830


கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று
புண்டரு குருதி நிற்க மற்றைக் கண் குருதி பொங்கி
மண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும்
உண்டொரு கண் அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று

3.3.181


831


கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பிற் காணும் நேர்பாடு
எண்ணுவர் தம்பிரான் தன் திருக் கண்ணில் இடக்கால் ஊன்றி
உண்ணிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர்

3.3.182


832


செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக் காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்
தங்கண் முன் இடக்குங் கையைத் தடுக்க மூன்று அடுக்கு நாக
கங்கணர் அமுதவாக்குக் கண்ணப்ப நிற்க என்ற

3.3.183


833


கானவர் பெருமானார் தங்கண் இடந்து அப்பும் போதும்
ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்
ஞான மாமுனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ள
வானவர் வளர் பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப

3.3.184


834


பேறினி இதன் மேல் உண்டோ ? பிரான் திருக் கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்தப்ப உதவும் கையை
ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு என் வலத்தில்
மாறிலாய் நிற்க என்று மன்னு பேர் அருள் புரிந்தார்

3.3.185


835


மங்குல் வாழ் திருக் காளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர்
தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர் தாள் தலைமேற் கொண்டே
கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம்
பொங்கிய புகழின் மிக்கார் திருத் தொண்டு புகலல் உற்றேன்

3.3.186



திருச்சிற்றம்பலம்

 1. சைவத் திருமுறைகளில் பெரிய புராணத்தின் இடம் யாது?

விடை : சைவத் திருமுறைகளில் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றப்படுகின்றது.

2. பெரிய புராணம் பிறமொழி தழுவிய காப்பியமா?

விடை : பெரியபுராணம், தமிழ் மக்களையும், தமிழகச் சூழலையும் மையமாகக் கொண்டு பாடப்பட்ட தமிழ்க் காப்பியமாகும்.

3. பெரிய புராணம் உணர்த்தும் செய்தி யாது?

விடை : எளிய நிலையில் மனம் தளராமல் இறைச் சிந்தனையோடு, தொண்டு புரிந்தால் இறையருள் பெறலாம்' என்னும் செய்தியை 63 நாயன்மார்களின் வரலாற்றைத் கொண்டு உணர்த்தும் நூலே பெரியபுராணம் ஆகும்.

4. சேக்கிழாரை ஆதரித்த மன்னன் யார்?

விடை : சேக்கிழாரை ஆதரித்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழன் (அநபாய சோழன்) ஆவான்.

5. பெரிய புராணம் இயற்றக் காரணமான நூல்கள் எவை?

விடை : சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியும் பெரிய புராணம் பாடுவதற்குக் காரணமாக அமைந்த நூல்கள் ஆகும்.

6. பெரிய புராணக் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

விடை : பெரியபுராணக் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன் சுந்தரர் ஆவார்.

7. திண்ணனாரின் பெற்றோர் யாவர்?

விடை : திண்ணனாரின் தந்தை: நாகன்; தாய்: தத்தை ஆவர்.

8. குடுமித் தேவர் எங்கு வீற்றிருக்கின்றார்?

விடை : பொன்முகலி ஆற்றங்கரையின் அருகில் இருக்கும் திருக்காளத்தி மலையில் குடுமித் தேவர் வீற்றிருக்கின்றார்.

9. சிவ கோசரியாருக்கும், திண்ணனாருக்கும் உள்ள வழிபாட்டு நிலை வேறுபாடு யாது?

விடை : சிவ கோசரியாரின் வழிபாடு ஆகம முறைப்படி செய்வதாகிய அறிவு வழிப்பட்டது-சடங்கு வழியான வைதிக நெறி, ஆனால் திண்ணனாரின் வழிபாடு அன்பு செலுத்துதல் ஆகிய உணர்வு வழிப்பட்டது-பக்தி நெறி, இறைவனுக்கு விருப்பமானது.

10. திண்ணனாருக்கு எத்தனை நாட்களில் இறைவன் காட்சி தந்தார்?

விடை : ஆறே நாட்களில் இறைவன் திண்ணனாருக்குக் காட்சி தந்தார்.

11. திண்ணனாரின் தோற்றச் சிறப்புப் பற்றிக் குறிப்பிடுக.

விடை : வேட்டுவர் குலத் தோன்றல் திண் என்னும் உடலைப் பெற்றதால் திண்ணன் எனப் பெயர் பெற்றார். தலைமயிரைத் தூக்கிக் கட்டியவர். தலையிலே மலர்களைச் சூடியவர். கழுத்திலே சங்கு மணிகளும், பன்றிக் கொம்புகளும் கோத்த மாலையையும், புலித் தோலினால் செய்யப்பட்ட தட்டை வடிவமான வெற்றி மாலையினையும் அணிந்தவர். இடையிலே ஆடையாகப் புலித் தோலையும், குறுவாளையும் வைத்திருப்பவர். கால்களில் வீரக் கழல் பூண்டு செருப்பு அணிந்தவர். தலையிலே மயிற்பீலி சூடியவர். வில், வேல், அம்பு, வாள், ஈட்டி முதலானவற்றைக் கையிலே ஏந்தியவர். வேட்டையாடுவதற்கு நாயினைத் துணையாகக் கொண்டவர்.

12. திண்ணனாருக்கு, கண்ணப்பர் எனப் பெயர் வரக் காரணம் என்ன?

விடை : சிவ கோசரியாருக்கு, இறைவன் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, தமது வலக்கண்ணில் இருந்து உதிரம் பெருகச் செய்தார். இதனைக் கண்ட திண்ணனார் தாம் செய்வது அறியாமல் திகைத்தார். பின்னர் துடைத்தாலும், பச்சிலையிட்டாலும் நிற்காதது கண்டு வருந்தி நின்றார். அப்போது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி நினைவுக்கு வர, தன் கண்ணையே அம்பினால் அகழ்ந்தெடுத்து அப்பினார்.

உதிரம் நின்றது. அது கண்டு மகிழ்ந்தாடினார். உடனே, சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார். உடனே அஞ்சாமல் இடது கண்ணையும் அப்ப, காளத்தி நாதரின் திருக்கண்ணில் தமது இடக்கால் விரலை ஊன்றி, அம்பினால் இடக்கண்ணைத் தோண்ட முனைந்தார், குடுமித் தேவர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் தடுத்தருளினார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவனருளில் மூழ்கித் திளைத்தார். அன்று முதல் இறைவனுக்கே தன் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார், கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.

 

 

கம்ப இராமாயணம் - 14. திருவடி தொழுத படலம்

 

 

வான் வழி மீளும் அனுமன், மயேந்திரத்தில் குதித்தல்

 

'நீங்குவென் விரைவின்' என்னும் நினைவினன், மருங்கு நின்றது

ஆங்கு ஒரு குடுமிக் குன்றை அருக்கனின் அணைந்த ஐயன்,

வீங்கினன், உலகை எல்லாம் விழுங்கினன் என்ன; வீரன்

பூங் கழல் தொழுது வாழ்த்தி, விசும்பிடைக் கடிது போனான்.           1

 

மைந்நாகம் என்ன நின்ற குன்றையும், மரபின் எய்தி,

கைந் நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன், கணத்தின் காலை,

பைந் நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும்,

கொய்ந் நாகம் நறுந் தேன் சிந்தும், குன்றிடைக் குதியும் கொண்டான்.     2

 

வானர வீரர் அனுமனைக் கண்டு மகிழ்தல்

 

போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க,

வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர் மன்னோ,

பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவைப் பார்ப்புத்

தாய் வரக் கண்டதன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா!  3

 

அழுதனர் சிலவர்; முன் நின்று ஆர்த்தனர் சிலவர்; அண்மித்

தொழுதனர் சிலவர்; ஆடித் துள்ளினர் சிலவர்; அள்ளி

முழுதுற விழுங்குவார்போல் மொய்த்தனர் சிலவர்; முற்றும்

தழுவினர் சிலவர்; கொண்டு சுமந்தனர் சிலவர், தாங்கி.    4

 

'தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின் தேடி,

மேல் முறை வைத்தேம்; அண்ணல்! நுகர்ந்தனை, மெலிவு தீர்தி;

மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம்' என்று,

தாம் நுகர் சாகம் எல்லாம் முறை முறை சிலவர் தந்தார்.   5

 

அனுமன் உடலில் புண்கள் கண்டு, வானரர் வருந்துதல்

 

தாள்களில், மார்பில், தோளில், தலையினில், தடக் கைதம்மில்,

வாள்களின், வேலின், வாளி மழையினின் வகிர்ந்த புண்கள்,

நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என, நம்பி கண்ண

ஊழ் கொள நோக்கி நோக்கி, உயிர் உக, உளைந்து உயிர்த்தார்.    6

 

அனுமன் அங்கதன் முதலியோரை வணங்கி, சீதை கூறிய ஆசியைத் தெரிவித்தல்

 

வாலி காதலனை முந்தை வணங்கினன்; எண்கின் வேந்தைக்

காலுறப் பணிந்து, பின்னை, கடன்முறை, கடவோர்க்கு எல்லாம்

ஏலுற இயற்றி, ஆங்கண் இருந்து, 'இவண் இருந்தோர்க்கு எல்லாம்,

ஞால நாயகன் தன் தேவி சொல்லினள், நன்மை' என்றான்.              7

 

அனுமன் நடந்த செய்திகளைக் கூறுதல்

 

என்றலும், கரங்கள் கூப்பி எழுந்தனர், இறைஞ்சித் தாழா-

நின்றனர், உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர்,

'சென்றது முதலா, வந்தது இறுதியாச் செப்பற்பாலை,

வன் திறல் உரவோய்!' என்ன, சொல்லுவான் மருத்தின் மைந்தன்:               8

 

ஆண் தகை தேவி உள்ளத்து அருந் தவம் அமையச் சொல்லி,

பூண்ட பேர் அடையாளம் கைக் கொண்டதும் புகன்று, போரில்

நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும், நெருப்புச் சிந்தி

மீண்டதும், விளம்பான் - தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி.               9

 

கூறாதவற்றையும் குறிப்பால் உணர்ந்த வானரர், அடுத்து செய்வது குறித்து அனுமனை வினவுதல்

 

'பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை

உரைசெய, ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத,

கருதலர் பெருமை தேவி மீண்டிலாச் செயலே காட்ட,

தெரிதர உணர்ந்தேம்; பின்னர், என் இனிச் செய்தும்?' என்றார்.     10

 

அனுமன் சொற்படி, யாவரும் இராமனைக் காண விரைதல்

 

'யாவதும், இனி, வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை;

சேவகன் தேவி தன்னைக் கண்டமை விரைவின் செப்பி,

ஆவது, அவ் அண்ணல் உள்ளத்து அருந் துயர் ஆற்றலே ஆம்;

போவது புலமை' என்ன, பொருக்கென எழுந்து போனார்.  11

 

வானர வீரரின் உரைப்படி, இராமனிடத்திற்கு அனுமன் முந்திச் செல்லுதல்

 

'ஏத நாள் இறந்த; சால வருந்தினது இருந்த சேனை;

ஆதலால் விரைவின் செல்லல் ஆவதுஅன்று; அளியம் எம்மைச்

சாதல் தீர்த்து அளித்த வீர! தலைமகன் மெலிவு தீரப்

போது நீ முன்னர்' என்றார்; 'நன்று' என அனுமன் போனான்.           12

 

முத் தலை எஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம் முற்றி,

வித்தகத் தூதன் மீண்டது இறுதியாய் விளைந்த தன்மை,

அத் தலை அறிந்த எல்லாம் அறைந்தனம்; ஆழியான்மாட்டு

இத் தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டாம். 13

 

சுக்கிரீவன் தேற்ற, இராமன் தேறுதல்

 

கார் வரை இருந்தனன் கதிரின் காதலன்,

சீரிய சொற்களால் தெருட்ட, செங் கணான்

ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா,

சோர்தொறும் சோர்தொறும், உயிர்த்துத் தோன்றினான்.   14

 

'தண்டல் இல் நெடுந் திசை மூன்றும் தாயினர்,

கண்டிலர் மடந்தையை' என்னும் கட்டுரை,

உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும், உளன்,

திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான்.    15

 

ஆரியன், அருந் துயர்க் கடலுள் ஆழ்பவன்,

'சீரியது அன்று நம் செய்கை; தீர்வு அரும்

மூரி வெம் பழியொடும் முடிந்ததாம்' என,

சூரியன் புதல்வனை நோக்கிச் சொல்லுவான்:          16

 

சுக்கிரீவனை நோக்கி, இராமன் துயருடன் பேசுதல்

 

'குறித்த நாள் இகந்தன குன்ற, தென் திசை

வெறிக் கருங் குழலியை நாடல் மேயினார்

மறித்து இவண் வந்திலர்; மாண்டுளார்கொலோ?

பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை?-பெற்றியோய்!          17

 

'மாண்டனள் அவள்; "இவள் மாண்ட வார்த்தையை

மீண்டு அவர்க்கு உரைத்தலின், விளிதல் நன்று" எனா,

பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார் கொலோ?

தேண்டினர், இன்னமும் திரிகின்றார் கொலோ?       18

 

'கண்டனர் அரக்கரை, கறுவு கைம்மிக,

மண்டு அமர் தொடங்கினார், வஞ்சர் மாயையால்

விண்தலம்அதனில் மேயினர்கொல்? வேறு இலாத்

தண்டல் இல் நெடுஞ் சிறைத் தளைப் பட்டார்கொலோ?      19

 

'"கூறின நாள், அவர் இருக்கை கூடலம்;

ஏறல் அஞ்சுதும்" என, இன்ப துன்பங்கள்

ஆறினர், அருந் தவம் அயர்கின்றார்கொலோ?

வேறு அவர்க்கு உற்றது என்? விளம்புவாய்!' என்றான்.         20

 

அனுமன் இராமனை அடைந்து, சீதையின் நிலையைக் குறிப்பால் உணர்த்துதல்

 

என்புழி, அனுமனும், இரவி என்பவன்

தென் புறத்து உளன் எனத் தெரிவது ஆயினான்;

பொன் பொழி தடக் கை அப் பொரு இல் வீரனும்,

அன்புறு சிந்தையன், அமைய நோக்கினான்.            21

 

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல்தன்

மொய் கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய

தையலை நோக்கிய தலையன், கையினன்,

வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான். 22

 

அனுமனின் குறிப்பினால் செய்தி உணர்ந்த இராமனின் மகிழ்ச்சி

 

திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்;

'வண்டு உறை ஓதியும் வலியள்; மற்று இவன்

கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று' எனக்

கொண்டனன், குறிப்பினால் உணரும் கொள்கையான்.      23

 

ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா,

ஓங்கிய உணர்வினால், விளைந்தது உன்னினான்;

வீங்கின தோள்; மலர்க் கண்கள் விம்மின;

நீங்கியது அருந் துயர்; காதல் நீண்டதே.        24

 

சீதையைக் கண்டு வந்த செய்தியை அனுமன் இராமனிடம் கூறுதல்

 

'கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,

தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;

அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்

பண்டு உள துயரும்' என்று, அனுமன் பன்னுவான்: 25

 

'உன் பெருந் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற

மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன் -

தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும், தலைமை சான்றாள்-

என் பெருந் தெய்வம்! ஐயா! இன்னமும் கேட்டி' என்பான்: 26

 

'பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என, பொறையில் நின்றாள்,

தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு என; தனக்கு வந்த

நின் அலது இல்லை நின்னை ஒப்பு என, நினக்கு நேர்ந்தாள்;

என் அலது இல்லை என்னை ஒப்பு என, எனக்கும் ஈந்தாள். 27

 

'உன் குலம் உன்னது ஆக்கி, உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய

தன் குலம் தன்னது ஆக்கி, தன்னை இத் தனிமை செய்தான்

வன் குலம் கூற்றுக்கு ஈந்து, வானவர் குலத்தை வாழ்வித்து,

என் குலம் எனக்குத் தந்தாள்; என் இனிச் செய்வது, எம் மோய்?       28

 

'விற் பெருந் தடந் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,

நற் பெருந் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்;

இற் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்,

கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன்.              29

 

'கண்ணினும் உளை நீ; தையல் கருத்தினும் உளை நீ; வாயின்

எண்ணினும் உளை நீ; கொங்கை இணைக் குவை தன்னின் ஓவாது

அண்ணல் வெங் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறாப்

பண்ணினும் உளை நீ; நின்னைப் பிரிந்தமை பொருந்திற்று ஆமோ?       30

 

'வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார், விண் தோய்,

காலையும் மாலைதானும் இல்லது ஓர் கனகக் கற்பச்

சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய

சாலையில் இருந்தாள் - ஐய! - தவம் செய்த தவம் ஆம் தையல்.      31

 

'மண்ணொடும் கொண்டு போனான் - வான் உயர் கற்பினாள்தன்

புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான், உலகம் பூத்த

கண் அகன் கமலத்து அண்ணல், "கருத்திலாள்-தொடுத்தல் கண்ணின்,

எண் அருங் கூறாய் மாய்தி" என்றது ஓர் மொழி உண்டு என்பார். 32

 

'தீண்டிலன் என்னும் வாய்மை-திசைமுகன் செய்த முட்டை

கீண்டிலது; அனந்தன் உச்சி கிழிந்திலது; எழுந்து வேலை

மீண்டில; சுடர்கள் யாவும் விழுந்தில; வேதம் செய்கை

மாண்டிலது;-என்னும் தன்மை வாய்மையால், உணர்தி மன்னோ!                33

 

'சோகத்தாள் ஆய நங்கை கற்பினால், தொழுதற்கு ஒத்த

மாகத்தார் தேவிமாரும், வான் சிறப்பு உற்றார்; மற்றைப்

பாகத்தாள், இப்போது ஈசன் மகுடத்தாள்; பதுமத்தாளும்,

ஆகத்தாள் அல்லள், மாயன் ஆயிரம் மௌலி மேலாள்.        34

 

'இலங்கையை முழுதும் நாடி, இராவணன் இருக்கை எய்தி,

பொலங் குழையவரை எல்லாம் பொதுவுற நோக்கிப் போந்தேன்,

அலங்கு தண் சோலை புக்கேன்; அவ்வழி, அணங்கு அ(ன்)னாளை,

கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர்க் கடலில், கண்டேன்.         35

 

'அரக்கியர் அளவு அற்றார்கள், அலகையின் குழுவும் அஞ்ச

நெருக்கினர் காப்ப, நின்பால் நேயமே அச்சம் நீக்க,

இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி,

தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள், அத் தமியள் அம்மா!      36

 

'தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி,

ஐய! யான் இருந்த காலை, அலங்கல் வேல் இலங்கை வேந்தன்

எய்தினன்; இரந்து கூறி இறைஞ்சினன்; இருந்து நங்கை

வெய்து உரை சொல்ல, சீறி, கோறல் மேற்கொண்டுவிட்டான்.         37

 

'ஆயிடை, அணங்கின் கற்பும், ஐய! நின் அருளும், செய்ய

தூய நல் அறனும், என்று, இங்கு இனையன தொடர்ந்து காப்ப,

போயினன், அரக்கிமாரை, "சொல்லுமின் பொதுவின்" என்று, ஆங்கு

ஏயினன்; அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார்.      38

 

'அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர் துறப்பதாக

உன்னினள்; கொடி ஒன்று ஏந்தி, கொம்பொடும் உறைப்பச் சுற்றி,

தன் மணிக் கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து, நாயேன்,

பொன் அடி வணங்கி நின்று, நின் பெயர் புகன்ற போழ்தில்,           39

 

'"வஞ்சனை அரக்கர் செய்கை இது" என மனக்கொண்டேயும்,

"அஞ்சன வண்ணத்தான்தன் பெயர் உரைத்து, அளியை, என்பால்

துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம்" என்று உவந்து சொன்னாள் -

மஞ்சு என, வன் மென் கொங்கை வழிகின்ற மழைக் கண் நீராள். 40

 

'அறிவுறத் தெரியச் சொன்ன, பேர் அடையாளம் யாவும்,

செறிவுற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை

முறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்ட, கண்டாள்;

இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது-எந்தாய்!             41

 

'ஒரு கணத்து இரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற

திரு முலைத் தடத்து வைத்தாள்; வைத்தலும், செல்வ! நின்பால்

விரகம் என்பதனின் வந்த வெங் கொழுந் தீயினால் வெந்து

உருகியது; உடனே ஆறி, வலித்தது, குளிர்ப்பு உள் ஊற.      42

 

'வாங்கிய ஆழிதன்னை, "வஞ்சர் ஊர் வந்ததாம்" என்று,

ஆங்கு உயர் மழைக் கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி,

ஏங்கினள் இருந்தது அல்லால், இயம்பலள்; எய்த்த மேனி

வீங்கினள்; வியந்தது அல்லால், இமைத்திலள்; உயிர்ப்பு விண்டாள்.           43

 

'அன்னவர்க்கு, அடியனேன், நிற் பிரிந்த பின் அடுத்த எல்லாம்

சொல் முறை அறியச் சொல்லி, "தோகை! நீ இருந்த சூழல்

இன்னது என்று அறிகிலாமே, இத்துணை தாழ்த்தது" என்றே,

மன்ன! நின் வருத்தப்பாடும் உணர்த்தினென்; உயிர்ப்பு வந்தாள்.                44

 

'இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயையக் கேட்டாள்;

அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறியச் சொன்னாள்;

"திங்கள் ஒன்று இருப்பென் இன்னே; திரு உளம் தீர்ந்த பின்னை,

மங்குவென் உயிரோடு" என்று, உன் மலரடி சென்னி வைத்தாள்.   45

 

சீதை தந்த சூடாமணியை அனுமன் இராமனிடம் சேர்த்தல்

 

'வைத்தபின், துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி,

கைத்தலத்து இனிதின் ஈந்தாள்; தாமரைக் கண்கள் ஆர,

வித்தக! காண்டி!' என்று, கொடுத்தனன் - வேத நல் நூல்

உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான்.      46

 

சூடாமணி பெற்ற இராமனது நிலை

 

பை பையப் பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி,

மெய்யுற வெதும்பி, உள்ளம் மெலிவுறு நிலையை விட்டான்;

ஐயனுக்கு, அங்கி முன்னர், அங்கையால் பற்றும் நங்கை

கை எனல் ஆயிற்று அன்றே - கை புக்க மணியின் காட்சி! 47

 

பொடித்தன உரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித்

துடித்தன, மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி;

மடித்தது, மணி வாய்; ஆவி வருவது போவது ஆகித்

தடித்தது, மேனி; என்னே, யார் உளர் தன்மை தேர்வார்?       48

 

மேலே செய்வன குறித்து இராமன் விரைதல்

 

ஆண்டையின், அருக்கன் மைந்தன், 'ஐய! கேள், அரிவை நம்பால்

காண்டலுக்கு எளியள் ஆனாள்' என்றலும், 'காலம் தாழ,

ஈண்டு, இனும் இருத்தி போலாம்' என்றனன்; என்றலோடும்,

தூண் திரண்டனைய தோளான், பொருக்கென எழுந்து சொன்னான்.          49

 

சுக்கிரீவன் கட்டளைப்படி வானர சேனை புறப்படுதல்

 

'எழுக, வெம் படைகள்!' என்றான்; 'ஏ' எனும் அளவில், எங்கும்

முழு முரசு எற்றி, கொற்ற வள்ளுவர் முடுக்க, முந்தி,

பொழி திரை அன்ன வேலை புடை பரந்தென்னப் பொங்கி,

வழுவல் இல் வெள்ளத் தானை, தென் திசை வளர்ந்தது அன்றே!    50

 

வீரரும் விரைவில் போனார்; விலங்கல் மேல் இலங்கை, வெய்யோன்

பேர்வு இலாக் காவற்பாடும், பெருமையும், அரணும், கொற்றக்

கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய, கணிப்பு இலாத,

வார் கழல் அனுமன் சொல்ல, வழி நெடிது எளிதின் போனார்.         51

 

பன்னிரு நாளில் அனைவரும் தென் கடல் சேர்தல்

 

அந் நெறி நெடிது செல்ல, அரிக் குலத்து அரசனோடும்,

நல் நெறிக் குமரர் போக, நயந்து உடன் புணர்ந்த சேனை,

இந் நெடும் பழுவக் குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர்,

பன்னிரு பகலில் சென்று, தென் திசைப் பரவை கண்டார். 52

 

மிகைப் பாடல்கள்

 

போயினர் களிப்பினோடும், புங்கவன் சிலையின்நின்றும்

ஏயின பகழி என்ன எழுந்து, விண் படர்ந்து, தாவி,

காய் கதிர்க் கடவுள், வானத்து உச்சியில் கலந்த காலை,

ஆயின வீரரும் போய், மதுவனம் அதில் இறுத்தார்.                11-1

 

'"ஏத நாள் இறந்த சால" என்பது ஓர் வருத்தம் நெஞ்சத்து

ஆதலான், உணர்வு தீர்ந்து வருந்தினம், அளியம்; எம்மைச்

சாதல் தீர்த்து அளித்த வீர! தந்தருள் உணவும்' என்ன,

'போதும் நாம், வாலி சேய்பால்' என்று, உடன் எழுந்து போனார்.     11-2

 

அங்கதன் தன்னை அண்மி, அனுமனும் இரு கை கூப்பி,

'கொங்கு தங்கு அலங்கல் மார்ப! நின்னுடைக் குரக்குச் சேனை,

வெங் கதம் ஒழிந்து சால வருந்தின, வேடை ஓடி;

இங்கு, இதற்கு அளித்தல் வேண்டும், இறால் உமிழ் பிரசம்' என்றான்.         11-3

 

'நன்று' என, அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க ஆர்த்து,

சென்று, உறு பிரசம் தூங்கும் செழு வனம் அதனினூடே,

ஒன்றின் முன் ஒன்று, பாயும்; ஒடிக்கும்; மென் பிரசம் எல்லாம்

தின்று தின்று உவகை கூரும்-தேன் நுகர் அளியின் மொய்த்தே.    11-4

 

ஒருவர் வாய்க் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு ஒழிவர்; உண்ண

ஒருவர் கைக் கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடிப் போவர்;

ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர்; விழுவர்; ஓடி

ஒருவர்மேல் ஒருவர் தாவி ஒல்லென உவகை கூர்வார்.         11-5

 

இன்னன நிகழும் காலை, எரி விழித்து, எழுந்து சீறி,

அந் நெடுஞ் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி,

'மன் நெடுங் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து, நீயிர்,

என் நினைந்து என்ன செய்தீர்? நும் உயிர்க்கு இறுதி' என்ன.            11-6

 

'முனியுமால் எம்மை, எம் கோன்' என்று, அவர் மொழிந்து போந்து,

'கனியும் மா மதுவனத்தைக் கட்டழித்திட்டது, இன்று,

நனி தரு கவியின் தானை, நண்ணலார் செய்கை நாண;

இனி எம்மால் செயல் இன்று' என்னா, ததிமுகற்கு இயம்பினாரே. 11-7

 

கேட்டவன், 'யாவரே அம் மதுவனம் கேடு சூழ்ந்தார்?

காட்டிர்' என்று எழுந்தான்; அன்னார், 'வாலி சேய் முதல கற்றோர்

ஈட்டம் வந்து இறுத்தது ஆக, அங்கதன் ஏவல் தன்னால்,

மாட்டின, கவியின் தானை, மதுவளர் உலவை ஈட்டம்'.         11-8

 

'உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால், உறுதி கொண்டே,

குரங்கு இனம் தம்மை எல்லாம் விலக்கினம்; கொடுமை கூறி;

கரங்களால் எற்ற நொந்தேம்; காவலோய்!' என்னலோடும்,

'தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தனயன் போலும்.'                11-9

 

என உரைத்து, அசனி என்ன எழுந்து, இரைத்து, இரண்டு கோடி

கனை குரல் கவியின் சேனை 'கல்' எனக் கலந்து புல்ல,

புனை மதுச் சோலை புக்கான்; மது நுகர் புனிதச் சேனை,

அனகனை வாழ்த்தி, ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த.             11-10

 

'இந்திரன் வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின் கானம்;

அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணைதன்னைச்

சிந்தினை; கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே?

மந்தரம் அனைய தோளாய்! இற்றது உன் வாழ்க்கை இன்றே.         11-11

 

'மதுவனம் தன்னை இன்னே மாட்டுவித்தனை, நீ' என்னா,

கதுமென வாலி சேய்மேல் எறிந்தனன், கருங் கற் பாறை;

அதுதனைப் புறங்கையாலே அகற்றி, அங்கதனும் சீறி,

ததிமுகன் தன்னைப் பற்றிக் குத்தினன், தடக்கைதன்னால்.             11-12

 

குத்தினன் என்னலோடும், குலைந்திடும் மெய்யன் ஆகி,

மற்று ஒரு குன்றம் தன்னை வாங்கினன், மதுவனத்தைச்

செற்றனன்மேலே ஏவிச் சிரித்தனன், ததிமுகன் தான்;

'இற்றனன், வாலி சேய்' என்று இமையவர் இயம்பும்காலை,              11-13

 

ஏற்று ஒரு கையால் குன்றை இருந்துகள் ஆக்கி, மைந்தன்

மாற்று ஒரு கையால் மார்பில் அடித்தலும், மாண்டான் என்ன,

கூற்றின் வாய் உற்றான் என்ன, உம்பர் கால் குலையப் பானு

மேல் திசை உற்றான் என்ன, விளங்கினன், மேரு ஒப்பான்.                11-14

 

வாய் வழிக் குருதி சோர, மணிக் கையால் மலங்க மோதி,

'போய் மொழி, கதிரோன் மைந்தற்கு' என்று, அவன் தன்னைப் போக்கி,

தீ எழும் வெகுளி பொங்க, 'மற்று அவன் சேனைதன்னை,

காய் கனல் பொழியும் கையால் குத்துதிர், கட்டி' என்றான்.               11-15

 

பிடித்தனர்; கொடிகள் தம்மால் பிணித்தனர்; பின்னும் முன்னும்

இடித்தனர், அசனி அஞ்ச, எறுழ் வலிக் கரங்கள் ஓச்சி;

துடித்தனர், உடலம் சோர்ந்தார்; 'சொல்லும் போய், நீரும்' என்னா,

விடுத்தனன், வாலி மைந்தன்; விரைவினால் போன வேலை,            11-16

 

அலை புனல் குடையுமா போல், மதுக் குடைந்து ஆடி, தம்தம்

தலைவர் கட்கு இனிய தேனும் கனிகளும் பிறவும் தந்தே,

உலைவுறு வருத்தம் தீர்ந்திட்டு, உபவனத்து இருந்தார்; இப்பால்

சிலை வளைத்து உலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே.        11-17

 

'சேற்று இள மரை மலர்த் திருவைத் தேர்க!' எனக்

காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை,

நாற்றிசை மருங்கினும் ஏவி, நாயகன் -

தேற்றினன் இருந்தனன் - கதிரின் செம்மலே.            12-1

 

'நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்,

ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான்,

'வாக்கில் தூய அனுமன் வரும்' எனா,

போக்கிப் போக்கி, உயிர்க்கும் பொருமலான்.            14-1

 

என்று உரைத்து, இடர் உழந்து இருக்கும் ஏல்வையின்,

வன் திறல் ததிமுகன் வானரேசன் முன்,

தன் தலை பொழிதரு குருதிதன்னொடும்,

குன்று எனப் பணிந்தனன், இரு கை கூப்பியே.          19-1

 

எழுந்து நின்று, 'ஐய! கேள், இன்று நாளையோடு

அழிந்தது மதுவனம் அடைய' என்றலும்,

வழிந்திடு குருதியின் வதனம் நோக்கியே,

'மொழிந்திடு, அங்கு யார் அது முடித்துளோர்?' என,              19-2

 

'நீலனும், குமுதனும், நெடிய குன்றமே

போல் உயர் சாம்பனும், புணரி போர்த்தென

மேல் எழு சேனையும், விரைவின் வந்து உறா,

சால்புடை மதுவனம் தனை அழிப்பவே.         19-3

 

தகைந்த அச் சேனையைத் தள்ளி, நின்னையும்,

இகழ்ந்து உரைத்து, இயைந்தனன் வாலி செய்; மனக்கு

உகந்தன புகன்ற அவ் உரை பொறாமையே,

புகைந்து, ஒரு பாறையின் புணர்ப்பு நீக்கியே,          19-4

 

'இமைத்தல் முன், "வாலி சேய், எழில் கொள் யாக்கையைச்

சமைத்தி" என்று எறிதர, புறங்கையால் தகைந்து,

அமைத்தரு கனல் என அழன்று, எற் பற்றியே

குமைத்து, உயிர் பதைப்ப, "நீ கூறு போய்" என்றான்.            19-5

 

'இன்று நான் இட்ட பாடு இயம்ப முற்றுமோ?'

என்று உடல் நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில்,

அன்று அவன் உரைத்தல் கேட்டு, அருக்கன் மைந்தனும்

ஒன்றிய சிந்தையில் உணர்ந்திட்டான் அரோ.           19-6

 

ஏம்பலோடு எழுந்து நின்று, இரவி கான்முளை,

பாம்பு அணை அமலனை வணங்கி, '"பைந்தொடி

மேம்படு கற்பினள்" என்னும் மெய்ம்மையைத்

தாம் புகன்றிட்டது, இச் சலம்' என்று ஓதினான்.         19-7

 

'பண் தரு கிளவியாள் தன்னைப் பாங்குறக்

கண்டனர்; அன்னது ஓர் களிப்பினால், அவர்

வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது;

அண்டர் நாயக! இனி அவலம் தீர்க' என்றான்.          19-8

 

'வந்தனர் தென் திசை வாவினார்' என,

புந்தி நொந்து, 'என்னைகொல் புகலற் பாலர்?' என்று,

எந்தையும் இருந்தனன்; இரவி கான்முளை,

நொந்த அத் ததிமுகன் தன்னை நோக்கியே,              19-9

 

'யார் அவண் இறுத்தவர், இயம்புவாய்?' என,

'மாருதி, வாலி சேய், மயிந்தன், சாம்பவன்,

சோர்வு அறு பதினெழுவோர்கள் துன்னினார்,

ஆர்கலி நாண வந்து ஆர்க்கும் சேனையார்.'               19-10

 

என்று, அவன் உரைத்த போது, இரவி காதலன்,

வன் திறல் ததிமுகன் வதனம் நோக்கியே,

'ஒன்று உனக்கு உணர்த்துவது உளது; வாலி சேய்,

புன் தொழில் செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால்.'          19-11

 

'கொற்றவன் பணி தலைக்கொண்டு, தெண் திரை

சுற்றிய திசை எலாம் துருவி, தோகையைப்

பற்றிய பகைஞரைக் கடிந்து, பாங்கர் வந்து

உற்றனர்; அவரை யாம் உரைப்பது என்னையோ?  19-12

 

'அன்றியும், வாலி சேய் அரசு அது; ஆதலின்,

பின்றுதல் தீதுஅரோ; பிணங்கும் சிந்தையாய்!

ஒன்றும் நீ உணரலை; உறுதி வேண்டு மேல்,

சென்று, அவன்தனைச் சரண் சேர்தி, மீண்டு' என்றான்.       19-13

 

என்ற அந் ததிமுகன் தன்னை, 'ஏனைய

வன் திறல் அரசு இளங் குரிசில் மைந்தனைப்

பின்றுதல் அவனை என் பேசற் பாற்று நீ;

இன்று போய், அவன் அடி ஏத்துவாய்' என்றான்.        19-14

 

வணங்கிய சென்னியன்; மறைத்த வாயினன்;

உணங்கிய சிந்தையன்; ஒடுங்கும் மேனியன்;

கணங்களோடு ஏகி, அக் கானம் நண்ணினான்-

மணம் கிளர் தாரினான் மறித்தும் வந்துஅரோ.       19-15

 

கண்டனன் வாலி சேய்; கறுவு கைம்மிக,

'விண்டவன், நம் எதிர் மீண்டுளான்எனின்,

உண்டிடுகுதும் உயிர்' என்ன, உன்னினான்;

'தொண்டு' என, ததிமுகன், தொழுது தோன்றினான்.            19-16

 

'போழ்ந்தன யான் செய்த குறை பொறுக்க!' எனா,

வீழ்ந்தனன் அடிமிசை; வீழ, வாலி சேய்,

தாழ்ந்து, கைப் பற்றி, மெய் தழீஇக்கொண்டு, 'உம்மை யான்

சூழ்ந்ததும் பொறுக்க!' எனா, முகமன் சொல்லினான்.          19-17

 

'யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே

ஏமுற, துயர் துடைத்து, அளித்த ஏற்றம்போல்,

தாமரைக் கண்ணவன் துயரம் தள்ள, நீர்

போம்' என, தொழுது, முன் அனுமன் போயினான். 19-18

 

'வன் திறல் குரிசிலும் முனிவு மாறினான்;

வென்றி கொள் கதிரும் தன் வெம்மை ஆறினான்'

என்றுகொண்டு, யாவரும், 'எழுந்து போதலே

நன்று' என, ஏகினார், நவைக்கண் நீங்கினார்.          19-19

 

இப்புறத்து இராமனும், இரவி சேயினை

ஒப்புற நோக்கி, 'வந்துற்ற தானையர்;

தப்பு அறக் கண்டனம் என்பரோ? தகாது

அப்புறத்து என்பரோ? அறைதியால்!' என்றான்.       19-20

 

வனை கருங் குழலியைப் பிரிந்த மாத் துயர்

அனகனுக்கு அவள் எதிர் அணைந்ததாம் எனும்

மன நிலை எழுந்த பேர் உவகை மாட்சி கண்டு,

அனுமனும் அண்ணலுக்கு அறியக் கூறுவான்:           23-1

 

'மாண் பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த

சேண் பிறந்து அமைந்த காதல், கண்களின் தெவிட்டி, தீராக்

காண் பிறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம் தன்னுள்,

ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே?           35-1

 

'அயிர்ப்பு இலர், காண்பார்; முன்னும் அறிந்திலர் எனினும், ஐய!-

எயில் புனை இலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு ஏற்ற

மயில் புரை இயலினாரும், மைந்தரும், நாளும் அங்கே

உயிர்ப்பொடும், உயிரினோடும், ஊசல் நின்று ஆடுவாரும்.'            35-2

 

ஆயிடை, கவிகளோடும், அங்கதன் முதலினாயோர்

மேயினர், வணங்கிப் புக்கார், வீரனை, கவியின் வேந்தை;

போயின கருமம் முற்றிப் புகுந்தது ஓர் மொம்மல்தன்னால்,

சேயிரு மதியம் என்னத் திகழ்தரு முகத்தர் ஆனார்.               47-1

 

நீலனை நெடிது நோக்கி, நேமியான் பணிப்பான்: 'நம்தம்-

பால் வரும் சேனை தன்னைப் பகைஞர் வந்து அடரா வண்ணம்,

சால்புற முன்னர்ச் சென்று, சரி நெறி துருவிப் போதி,

மால் தரு களிறு போலும் படைஞர் பின் மருங்கு சூழ.'          49-1

 

என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இரு கை கூப்பி,

'புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடைப் புகுதி' என்னா,

தன் தலை படியில் தாழ்ந்தான்; அண்ணலும், சரணம் வைத்தான்;

வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கிச் சொன்னான்:             49-2

 

'நீ இனி என் தன் தோள்மேல் ஏறுதி, நிமல!' என்ன,

வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி,

நாயகற்கு இளைய கோவும், 'நன்று' என அவன்தன் தோள்மேல்

பாய்தலும், தகைப்பு இல் தானை படர் நெறிப் பரந்தது அன்றே.    49-3

 

கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப, காலின்

அருள் தரு குமரன் தோள்மேல், அங்கதன் அலங்கல் தோள்மேல்,

பொருள் தரும் வீரர் போத, பொங்கு ஒளி விசும்பில் தங்கும்

தெருள் தரு புலவர் வாழ்த்திச் சிந்தினர், தெய்வப் பொற் பூ.            49-4

 

'வையகம் அதனில் மாக்கள் மயங்குவர், வய வெஞ் சேனை

எய்திடின்' என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவ,

பெய் கனி, கிழங்கு, தேன், என்று இனையன பெறுதற்கு ஒத்த

செய்ய மால் வரையே ஆறாச் சென்றது, தகைப்பு இல் சேனை.       49-5

 

 

 

சீறாப்புராணம் -உடும்பு பேசிய படலம்

       

.    வடிவுறு முமறெனும் வள்ள னந்நபி

 

     யுடனுயர் தீனிலைக் குரிய ராயபின்

 

     றிடமுடைத் தவர்களாய்ச் சிந்தை யிற்பெறு

 

     மடமக றரப்பெரு மகிழ்ச்சி யெய்தினார்.

 

     பொருள்: நபிகள்நாயகம் அவர்களோடு அழகானது பொருந்தப் பெற்ற உமறு என்னும்  வள்ளலானவர்களும்  இஸ்லாமென்னும் மார்க்கதினை   பின்பற்றினர்.

 அவ்வாறு பின்பற்றிய பின்னர் தைரியமுடையவர்களாகவும்

மனசின்கண் கொண்ட அறியாமையானது அகலும் வண்ணம் பெரிய மகிழ்ச்சியை அடைந்தார்கள்.

 

. செயிரறுந் தீனிலைக் குரிய செவ்விய

 

  பயிரென வருங்கலி மாவைப் பண்பொடு

 

  நயனுறப் பெருக்கிய நண்ப ரியாவரு

 

  முயிரென முகம்மதை யுவந்து காமுற்றார்.

 

       பொருள்:   அது மட்டுமின்றி , குற்றமற்ற தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமைக்கு

உரித்தான அழகிய பயிரைப் போன்ற கலிமாவைத் தகுதியுடன் நன்மையுறும் வண்ணம் மனசின்கண்

பெருகச் செய்தவர்கள்  நபிமுகம்மது அவர்களைத்

தங்களின் ஜீவனைப் போல விரும்பி அன்பு செலுத்தினார்கள் .

 

.    உடலுயிரெனவுவந் துறையு நாளினி

 

     லடலபூ பக்கரு மலியுந் தெவ்வரைக்

 

     கடவிய வேற்கர வுமறுங் கள்ளவிழ்

 

     மடறிகழ் மாலிகை யறபி மன்னரும்.

 

    

 

பொருள்: அவ்வாறு உடலையும் உயிரையும்  போல விரும்பும் நிற்கும் தினத்தில் வலிமையை அபூபக்கர்அவர்களும் அலி அவர்களும் பகைவர்களிடம் இருந்து காத்துக் கொள்வதற்காக வேலாயுதத்தைக்கொண்ட கையையுடைய உமறுகத்தாபு அவர்களும் இதழ்கள் பிரகாசிக்கும் புஷ்பமாலையணிந்தஅறபி வேந்தர்களும்.

 

.   தோமகன்முகம்மது நபியுஞ் சூழ்வர

 

     மாமதி ணகர்ப்புறத் தெய்தி மற்றொரு

 

     தேமலர்ப் பொழிலிடை தெரிய வைகினார்

 

     காமரு மதியமுங் கணமு மென்னவே.

 

 

      பொருள்:  குற்றமானது நீங்கப் பெற்ற நாயகம் நபிமுகம்மது அவர்களும்

தங்களைச் சூழ்ந்து வரும் வண்ணம் பெருமை பொருந்திய மதில்களையுடைய தங்கள் நகரமாகிய

மக்காப் பதிக்கு வெளியில் அடைந்து வாசனையைக் கொண்ட பூக்களையுடைய ஒரு சோலையின்கண்

அழகிய சந்திரனையும் நட்சத்திரங்களையும் போல

 

தங்கியிருந்தார்கள்.

 

5.    செல்லிடுங்குடைநபி செவ்வி காண்டலுங்

 

     கல்லொடு மரமும்புற் கானும் வாவியு

 

     மெல்லிய சிறைப்புள்ளும் விலங்கி னங்களு

 

     மொல்லையூர் வனவனத் துகளுஞ் சாதியும்.

 

   

 பொருள்: அப்போது மேகங்களைக்  குடையாகக் கொண்ட  நபிமுகம்மது அழகைப் பார்த்த மாத்திரத்தில்

அங்குள்ள கற்களுடன் மரங்களும் புற்களையுடைய காடுகளும் தடாகங்களும் மெல்லிய

சிறகுகளையுடைய பட்சிகளும் மிருகக் கூட்டங்களும் விரைவில் ஊர்ந்து திரியும்

ஊர்வனங்களும் காட்டின்கண் பாய்ந்து திரியும் சாதிகளும்.

 

 

 

6 .   தோற்றிய தெவ்வையுந் துலங்கக்கேட்பதா

 

     மாற்றருஞ் சுருதியின் வசனந் தன்னொடும்

 

     போற்றரும் புகழ்ச்சியாற் புகழ்ந்து பொங்கிய

 

     வூற்றமுற் றுயர்சலா முரைத்து நின்றவே.

 

 

 

பொருள்: கண்பார்வைக்குத் தெரியக் கூடிய மற்ற

எல்லாவகைகளும் விளங்கும் வண்ணம் காதுகளினாற் கேட்கும்படியாக மாற்றுதற்கரிய

வேதவசனத்தோடும் போற்றுதற்கு அருமையான துதிகளினால் துதித்து சலாம்  சொல்லி நின்றன.

 

7.    கானகத் துற்றகாரணங்க ளியாவையுந்

 

     தீனவர் செவியுறத் தேக்கிச் சீர்பெற

 

     வானவர் புகழ்தர மக்க மாநபி

 

     யீனமின் மனையகத் தேகி னாரரோ.

 

 

 

      பொருள்:  அப்போது மக்கமா நகரத்தையுடைய நபிமுகம்மது மவர்கள்

தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திற்கு உரியவர்களான முஸ்லிம்கள் அந்தக் காட்டின்

கண் பொருந்திய காரணங்க ளெல்லாவற்றையும் தங்களின் காதுகளிற் பொருந்தும் வண்ணம்

நிறையும்படி கேட்டுச் சிறப்பைப் பெறவும், தேவர்களான துதிக்கவும், குறைபாடற்ற தங்களின்

வீட்டின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

 

 

8 .  அற்றையிற் போழ்தவை யகன்றுபின்னைநாள்

 

     வெற்றிவெங்கதிரயில் வீர ரியாவருஞ்

 

     சுற்றிட மெய்யெழி றுலங்க மானபி

 

     மற்றொரு தலத்திடை வைகி னாரரோ.

 

 

 

      பொருள்:  அவ்வாறு பெருமை பொருந்திய நபிமுகம்மது அன்றைய

தினம் தங்களின் கூட்டத்தை நீங்கி மறுநாள் விஜயத்தையும்  பிரகாசத்தைக்  கொண்ட வேலாயுதத்தையுடைய வீரர்களான

முஸ்லிம்களனைவர்களும் தங்களை வளையும் வண்ணம் வேறேயொரு தலத்தின் கண் போய்த்

தங்கியிருந்தார்கள்.

 

9.    நல்லறிவுடையவர் சூழ நந்நபி

 

     யில்லிருந் தெழுந்திவ ணிருப்ப மற்றொரு

 

     வில்லினன் வலையினன் வேடன் கையினிற்

 

     கல்லிய தடியொடுங் கானி லேகினான்.

 

 

 

     பொருள்:  நல்ல

அறிவையுடையவர்களான முஸ்லிம்கள் சூழும் வண்ணம் நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் அவ்வாறு வீட்டின் கண்ணிருந் தெழும்பி இவ்விடத்தில் தங்கியிருக்க, கோதண்டத்தையும் வலையையுமுடையவனான வேறேயொரு வேடன் தனது

கையில் பூமியைக் கல்லுகின்ற தடியுடனும் காட்டின் கண் சென்றான்.

 

.. கானகஞ் சுற்றியுங் கல்லைத் தள்ளியு

 

   மானினந் தடைபட வலைகள் வீக்கியுந்

 

   தான்மலை முழைஞ்சினுந் தடவி நோக்கியு

 

   மூன்புசித்திடுவதற் கொன்றுங் காண்கிலான்.

 

 

 

பொருள்: அவ்விதம் சென்ற வேடனானவன் காட்டினுள் வளைந்து

திரிந்தும் கற்களைத் தள்ளியும் மான் கூட்டங்கள் தடைபடும் வண்ணம் வலைகளைக்

கட்டியும் மலைகளினது குகைகளிலும்  தடவிப் பார்த்தும் மாமிசம் உண்பதற்காக எதுவும் கிடைக்காமல் இருந்தான் .

 

.   அடவியிற்புகுந்தரும் பதுக்கை சுற்றியோர்

 

     புடையினின்முசலிகை புகுதக் கண்டனன்

 

     றடைபடவலைவயின் சாய்த்து மேற்சிலை

 

     யுடைபடத்தாக்கித்தன் னுரத்திற் பற்றினான்.

 

 

      பொருள்:  அதனால்

அவன் சோலைகளில் நுழைந்து அரிய பாதைகளைச் சுற்றி ஒரு புடையின் கண் ஓருடும்பானது

புகும் வண்ணம் பார்த்தான் . அவ்வுடும்பைத் தடைபடும்படி வலையினிடத்தில் சரித்துப்

புடையினது மேலேயுள்ள கல்லானது உடையும் வண்ணம் அடித்துத் தனது மார்போடும்

பிடித்தான்.

 

       . வள்ளுகி ருடும்பினை வலைக்குண் மாட்டிவை

 

     முள்ளுறைகானமு முரம்பு நீக்கித்த

 

     னுள்ளகமகிழ்வொடு முழையர் சூழ்தர

 

     நள்ளுறைமுகம்மது நபியை நோக்கினான்.

 

       பொருள்:  பிடித்தகூரிய நகத்தையுடைய அந்த உடும்பை அவ்வேடனானவன் வலையினுள்  கட்டித் தனது மனசினுள் மகிழ்ச்சியோடும் முட்கள்தங்கிய காடுகளையும் பாறைகளையும்  தள்ளி

நடந்து தங்களின் உழையர்களான முஸ்லிம்கள் வளையும் வண்ணம் நடுவில் தங்கிய நபிமுகம்மதுவைக்கண்களினாற் பார்த்தான்.

 

 

3 .   மன்னியவறிஞரி னாப்பண் வைகிய

 

    தென்னிவர்க்குறுஞ்செய லியாது கொல்லென

 

    முன்னியவேட்டுவன் மொழிய வாதித

 

    னன்னிலைத்தூதிவர் நபியென் றோதினார்

 

 

பொருள்:  அவ்வாறு பார்த்து இவர் பொருந்திய

அறிவையுடையவர்களான இவர்களின் நடுவில் தங்கினது என்ன காரணம்? அன்றியும், இவருக்கு இசைந்ததொழில் யாது? என்று நினைத்த அந்த வேடன் அங்கிருந்தவர் களிடத்திற்

கேட்டான். அதற்கு அவர்கள் இவர்கள் யாவற்றிற்கும்  முதன்மையனான  நபிமுகம்மது என்று சொன்னார்கள்.

 

 .   மைமுகிற் கவிகைநன்னபிமுன் வந்துநின்

 

     றெம்மறைக்குரியவர் நீவி ரெந்நெறி

 

     செம்மையினடத்துத றெளியச் செப்புமென்

 

     றிம்மொழியறபிவேட் டுவனி சைத்தினன்.

 

 

      பொருள்:  அதைக் கேட்ட அந்த அறபியாகிய வேடன் கறுத்த

மேகக்குடையை உடைய நன்மை பொருந்திய நாயகம் நபிமுகம்மது முன்னர் வந்து நின்று கொண்டுநீவிர் எந்த வேதத்திற்கு உரித்தானவர்? அழகாய் நீர் நடத்துவது

எந்த மார்க்கம்? அவற்றை யான் தேரும் வண்ணம் சொல்லுமென்று

இந்த வார்த்தைகளைக் கேட்டான்.

 

 

5 .   கூறிய வறபியைக்குறித்துக் காசினிக்

 

     கீறினில்வருநபி யான லாதிலை

 

     யூறியபொருட்புறுக் கானென் றோதிய

 

     தேறுநன்மறையெனக் குற்ற செவ்வியோய்.

 

      பொருள்:  அவ்வாறு கேட்ட அந்த அறபியாகிய வேடனை நாயகம்

நபிமுகம்மது மனசின்கண் மதித்து அழகையுடைய வேடனே! யான் இப்பூலோகத்திற்குக் கடைசியாகவந்த நபி. என்னை யல்லாமல் இனிமேல் இந்தப் பூமியின்கண் நபிமார்களுமில்லர். சுரக்கின்றபொருளையுடைய புறுக்கானுல் எனும்  எனக்குற்ற

நன்மை பொருந்திய வேதமானது உயர்வாகும் என்று கூறினார் .

 

6.    என்னுரை நின்றிசுலாமி லாயினோர்

 

     மின்னொளிர்மாளிகைச் சுவன மேவுவர்

 

     பன்னியிம்மொழிபழு தென்னும் பாவியோர்

 

     வன்னியின்குழியிடைக் கிடந்து மாழ்குவார்.

 

 

பொருள்: அன்றியும், எனது வார்த்தைகளில் நின்று தீனுல் இஸ்லாமென்னும்

மார்க்கத்திலானவர்கள் ஒளிரும்  மாளிகைகளை யுடைய

சுவர்க்கலோகத்தைப் பொருந்துவார்கள். இந்த வார்த்தைகளைத் தெளிந்து குற்றமென்று

சொல்லும் பாவிகள் அக்கினியினது குழிகளை யுடைய நரகத்தின்கண் கிடந்து மயங்குவார்கள்.

 

 

7. ஈதுநன்றெனமன மிசைந்தென் னாவினி

 

    லோதிய நன்கலிமாவை யோதிநின்

 

    பாதகந் துடைத்துநற்பதவி யெய்தென

 

    வாதிதன்றூதுவ ரறைந்திட் டாரரோ.

 

 

      பொருள்:  ஆதலால் இதுவே நல்லதென்று உனது மனமானது பொருந்தி

எனது நாவினால் சொல்லும் நன்மை தங்கிய கலிமாவைச் சொல்லி உனது தீமைகளை இல்லாமற்செய்து நல்ல பதவியை அடைவாயென்று நபிமுகம்மது சொன்னார்.

 

 

 8 .     தெரிதரநன்மொழி தெளித்த நந்நபி

 

     மரைமலர்ச்செவ்விய வதன நோக்கிநும்

 

     முரைமறுத்திலனெனக் குண்மை யாகவித்

 

     தரையினினபியெனச் சாட்சி வேண்டுமால்.

 

 

      பொருள்: அவ்வாறு நல்ல வார்த்தைகளைத் தெரியும் வண்ணம்

தெளித்துச் சொன்ன நபிமுகம்மதுவின் தாமரைமலர் போன்ற அழகிய முகத்தை அந்த வேடன்

பார்த்து யான் தங்களுடைய வார்த்தைகளை மறுக்கவில்லை. எனக்கு இப்பூலோகத்தின்கண்

தாங்கள் நபியென்று சொல்லும்படி மெய்யாக சாட்சி வேண்டுமென்று சொன்னான்.

 

     9.  கானிடை யறபியிவ் வுரையைக்காட்டலுந்

 

     தேனகுமலர்ப்புயச் செவ்வி நன்னபி

 

     வானிடைமண்ணிடைப் படைப்பின் மற்றதி

 

     லீனமில்கரியுனக் கியைவ தேதென்றார்.

 

 

      பொருள்: அந்தக் காட்டின்கண் அறபியாகிய அவ்வேடன் இந்த

வார்த்தைகளை வெளிப்படுத்தின மாத்திரத்தில் மலர்மாலையணிந்த தோள்களையுடைய அழகிய நபிமுகம்மதுவானலோகத்தின் கண்ணும் பூலோகத்தின் கண்ணுமுள்ள படைப்புகளில் குறைபாடற்ற சாட்சியாகஉனக்குப் பொருந்துவது யாதென்று கேட்டார்கள்.

 

 

  .    கடும்பரற் கான்கவிழ் வலையினுட்படு

 

     முடும்பெனதிடத்திலொன் றுளது முள்ளெயி

 

     றிடும்பகுவாய்திறந் தினிதி னாகநும்

 

    மொடும்பகர்ந் திடின்மறுத் துரைப்ப தில்லையே.

 

 

      பொருள்: அவ்விதம் கேட்கவே வேடன் கடிய

பரற்கற்களையுடைய காட்டின்கண் கவிழ்த்திய வலையினது அகத்தில் அகப்பட்ட ஓருடும்பானது

என்னிடத்திலுள்ளது. அவ்வுடும்பு தனது கூர்மையாகிய பற்களைத் தரித்த பிளந்த

வாயைத்திறந்து  இன்பமாக உங்களுடன் பேசினால்

அதை யான் மறுத்துச் சொல்லுவது வேறொன்றும்  இல்லையென்று

சொன்னான்.

 

 

 .    என்றுரை பகர்ந்தவ னிதயங் கூர்தர  

       நன்றென முறுவல்கொண் டினிய நந்நபி

     குன்றினிறறிரிதரு முடும்பைக் கூடிய

      மன்றினிலவிடுகவென் றுரைவ ழங்கினார்.

 

 

     பொருள்:  என்று கூறிய  அந்த வேடனின் மனமானது ஏற்கும் வண்ணம்

இனிமையையுடைய நபிமுகம்மது நல்லதென்று சிரித்து மலைகளில் திரியும் அந்த உடும்பைக்கூட்டமுற்ற இந்த சபையின்கண் விடுவாயாகவென்று கூறினார்.

 

 

 

 .      கானிடைதிரிந்தறத் தவித்துக் காறளர்ந்

 

     தேனினி விடிலுடும் பெளிதி னெய்திடா

 

     தானதான் மடிமிசை யாக்கி னேனறுந்

 

    தேனவிழலங்கலோ யென்னச் செப்பினான்.

 

 

பொருள்:  அவர்கள் அவ்விதம் கூறவே  அந்த வேடனானவன் நறிய தேனானது நெகிழப் பெற்ற மலர்மாலையையுடையவர்களே! நான்  இந்த உடும்பைப் பிடிப்பதற்காய்க்

காட்டின்கண் திரிந்து மிகவும் இளைத்து இரண்டு கால்களும் தளர்ச்சியடைந்தேன். இனி

இதை விட்டால் இவ்வுடும்பு இலேசாய் நம்மிடத்திற் சேராது. ஆனதினால் அதை யான் எனதுமடியின்மீது வைத்துக் கொள்கிறேன் சொல்லினான்.

 

 

3.   எடுத்துன துடும்பையென் னிடத்தின் முன்னிதா

 

     விடுத்திடிலகன்றிடா தெனவி ளம்பலு

 

     மடுத்தமென்மடிபுகு முடும்பை வாங்கியங்

 

     கடுத்தனன்விடுத்தன னறபி வேடனே.

 

 

      பொருள்: அப்போது நாயகம் நபிமுகம்மது உனது உடும்பைத்

தூக்கி எனது இடத்தின் முன்னாக விட்டால் அவ்வுடும்பானது அவ்விடத்தை விட்டும்

நீங்கிச் செல்லாதென்று சொன்ன மாத்திரத்தில் அறபியாகிய அந்த வேடன் நிறைந்த மெல்லிய

தனது மடியின்கண்  நிற்கும் அவ்வுடும்பை

வாங்கி அந்நபிகள் பெருமானவர்களை நெருங்கிக் கீழே விட்டான்.

 

 

 .  நெடுந்தலையெடுத்துவா னிமிர்த்து முள்ளெனப்

 

     படுந்தரத்துகிர்நிலம் பதிப்ப வூன்றியெள்

 

     ளிடுந்தரையகன்றிடா திறைவன் றூதெனத்

 

     திடந்தரமனத்தினிற் றெளிந்து நோக்கிற்றே.

 

 

      பொருள்: அவ்வாறு விடவே அவ்வுடும்பானது நெடிய தனது

தலையைத் தூக்கி வாலை நிமிரும்படி செய்து முள்ளைப்போலுண்டாகிய தன்மையையுடைய

நகங்களைப் பூமியின் கண் பதியும் வண்ணம் ஊன்றி எள்ளிடும் அளவுள்ள தலமாயினும்

நீங்கிச் செல்லாது நபிமுகம்மதுவை யாவற்றிற்கும் இறைவனின் தூதுவன் என்று வலிமை

தரும்படி மனசின்கண் தேறிப் பார்த்தது.

 

 

5 .   ஆரமு தனையசொல் லரியவாய்திறந்

 

     தோர்மொழிநந்நபி யுடும்பைக் கூவலுஞ்

 

     சீர்பெறவருவிழி திறந்து நோக்கிநின்

 

     றீர்தருநாவெடுத் தியம்பிற் றன்றரோ.

 

 

      பொருள்: அவ்விதம் பார்க்கவே  நபிமுகம்மது  நிறைந்த தேவாமிர்தத்தைப் போலும்

வார்த்தைகளையுடைய அருமையான தங்களின் வாயைத் திறந்து ஒப்பற்ற வார்த்தையாக அந்த

உடும்பைக் கூப்பிட்ட மாத்திரத்தில் அவ்வுடும்பானது கீர்த்தி பெறும் வண்ணம் தனது

இரண்டு கண்களையும் திறந்து நின்று அந்நபிகள் பெருமானவர்களைப் பார்த்துப்

பிளவையுடைய நாவைத் தூக்கி பதில் பேசிற்று.

 

6    . இகம்பர மெனவரு மிருமைக் குண்மையா

 

    யுகம்பலவுதிக்குமுன் னுதித்துப் பின்னுதித்

 

     தகம்பயிலாரணத் துறைந்து செப்புமுச்

 

     சகம்புகழ்ந்திடவருந் தக்க நீதியோய்.

 

 

      பொருள்: இம்மை மறுமையென்று சொல்லும் இரண்டிற்கும்

சத்தியமாகப் பலயுகங்களும் தோற்றமாகும் முன்னர்த் தோற்றமாகிய நபிமார்களுக்கெல்லாம்

பின்னர் இவ்வுலகத்தின் கண் அவதரித்து மனமானது பழகா நிற்கும் வேதங்களில் தங்கிச்சொல்லா நிற்கும் வானம், பூமி, பாதாளமாகிய

மூன்று லோகங்களும் துதித்திடும் வண்ணம் வந்த தகுதியான நீதியை யுடையவர்களே!

 

7  .    அண்டர்கள் பரவுநும் மடியை நாடொறுந்

 

     தெண்டனிட்டிருவிழி சிரசின் மீதுறக்

 

     கொண்டசிற்றடிமையே னுய்யக் கொண்டுவாய்

 

     விண்டெனைவிளித்தவை விளம்பு கென்னவே.

 

 

      பொருள்: தேவர்களான  வணங்கி  நிற்கும் தங்களின் பாதங்களைப் பிரதி தினமும்

வணங்கி இரண்டு கண்களிலும் தலையின் மீதும் வணங்கியது. பின் சிறிய அடிமையனான யான்ஈடேறும்படி கொண்டு தங்களின் வாயைத்திறந்து என்னைக் கூப்பிட்ட சமாச்சாரங்களைச்சொல்லுங்களென்று கேட்டது .

 

 

8 .   தேறிய மொழியிவை செவியிற் சார்தலு

 

     மாறிலாதியாரைநீ வணங்கு கின்றனை

 

     வேறறவுரையென விளங்கு நந்நபி

 

     கூறலுமுசலிகை மறுத்துங் கூறுமால்.

 

 

      பொருள்:  தெளிவையுற்ற இந்த வார்த்தைகள் காதுகளிற்

பொருந்தின மாத்திரத்தில்   நபிமுகம்மது  நீ மாறாது யாரை வணங்குகின்றாய்? அதை வேற்றுமையில்லாத படி  சொல்லென்று கேட்டளவில் அவ்வுடும்பானது அதற்கக் கூறியதாவது .

 

 

     9 .  மருமலி வள்ளலியான் வணங்கு நாயக

 

      னொருவனன் னோனெழி லுயர்சிங் காசனம்

 

      பொருவரும் வானில்ரா சாங்கம் பூமியிற்

 

      றெரிதருங் கிருபையோ செம்பொ னாட்டினில்.

 

 

      பொருள்:  கஸ்தூரி வாசனையுடையை  வள்ளலானவர்களே! நான் வணங்குகின்ற நாயகனானவன்

ஏகன். அவனுடைய அழகிய மேலான சிங்காசனமானது ஒப்பற்ற வானலோகத்தில், இராஜாங்கம் பூமியில்,  அவருடைய  கருணை சிவந்த பொன்னாலான சொர்க்க லோகத்தில்.

 

 

    .  தீதிக லற்றவன் சினந்து செய்யுமவ்

 

     வேதனைநரகமென் றெரியும் வீட்டினிற்

 

     பேதமிலன்னதோர் பெரிய வன்றனை

 

     யோதியான்வணங்குவ துண்மை யென்றதே.

 

      பொருள்:  தீமையும் பகைமையும் மற்று அவன் கோபித்துச்

செய்கின்ற அந்த வேதனையானது நரகலோகமென்று சொல்லி நிற்கும் வீட்டில் மாறுபாடற்ற

அவ்வித ஒப்பில்லாத பெரியவனான  ஆலாவைத்

துதித்து நான் வணங்குவது சத்தியமென்று சொல்லிற்று.

 

 

3 .   அறத்தொடு முரைத்தனை யென்னை

      யாரெனக்குறித்தனையெனநபி கூறக் கேட்டலுஞ்

 

     சிறுத்தமுள்ளெயிற்றவெண் ணிறத்த செம்முனை

 

     யிறுத்தநூலிரட்டைநா வெடுத்தி யம்புமால்.

 

 

      பொருள்:  அப்போது  நபிமுகம்மது  அவ்வுடும்பை நீ தருமத்தோடும் சொன்னாய். ஆனால்என்னை யாரென்று மதித்தாயென்று சொல்லும்படி கேட்ட மாத்திரத்தில் சிறுத்த முள் போன்றபற்களையுடைய வெள்ளிய நிறமும் சிவந்த நுனியும் தங்கிய பஞ்சின் நூலையொத்த தனதுஇரட்டை நாவுகளைத் தூக்கிச் சொல்லும்.

 

     .  பரவைவிண்ணிலமலை பருதி மற்றவு

 

     முரியநும்மொளிவினி லுள்ள வுண்மையிற்

 

     றெரிதரமுதலவன் செவ்வித் தூதரா

 

     யிருநிலநபிகளி னிலங்கு மேன்மையா.

 

 

      பொருள்: சமுத்திரமும் ஆகாயமும் பூலோகமும் மலைகளும்

சூரியனும் மற்றவைகளும் உரித்தான தங்களின் ஒளியிலுள்ளன. அன்றியும், சத்தியமாய் விளங்கும் வண்ணம் யாவற்றிற்கும் முதன்மையனான ஆலாவின்

அழகிய பெரிய இந்தப் பூமிலோகத்தினது நபிமார்களில் பிரகாசியா நிற்கும் மேன்மையாக.

 

 

      3.   ஈறினில் வருநபி யிவணும்வாக்கினிற்

 

      கூறிய மார்க்கமே மார்க்கங் கோதறத்

 

      தேறினர் சுவர்க்கமே சேர்வர் தீதென

 

     வேறுரைத்தவரவர் நரகின் வீழ்வரால்.

 

 

      பொருள்: கடைசியில் வந்த நபியானவர்கள் இப்பூமியின்கண்

தங்களுடைய வாக்கினாற் சொல்லிய மார்க்கமே மார்க்கம். அதைக் குற்றமறும் வண்ணம்தெரிந்தவர்கள் சுவர்க்கலோகத்தைச் சேருவார்கள். குற்றமென்று வேறுபாடாய்க் கூறினவர்கள் அவர்கள் நரகலோகத்தின்கண் விழுவார்கள்.

 

 

3  .    இனிதினும் பெயர்க்கலி மாவையென்னொடும்

 

     வனமுறையஃறிணை வாழ்த்து கின்றது

 

     நனிபுகழுண்மைநன் னபியு நீரலாற்

 

     பினையிவணிலையென வுடும்பு பேசிற்றே.

 

 

     பொருள்: இன்பமாய்த் தங்களின் திருநாமத்தையுடைய

கலிமாவை என்னுடன் காட்டின்கண் தங்கிய அஃறிணைச் சாதிகள் துதிக்கின்றன. மிகுத்தகீர்த்தியையுடைய மெய்யான நன்மை பொருந்திய நபியும் நீங்களே யல்லாமல்

இவ்வுலகத்தின்கண் வேறே நபிமார்கள் இல்லை  என்று

அந்த உடும்பானது சொல்லிற்று.

 

 

35 .          உடும்பிவை யுரைத்தலுமுவந்து தன்மனத்

 

                திடும்பினைத் தவிர்த்துநின் றறபி யென்பவன்

 

                  குடும்பமுமெளியனுங் குபிரி னாற்றினம்

                  படும்பவந்தவிர்கெனப் பாதம் பற்றினான்.

 

 

பொருள்:  அந்த உடும்பானது இந்த சமாச்சாரங்களைச் சொன்ன

மாத்திரத்தில் அவ்வறபியாகிய வேடனென்று சொல்லப்பட்டவன் மனசின்கண் விருப்பமடைந்துதனது துன்பங்களை ஒழித்து நின்று எளிமையையுடையவனான யானும் எனது குடும்பமும் குபிர்மார்க்கத்தினால் பிரதி தினமும் படும் பாவத்தை ஒழியுங்களென்று சொல்லி நபிமுகம்மதுவின்பாதங்களைப் பிடித்தான்.

 

 

36 .      வண்ணவொண்புயநபி பாதம் வைத்தகை

 

     கண்ணினிற்பதித்தகங் கனிய முத்தமிட்

 

     டெண்ணிலவுவகையுற் றெவரும் போற்றிட

 

    வுண்ணெகிழ்ந் தருங்கலி மாவை யோதினான்.

 

    

பொருள்:  அழகிய பிரகாசத்தைக் கொண்ட தோள்களையுடைய நபிமுகம்மதுவின்

பாதங்களில் அவ்வாறு வைத்த கைகளைக் கண்களில் பதியும்படி செய்து மனமானது கனியும்வண்ணம் முத்தமிட்டான். கணக்கில்லாத மகிழ்ச்சியடைந்து எல்லோரும்  துதிக்கும்படி இருதயம் நெகிழப் பெற்று அருமையான

கலிமாவைத் தமது வாயினால் ஓதினார்.

 

 

37.           புதியவ னபிகலி மாவின் பொற்புற

வொதுவுடன்வருமுறை யொழுகி மாமறை

 

                 விதிமுறைத்தொழுகையு மேவி மேதையின்

 

                  முதியவனிவனென முசுலி மாயினான்.

 

       பொருள்: அவ்விதம் நபியவர்கள்  ஓதிய கலிமாவை புதியவனான வேடனும் கலிமாவினது  முறைமைகளில் நடந்து மகத்தான விதியினது

ஒழுங்குகளையுடைய தொழுகையையும் விரும்பி இவர் அறிவினது முதியவரென்றுசொல்லும்வண்ணம் முசிலிமாயினார்.

 

 

  8  . உனைப்பிடித் தடர்ந்தன னுனது செய்கையா

 

            லெனைப்பிடித் தடர்பவ மின்று போக்கினேன்

 

     மனைத்தடவளைசெலென் றுடும்பை வாழ்த்தினான்

 

     பனைத்தடக்கரக்களி றனைய பண்பினான்.

 

 

      பொருள்:  அன்றியும், பனைமரத்தையொத்த பெரிய துதிக்கையைக் கொண்ட யானையைப் போன்ற தகுதியையுடையவரான அவர் அந்தஉடும்பை யான் உன்னை நெருங்கிப் பிடித்தேன். உனது செய்கையினால் என்னைப் பிடித்துநெருங்கியபாவங்களை இன்றையதினம் போக்கடித்தேன். ஆதலால் உனது வீடாகிய பெரிய

வளையின்கண் போவாயாக வென்று சொல்லி ஆசீர்வதித்தார்.

 

 

39 .     உறைதருங்குழுவின ருவப்ப நோக்கித்தன்

 

     னறபிதன்முகமல ரதனை நோக்கிமெய்

 

     மறைநபிபங்கய வதன நோக்கிப்பின்

 

     னிறைதருமகிழ்ச்சிபெற் றுடும்பு நின்றதே

 

 

      பொருள்: அப்போது அந்த உடும்பானது அங்கு தங்கியகூட்டத்தார்கள்  மகிழும் வண்ணம் அவர்களைப்பார்த்து தனது அறபியினது முகமாகிய தாமரைப் புஷ்பத்தைப் பார்த்து சத்திய

வேதத்தையுடைய நாயகம் நபிமுகம்மதுவின் முண்டக மலர்போன்ற முகத்தைப் பார்த்துப்பின்னர் பூரணப்பட்ட சந்தோஷத்தைப் பெற்று நின்றது.

 

         . மருப்புய நபிதிரு மதுர வாய்திறந்

 

     திருப்பிடத்தேகென வுடும்புக் கின்புற

 

     வுரைப்பதுகேட்டுளங் கனிந்து கானிடை

 

    விருப்பொடும் போயது விலங்கின் சாதியே.

 

       பொருள்:  அவ்விதம் நிற்கவே, வாசனையைக்

கொண்ட தோள்களையுடைய நாயகம் நபிமுகம்மது தங்களின் தெய்வீகமுற்ற இனிமையையுடைய வாயைத்திறந்து அந்த உடும்பை நீ உனது இருப்பிடத்திற்குச் செல்லென்று மகிழ்ச்சி பொருந்தும்வண்ணம் சொன்னதை விலங்கின் இனமாகிய அந்த வுடும்பானது தனதுகாதுகளினாற்கேள்வியுற்றுமனமானது கனியப் பெற்று விருப்பத்தோடும் காட்டின்கண் சென்றது.

 

 

 

Unit -3

 

பிச்சிப்பூ

 

பிச்சிப்பூ என்னும் பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்ட நாவல். பாதிக்குப் பின் தான் தோன்றுகிறாள் பிச்சிப்பூ. அதுவரை அவளது கணவன் மூர்த்தியார் பற்றியும், மீட் பாதிரியார் பற்றியும், சாதி முறைகள் பற்றியும் தான் விலா வாரியாக எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவர்களுக்கும், உயர் சாதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட வேலை ஹிந்துக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இல்லாமல் இருந்த உண்மையை எடுத்துரைத்துள்ளார்.

குமாரகோவிலில் நாடார் சமுதாயத்தினர் நடத்திய கோவில் நுழைவு போராட்டத்தையும், அதில் பிச்சிப் பூ காட்டிய வீர தீரத்தையும் காட்சிப்படுத்தி நிறைவு செய்துள்ளார். நுாறு ஆண்டுகளுக்கு முன் இருந்த கன்னியாகுமரி மாவட்ட பேச்சு வழக்கிலேயே கதையை நகர்த்திச் செல்கிறார்.

அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியது. விறுவிறுப்பு அதிகம். நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய சமூகத்தில் நிலவிய கொடுமைகளைத் தோல் உரித்துக் காட்டும் நுால்.

ஐம்பெருங் காப்பியங்கள்

  • சிலப்பதிகாரம் (Silappadhikaram)
  • மணிமேகலை (Manimekalai)
  • சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
  • வளையாபதி (Valaiyapathi)
  • குண்டலகேசி (Kundalakesi)

ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐம்பெருங் காப்பியங்கள் என்பர்.

இவ் ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். இவை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடுவார்கள். இவ்விரண்டும் கதை நிகழ்ச்சியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மேலும் சமகாலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

1 ) . சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இது சேரன் செங்குட்டுவன் சகோதரர் இளங்கோஅடிகள் இயற்றிய காப்பியமாகும். அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள் கோவலன், கண்ணகி,மாதவி இக் கதையில் முக்கிய பாத்திரங்கள்.கண்ணகி கற்பு நெறி தவறாமல் வாழும் பத்தினி .மாதவி பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய். கோவலன் தனது செல்வம் அனைத்தையும் முறை இல்லாமல் செலவழித்து கடைசியில் மிஞ்சிய தனது மனைவியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு வருகிறான். கடைவீதியில் அதை விற்க முயலும் போது அரண்மனைக் காவலர்களால் அரசியின் சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மன்னர் முன் விசாரணை கைதியாக நிற்க வைக்கப்படுகிறான். மன்னன் கோவலன் விற்க முயன்ற சிலம்பு அரசியின் சிலம்பு என குற்றம் சாட்ட,கோவலன் அது தனது மனைவி கண்ணகி யின் காற்சிலம்பு என மறுக்கிறான். ஆனால் மன்னனின் தவறான தீர்ப்பால் கொலை செய்யப்படுகிறான்.கணவன் கொலையுண்ட செய்தி கேட்டு கண்ணகி கோபாவவேசமாக அரசனின் அரச சபைக்கு வருகிறாள்.

  • மன்னனின் தீர்ப்பு தவறு என நீதி கேட்கிறாள்.மன்னன் தனது மனைவியின் காற்சிலம்பில் உள்ளது முத்து என கூற தனது சிலம்பில் உள்ளது மாணிக்க பரல்கள் என சிலம்பை வீசி உடைத்து நிருபிக்கிறாள்.
  • நீதி தவறிய மன்னன் அக்கணமே உயிர் விடுகிறான்.அரசியும் உடன் உயிர் விடுகிறாள்.கண்ணகி மதுரை நகரமே முதியவர்,குழந்தைகள்,பெண்கள் தவிர மற்ற அனைத்தும் (மதுரை நகரமே) தீக்கிரையாக சபிக்கிறாள்.

2 ) மணிமேகலை

மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.

  • அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும்அட்சய பாத்திரம்கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

3 ) சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணி காலத்தால் முதன்மையானதாகும். வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். இதற்கு முதல் நூல் க்ஷத்திர சூடாமணி என்பர். இக்காப்பியத் தலைவன் பெயர் சீவகன் ஆகும். சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும். அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம் என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர். சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். அத்தியாயம் என்றும் சொல்லலாம். அதாவது உட்பிரிவுக்குத் திருத்தக்கத்தேவர் வைத்த பெயர் இலம்பகம் ஆகும். முத்தி இலம்பகம் தவிர ஏனையவை மகளிர் பெயரையே பெற்றுள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில் மணநிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. சீவகன் எட்டு பெண்களை மணக்கின்ற நிகழ்ச்சி எட்டு இலம்பகங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் இக்காப்பியத்திற்கு மணநூல் என்ற பெயரும் உண்டு. பதிகத்தில் காப்பியத்தின் கதைச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது.

  • இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்கதேவர் சமண முனிவராவார். இவர் திருத்தகு முனிவர் என்றும், திருத்தகு மகா முனிவர் என்று அழைக்கப் பெறுவார். இவர் சைன ஆசாரியர் சங்கங்களில் ஒன்றாகிய திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் என்பர். இவர் வாழ்ந்த காலமும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கும் 7ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தவர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கியவர். வடமொழிப் பயிற்சி மிக்கவர். காமம், பொய், கொலை, கள், சூதாடல் என்ற ஐவகைத் தீமையும் அகற்றியவர். சமணத் துறவியாக வாழ்ந்தவர். விருத்தமெனும் பாடல்களைக் கொண்டு பெருங்காப்பியம் பாடியவர்களில் இவர் முதன்மையானவர்.
  • ஒரு சமயம் திருத்தக்கதேவர் மதுரை சென்றிருந்தபோது, அங்கிருந்த புலவர்கள், சமண சமயத்தவர் துறவறம் பற்றிப் பாட இயலுமே ஒழிய அகப்பொருட் சுவை மிக்க இன்பத்துறைப் பாடல்களைப் பாட இயலாது என்று இகழ்ந்துரைத்தனர். இதனால் மனவருத்தமுற்றை இவர் தம் ஆசிரியரிடம் இதுபற்றி கூறினார். இவரின் திறமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய ஆசிரியர், அப்பொழுது குறுக்கே ஓடிய நரி ஒன்றைப் பற்றி ஒரு நூல் இயற்றுமாறு கூறினார். அப்போதே ஆசிரியர் போற்றும் வண்ணம், செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறும்நரி விருத்தம்என்னும் அற்புதமான ஒரு சிறு நூலை இயற்றினார். திருத்தக்கதேவரின் கற்பனைத் திறனைக் கண்டு வியந்த ஆசிரியர் சீவகன் வரலாற்றை அகப்பொருள் சுவை மிளிர பெருங்காப்பியமாக பாடுமாறு கட்டளையிட்டார். அதோடுசெம்பொன்வரைமேல்என்ற ஒரு பாடலை எழுதி அவரிடம் கொடுத்து, அதனையே கடவுள் வாழ்த்தாகக் கொண்டு நூலைத் தொடங்குமாறு கூறினார். ஆசிரியர் பாடிய அப்பாடலோடு திருத்தக்கதேவரும், ‘மூவா முதலாஎனத் தொடங்கும் சித்தரைத் துதிக்கும் பாடல் ஒன்றைப் பாடினார். ஆசிரியர் தாம் பாடிய பாடலைவிட தம் மாணவர் பாடிய பாடல் சிறப்பாக இருப்பது கண்டு, திருத்தக்கதேவரின் பாடலை முதலாகவும், தம் பாடலை இரண்டாவதாகவும் வைக்கும்படி கூறினார். அதனால் தான் இக்காப்பியத்தில் சித்தர் வணக்கம் முதலாவதாகவும், அருகர் வணக்கம் இரண்டாவதாகவும் உள்ளது. திருத்தக்க தேவர் இக்காப்பியத்தை எட்டே நாட்களில் பாடி அருளியதாகக் கூறுவர்.
  • பாண்டியன் அவையிலே திருத்தக்கதேவர் தமது நூலை அரங்கேற்றினார். காப்பியத்தின் நடை, அழகு, அமைப்பு, ஒன்பது சுவைகள் ஆகியவற்றைக் கண்டு புலவர்கள் பலர் வியந்து பாராட்டினர். ஆனால் சில அழுக்காறு கொண்ட புலவர்கள், இன்ப சுவை கொண்ட பாடல்களைப் பாட வேண்டுமாயின் இவருக்கு நல்ல முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். இது கேட்ட திருத்தக்கதேவர் கையிலே நெருப்பை ஏந்தி தமது அகத் தூய்மையை அனைவரும் அறியச் செய்தார்.
  • பின்வந்த கம்பர் போன்ற பெரும் புலவர்களுக்குச் சீவக சிந்தாமணி கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது என்றால் மிகையாகாது

 

4 ) வளையாபதி

வளையாபதியின் ஆசிரியர் பெயர், இயற்றப் பட்ட காலம், அக்காவியத் தலைவன் பெயர், காவியத்தின் கதை போன்றவை தெரியவில்லை. இக்காவியத்தின் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளன. அவற்றில் 66 பாடல்கள் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டிலும், 3 பாடல்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாகவும், 2 பாடல்கள் யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் மேற்கோளாக் காணப்படுவதும் கடவுள் வாழ்த்துப் பாடலென்று கருதப்படுவதுமாகிய எஞ்சிய 1 பாடல் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோளாகவும் கிடைத்துள்ளன. இது ஒரு சமண சமய நூல்.

  • புகார் நகரில் நவகோடி நாராயணன் என்னும் செல்வச் செழிப்புமிக்க வணிகன் இருந்தான். அவன் சைவ சமயத்தவன். அவனுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி அவன் குலத்தைச் சார்ந்தவள். இரண்டாம் மனைவி வேறு குலத்தைச் சார்ந்தவள். அவன் வேற்றுச் சாதிப் பெண்ணை மணந்ததை எதிர்த்து அவன் குலத்தவர்கள் அவனைச் சாதியைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அச்சுறுத்தவே அவன் தன் இரண்டாம் மனைவியை விட்டுப் பிரிந்தான். அவன் பிறிந்த சமயத்தில் அப் பெண் கருவுற்றிருந்தாள். பின்னர் அவன் கடற்பயணத்தை மேற்கொண்டு பெரும்பொருள் ஈட்டித் திரும்பித் தன் முதல் மனைவியுடன் இன்பமாக வாழ்ந்து வந்தான். இரண்டாம் மனைவி தன் துன்பம் தீர காளி தேவியை வழிபட்டு வந்தாள். சில மாதம் கழித்து அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனை நன் முறையில் வளர்த்து வந்தாள். அச்சிறுவனுடைய விளையாட்டு தோழர்கள் அவனைத் தகப்பன் பெயர் தெரியாதவனென்று எள்ளித் துன்புறுத்தவே, அச்சிறுவன் அதுபற்றி தன் தாயிடம் முறையிட்டான். அவள் ஒருவழியாக அவன் தந்தையின் பெயரை அவனுக்குத் தெரிவித்தாள். அது கேட்ட அவன் தன் தந்தையைத் தேடிச் சென்று தன்னை மகனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். ஆயினும் ஊர்க் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு நவகோடி நாராயணன் அவனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறான். பின்னர் அவன் தாய் காளியின் உதவியால் செட்டிச்சாதிப் பெரியவர்களிடம் தன் கற்பின் உண்மையை நிலைநாட்டுகிறாள். நாராயணனும் அவனைத் தன் மகனாக ஏற்று அவனுக்கு வீரவாணிபன் எனப் பெயரிட்டு, அவர்களுடன் இனிது வாழ்ந்தான்.
  • இவ்வாறு இக் காப்பியத்தின் கதை கூறப்பட்டாலும், இந்நூல் சமண சமயக் கருத்துக்களையும் கூறுவதால், சமண நூலில் காளியைப் பற்றிய செய்திகள் இடம் பெற வாய்ப்புகள் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்நூலின் செய்யுட்கள் முழுமையாக கிடைக்கப் பெறாததால் இதுபற்றி அறுதியிட்டுக் கூற இயலவில்லை.

5 ) குண்டலகேசி

இந் நூலின் நாயகி குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளை அடித்து, அரசனால் கொலைகளத்துக்கு அனுப்பப்பட்டான். அப்போது அவனைச் சாளரத்தின் வழியே கண்டு, அவள் அவன் மீது காதல் கொண்டாள். அது அறிந்த அவள் தந்தை அரசனுக்கு பொருள் தந்து அக்கள்வனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைத்தார். இருவரும் சிலகாலம் இனிது வாழ்ந்த பின்னர், அவனுக்கு மனைவியின் நகைகளை கொள்ளை அடிக்கும் எண்ணம் வரவே, அவளைத் தனியே அருகில் இருந்த சேரர் மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான். அவன் நடத்தையில் சந்தேகம் கொண்ட பத்தா அது பற்றி கேட்க, அவன் நகைகளைப் பறித்துக் கொண்டு அவளை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட இருப்பதைக் கூறினான். அது கேட்ட அவள் சாவதற்கு முன் கடைசியாக அவனை ஒருமுறை சுற்றி வந்து வணங்கவிரும்புவதாகக் கூறி அவனை அம் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டாள். பின்னர் அவள் சமண மதத்தை தழுவினாள். அவள் தலைக் கூந்தல் பனங்கருக்கு மட்டையால் மழிக்கப்பட்டது. பின்னர் வளர்ந்த அவள் முடி வளைந்து குண்டலம் போக் காட்சி யளித்ததால் குண்டலகேசி என வழங்கப்பட்டாள். அவள் பல இடங்களில் வாதம் புரிந்து, கடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று பௌத்தத் துறவியானாள்.

  • இக் காப்பியத்தில் தற்சமயம் 19 பாடல்களே கிடைக்கப் பெற்றுள்ளன. இந் நூல் பௌத்த சமயத்தைச் சார்ந்தது. இந்நூலாசிரியர் நாதகுத்தனார் ஆவர். இந்நூலின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆகும். இந்நூலுக்கு குண்டலகேசி விருத்தம் என்கிற பெயரும் உண்டு.


ஐஞ்சிறு காப்பியங்கள்

பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள்சிறுகாப்பியம்எனப்பட்டன.

உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.

உதயணகுமார காவியம்

வத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல். கந்தியார் (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது.

இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது. கதையமைப்பு சிக்கலானதாகவும், இரு கதைத் தலைவர்களைக் கொண்டும் உள்ளது. பெயர் தான் காவியமே தவிர காவிய இயல்போ ஏற்றமோ நடை நலமோ சிறிதும் இல்லாதது. பெருங்கதை என்கிற நூலின் சுருக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம். இதன் காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு.

நாககுமார காவியம்

இதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியே. பெயர் அறியக் கிடைக்கவில்லை. 5 சருக்கங்களில் 170 விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கும் சிறுகாப்பியமாகும் இது. முழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையும் மட்டுமே பேசுகிறது. 519 பெண்களைக் கதையின் நாயகன் மணக்கிறான். காவிய நயமோ அமைதியோ சிறிதும் இல்லாத நூல் இது. காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு.

அழிந்து போன நூல் என்று கருதப்பட்ட இதனை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.

யசோதர காவியம்

5 சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.

நூலின் எளிமைக்கு உதாரணமாக ஒரு பாடல்:

ஆக்குவ தேதெனில் அறத்தை ஆக்குக
போக்குவ தேதெனில் வெகுளி போக்குக
நோக்குவ தேதெனில் ஞானம் நோக்குக
காக்குவ தேதெனில் விரதம் காக்கவே

சூளாமணி

இதன் ஆசிரியர் வர்த்தமான தேவர் எனப்படும். தோலாமொழித் தேவர் 12 சருக்கங்களில் 2131 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டது இந்நூல். ஆருகத மகாபுராணத்தைத் தழுவியது. பாகவதத்தில் வரும் பலராமன், கண்னன் போன்று இக்காப்பியத்திலும் திவிட்டன் விசயன் என்னும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறாக இந்நூல் உள்ளது. பாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவு ஒத்து உள்ளன. சிரவணபெல்கோலா கல்வெட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது.

இந்நூலின் பாயிரம் தரும் குறிப்பின்படி, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேறியது என்று தெரிகிறது. இது சிறுகாப்பிய வகையில் இருந்தாலும் பெருங்காப்பியப் பண்புகள் மிகுந்த நூலாகக் கருதப்படுகிறது.

நீலகேசி

நீலகேசித் தெருட்டு என்றும் வழங்கப்படும் நீலகேசி காவியம், குண்டலகேசி என்னும் பௌத்த காவியத்துக்கு எதிரான சமண காப்பியமாகும். ஆசிரியர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. 10 சருக்கங்களில் 894 பாக்களால் ஆனது. கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. காப்பியத் தலைவி நீலி. பழையனூரில் பேயுருவில் இருந்து முனிச்சந்திரர் என்கிற சமண முனிவரால் பேய்மை நீங்கி அவருக்கே மாணவியாகவும் சமணத் துறவியாகவும் ஆகி பௌத்தர்களை வாதில் வென்ற கதையே இக்காப்பியம்.

கம்பராமாயணம்  தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று இராமாயணம். இந்நூலின் ஆசிரியர் கம்பர். சமயக் காப்பியங்களுள் இது வைணவ சமயத்தைச் சார்ந்தது. இந்தக் காப்பியம் தோன்றிய காலம் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆண்ட, கி.பி. 12-ஆம் நூற்றாண்டாகும். சிலர் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கூறுவர். சோழ நாட்டில் திருவழுந்தூரில் உவச்சர் மரபில் தோன்றிய கம்பரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார். வான்மீகி முனிவர் வடமொழியில் இராமாயணத்தை இயற்றினார். அதனை, தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப ஈடும் இணையும் இல்லாமல் கம்பர் தமிழில் தந்த காவியமே இராமாயணமாகும். கம்பர், தம் நூலுக்கு இராமாவதாரம் என்று பெயரிட்டார்.

காப்பிய அமைப்பு

இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது. இந்த ஆறு காண்டங்களின் சிறு பிரிவுகளாக 113 படலங்கள் உள்ளன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 10,500 ஆகும்.

(காண்டம் - பெரும்பிரிவு; படலம் - சிறுபிரிவு.)

பெயர்க் காரணம்

இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது. கம்பர் எழுதியதால் கம்ப இராமாயணம் எனப்பட்டது. இராம + அயணம் என்ற வடமொழிச் சொற்கள் இணைந்து இராமாயணம் என்றாயிற்று.

காப்பிய நோக்கம்

அடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக அமைகின்றன. மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும் குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.

காப்பியச் சிறப்பு

இந்நூல் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்கும் இராமன், தெய்வநிலையில் இருந்து இறங்கி மானுட நிலையில் மனிதனாக வாழ்ந்து காட்டிய தன்மைகளையும், சிறப்புகளையும் விளக்கும் ஓர் ஒப்பற்ற நூலாகும். இந்நூலில் கம்பர் வலியுறுத்தும் நீதியும் அறனும் மக்கட் சமுதாயம் அனைத்திற்கும் பொதுவானவை ஆகும்.

காப்பியத் தலைவன்

இலக்கணப்படி, காப்பியம் தன்னேரில்லாத தலைவனைக் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வகையில் கம்பராமாயணத்தில் இராமனே தன்னிகரில்லாத் தலைவனாகப் போற்றப்படுகின்றான்.

வைணவக் காப்பியம்

திருமாலின் மானுட அவதாரமே இராமாவதாரமாகும். இந்நூலில் வைணவ சமயக் கருத்துகள் விரவிக் கிடக்கின்றன. மேலும் உயர்ந்த இலட்சியங்களை முன்னிறுத்தி இராமனை மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்திக் காட்டும் இலக்கியமே கம்பராமாயணமாகும். பல உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டு பாடப்பட்ட சமய நூலாக இந்நூல் விளங்குகிறது எனலாம்.

நீதி உணர்த்தும் காப்பியம்

இலக்கியச் சிறப்பு

காப்பியத்தில் கதைப் பாத்திரங்களின் இயல்புக்கு ஏற்றவாறும் சூழலுக்கு இசைந்தவாறும் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்றவாறும் உரிய சந்தங்களோடு (சந்தம் - ஓசை நயம்) அமைத்துக் கம்பர் பாடியிருப்பதால் கற்போர் உள்ளத்தில் நன்கு பதிந்து விடுகின்றது.

கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ என்னும் கருத்திற்கு ஏற்ப, கம்பராமாயணம் உயர் கருத்துகளைத் தெரிவிப்பதாக விளங்குகின்றது. மேலும் வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகக் கம்பர் படைத்துள்ளார் என்று .வே.சு. ஐயர் போற்றியுள்ளார்.

கல்வியில் பெரியர் கம்பர் என்றும் கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்றும் வழங்கும் மொழிகள் அவரது கவித்திறனைப் பறை சாற்றும். பாரதியார் தம் பாடலில் புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று போற்றியுள்ளார்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லைஎன்றும் பாராட்டியுள்ளார் பாரதியார்.

கதைப் பாத்திரங்களை மனிதப் பாங்கின் அடித் தளத்திலிருந்து பேச வைத்து, உணர்ச்சியை வெள்ளம் போலப் பெருகி ஓட விட்டுப் பாத்திரங்களைப் படைத்துக் காட்டுகின்ற தன்மையால் கம்பர் உலகப் பெருங்கவிஞர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். உலக மகாகவி, கவிச்சக்கரவர்த்தி என்றும் தமிழறிஞர்களால் சிறப்பிக்கப்படுகின்றார்.

கிறிஸ்துவ இலக்கியம்

தமிழகம் சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்திலிருந்தே யவனர் என்னும் ஐரோப்பபிபய நாட்டவருடன் வாணிக உறவு கொண்டு விளங்கியதைச் சங்க இலக்கிகயங்கள் கூறுகின்றன. யவனரைத் தொடர்ந்து இஸ்லாமியர் அரபு நாடுகளிளலிருந்து வாணபம் மசெய்தனர். பிறகு போர்ச்சுகல், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ் பிரான்னசு போன்ற பிற ஐரோப்பியய நாபட்டவரும் தமிழகத்திற்கு வந்தனர். வணகத் தொடர்போடு நில்லாமல் சமயயத்தையும் பரப்ப முற்பட்டனர். சமய பிரசாரத்திற்காகக் கிறிஸ்துவ பபாதிரிமமார்களையும்ம உடன் னஅழைத்து வந்தனர். பதிரிமார்கள் கிறிஸ்துவத்தைப் பரப்பும் தொண்டினைச் செய்தனர்.

சங்க காலத்தில் சிறந்திருந்த சைவ வைணவ சமயங்கள் சங்கம் மரவிய காலத்தில் களப்பிரர் வருகையால் சிறப்புக் குன்றிப் போக சமண பௌத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. மீண்டும் பக்தி இயக்கத்தால் பல்லவர் காலேம்ம முதல் நாயக்கர் காலம் வரை சைவ வைணவ சமயங்களின் செல்வாக்கு மிகுந்திருந்தது. இஸ்லாமியர் ஆட்சியால் இஸ்லாமியம் பரவியது. அடுத்து ஐரோப்பியர் ஆட்சியால் அவர்களின் கிறிஸ்துவம் பரவியது. மதம் மற்றும் ஆட்சி காரணத்தால் நம் மொழியைக் கற்கத் தொடங்கினர். தமிழின் இனிமையில் தம்மை மறந்து தமிழுக்குத் தொண்டாற்றினர். தம்மை அறியாமல் தமிழுக்குத் தொண்டாற்றினர். ஆனனால் மதமாற்றம் செய்யப் பெற்ற கிறிஸ்தவர்கள் அறிந்தே தொண்டு செய்தனர். இவர்களுள் ஜி.யு.போப், ராபர்ட்-டி-நொபிலி, வீரமாமுனிவர், சீகன் பால்கு ஐயர், எல்லீஸ் துரை, கால்டுவெல் போன்ற மேல்நாட்டு கிறிஸ்துவர்களும் வேதநாயகம் பிள்ளை, வேதநாயக சாஸ்திரி, சாமுவேல்பிள்ளை, கிருட்டிணப்பிள்ளை போன்ற தமிழ்க் கிறிஸ்துவர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

 டாக்டர் ஜி.யு.போப்

தமிழை முறையாகக் கற்ற போப் அவர்கள், 60 ஆண்டுகட்கும் மேலாகத் தமிழ்த்தொண்டு புரிந்தார். தனது கல்லறைமேல் நான் ஒரு தமிழ் மாணவன் என்று பொறிக்கப்பட வேண்டும் என விழைந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து தமிழை உலகறியச் செய்தவர். மேல்நாட்டு அறிவுத் துறைகளான உளநூல், தத்துவ நூல், கணிதம், அளவை நூல் (Logic) என்பவற்றை முதன் முதலில் தமிழில் கற்பித்தவர் இவரேதிருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூல்களின் சில பாடல்களையும்சிவஞான போதத்தையும் மொழி பெயர்த்தார். பல ஏடுகளில் தமிழ் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். தோடர் மொழி, துளுமொழி கற்று அவற்றின் இலக்கணத்தை வெளியிட்டார். தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என 3 பாகமாக எழுதினார். தமிழ்ப் புலவர்களையும், தமிழ்த் துறவிகளையும் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார்.

 ராபர்ட் -டி-நொபிலி

இத்தாலி நாட்டில் பிறந்து, 1606இல் தமிழ்நாடு வந்து தமிழும் வடமொழியும் கற்றார் நொபிலி. காவியும் பூணூலும் அணிந்து மரக்கறி உணவுண்டுதத்துவ போதகர் என்று தம் பெயரை மாற்றி, தம்மை இத்தாலியப் பிராமணர் என்று கூறிக் கொண்டார். நூற்றுக்கணக்கான உயர் சாதி இந்துக்களைக் கிறித்தவராக்கினார். திருமலை நாயக்கரின் நண்பரான பின், சில ஆண்டுகள் கழித்து இலங்கையும் சென்று வந்தார். 1647இல் மயிலாப்பூரில் மறைந்தார்.

முதல் உரைநடை நூலைத் தமிழில் எழுதிய பெருமை இவரையே சாரும். சமயச் சார்புடைய, வடசொல் கலந்த மேனாட்டு மொழி கலந்த ஒரு கொச்சை மொழியில் பல நூல்கள் எழுதினார். அச்சேறாத காரணத்தால் அவை அழிந்தன. பிற மதங்களைக் கண்டிப்பது இவர் காலத்தில் நிலவியதை அறிகிறோம்ஞானோபதேச காண்டம், மந்திர மாலை, ஆத்தும நிர்ணயம், தூஷணதிக்காரம், சத்திய வேத இலட்சணம், சகுண நிவாரணம், பரமசூட்சும அபிப்ராயம், கடவுள் நிர்ணயம், புனர்ஜென்ம ஆட்சேபம், நித்ய ஜீவன சல்லாபம், தத்துவக் கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம், தவசுச் சதகம், ஞானதீபிகை, நீதிச்சொல், அநித்திய நித்திய வித்யாசம், பிரபஞ்ச விரோத வித்யாசம் முதலிய 17 நூல்களை இயற்றியுள்ளார்.

வீரமாமுனிவர்

இவரின் இயற்பெயர் - கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார்கிறித்தவ மதத்தைப் பரப்பும் க்கில்1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின்1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன்இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

சீகன் பால்கு

1682-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் பிறந்தவர் பார்த்தலோமியோஸ் சீகன்பால்கு. இவர் டென்மார்க் நாட்டில் உள்ள திருச்சபை சார்பில், கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வந்தார் பொதுமக்கள் உதவியுடன் தமிழ் மொழியை 11 நாளில் கற்றுக் கொண்டார். பின்பு அவர் 17 ஆயிரம் சொற்களை கொண்ட தமிழ் அகராதியை விரைவில் உருவாக்கினார். பிறகு பைபிளின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழி பெயர்த்தார்.

 

1710-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து தமிழ் அச்சு இயந்திரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். பொறையாறு அருகே ஓர் இடத்தில் காகித பட்டறை நிறுவி, மரக்கூழ் மூலம் காகிதம் செய்யும் தொழிற்சாலையை தொடங்கினார். இன்றும் இந்தப் பகுதி "கடுதாசிப் பட்டறை" என்றே அழைக்கப்படுகிறது.

 

1715-ம் ஆண்டு தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். சீகன் பால்கு முயற்சியால் இந்தியாவில் முதன் முதலில் தமிழ் அச்சுகள் உருவானது, சிறப்பு அம்சமாகும்.

எல்லீஸ் துரை

தமிழ், வடமொழி இரண்டையும் முறையாகக் கற்ற இவர் எல்லீசர் என்றும் அழைக்கப் பெறுகிறார். சென்னையில் வருவாய் வாரியச் செயலராக இருந்து, காணியாட்சி முறையும் வேளாண் சீர்திருத்தமும் கண்டவர். முத்துச்சாமி பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனிவரின் நூல்களை எல்லாம் தேடச் செய்தார். வீரமாமுனிவர் வரலாற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். திருக்குறளின் முதல் 13 அதிகாரங்கட்கு முதன்முதலில் உரையெழுதினார். கால்டுவெல்லுக்கு முன்பே, திராவிட மொழிகளைக் கற்றுத் திராவிட மொழிகள் வடமொழியினின்றும் வேறானவை; கிளை மொழிகள் அல்ல; தனித்து இயங்குவன என்ற உண்மைக் கருத்துகளை வெளியிட்டார்.

தமிழ்க் கிறித்தவர்கள்

மேலை நாட்டுக் கிறித்தவர்கள் குறிப்பாக ஐரோப்பியர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டைப் போல், தமிழ்நாட்டுக் கிறித்தவர்களும் தம் படைப்பால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினர்.

வேதநாயகம் பிள்ளை

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்று மாயூரத்தில் முனிசீப்பாகப் பணியாற்றினார். நீதிச் சட்டங்களை முதன்முதலில் தமிழில் எழுதியவர் இவரேபிரதாப முதலியார் சரித்திரம் என்ற முதல் தமிழ் நாவலையும் எழுதியவர் இவரே. பின் சுகுண சுந்தரி சரித்திரம் என்ற நாவலும் எழுதினார். கடிதம் எழுவதுபோல் சில தனிப்பாடல்கள் எழுதியுள்ளார். நலுங்குப்பாடல் வகையிலும் அங்கத இலக்கிய வகையிலும் பாடல் புனைந்துள்ளார். சாதிவேறுபாட்டை வெறுத்த இவர், பெண்கள் முன்னேற்றம், பெண்கல்வி என்பதிலும் செய்யுள், உரைநடை என்பதிலும் மகாகவி பாரதிக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். தாயுமானவரைப் போன்றே சமரசத்தை விரும்பிசர்வசமயச் சமரசக் கீர்த்தனை பாடினார்நீதி நூல், பெண்மதி மாலை, தேவமாதா அந்தாதி, திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, பெரியநாயகி அம்மாள் பதிகம், சத்திய வேதக் கீர்த்தனை என்ற நூல்களைப் பாடினார். அக்காலத்தில், வழக்குகளில் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நேர்மையான எண்ணம் கொண்டவர். இலஞ்சம் வாங்கிப் பிழைப்பவர்களை, ‘ஏதுக்கோ வாங்குகிறீர் இலஞ்சம் ....’ என்ற பாட்டில் கடுமையாகச் சாடுகிறார். இவர் தம் பாடல்களில் வடமொழிச் சொற்கள் பல சர்வ சாதாரணமாய்க் கலந்து விளங்குகின்றன.

போதக யூரோப்பு மாதர்களைக்கண்டு 
பொங்கிப் பொறாமை கொண்டோமே என்றும் 
பேதம் இல்லா இந்தியா தனில்நாங்கள் 
பிறந்தென்ன லாபம் கண்டோமா 
நாதக் கல்விக்கு நகை எந்தமூலையே 
நாங்கள் விரும்போம் நவரத்ன மாலையே 
வேதநாயகன்செய் பெண்மதி மாலையே 
வேண்டினோம் தாரும் விடோம் உங்கள் காலையே

(சர்வசமயச் சமரசக் கீர்த்தனைகள் - வேதநாயகம் பிள்ளை -கேளும் பூமான்களே என்ற 5 - ஆம் பாடல்)

என்று கல்வி வேண்டி ஒரு பெண் பாடுவதாக வேதநாயகம் பிள்ளை பாடியுள்ளார்.

• H.A கிருஷ்ணப் பிள்ளை

வைணவ வேளாளர் மரபில் தோன்றிக் கிறித்துவராக மாறிகிறித்தவக் கம்பன் என்று புகழப் பெறுபவர். ஜான்பன்யன் என்பவர் எழுதிய Pilgrims Progress என்ற நூலை இரட்சண்ய யாத்திரீகம் எனத் தமிழ்ப்படுத்தினார். இவர் பாடல்கள் ஆழ்வார், நாயன்மார் பாடல்கள் போல் உருக்கமாக அமைந்துள்ளனகிறித்தவர்களின் தேவாரம்என்றழைக்கப் பெறும் இரட்சண்ய மனோகரம் என்ற நூலையும்இரட்சண்ய சமய நிர்ணயம், இரட்சண்யக் குறள், போற்றித் திருஅகவல் என்ற நூலையும் பாடினார்இலக்கணச் சூடாமணி, கிறித்தவரான வரலாறு என்ற உரைநடை நூல்களையும் காவிய தர்ம சங்கிரகம் என்ற தொகுப்பு நூலையும் எழுதினார். கால்டுவெல்லின்பரதகண்ட புராதனம் என்ற நூலையும் வேதமாணிக்க நாடாரின் வேதப் பொருள் அம்மானை என்ற நூலையும் பதிப்பித்தார். பெர்சிவல் பாதிரியாருக்குத் தமிழ் கற்பித்தார்தினவர்த்த மானியின் துணை ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

வேதநாயகம் சாத்திரியார்

சரபோசி மன்னரின் ஆஸ்தான வித்துவானாக, அரசவைப் புலவராகத் திகழ்ந்த சாத்திரியார் கிறித்தவப் பாக்கள் பல்லாயிரம் இயற்றி, ஆஸ்தான வித்துவான் பட்டம் பெற்றவர். கிறித்தவப் பாடல்களைத் தமிழிசையுடன் இயைத்து இயற்றி முதன் முதலில் வழிகோலியவர் இவரே! வின்சுலோவுடன் இணைந்து குருட்டுவழி என்ற நூலையும், அக்காலத்திலே 100 வராகன் பரிசு பெற்ற நோவாவின் கப்பல் என்ற நூலையும் பாடினார். சரபோசி மன்னர் வேண்டியும்கிறித்துவைத் தவிரப் பாடேன்!’ என்று கூறியவர்பெத்லகேம் குறவஞ்சி, சென்னைப் பட்டணப் பிரவேசம், ஞான ஏற்றப்பாட்டு, ஞானத்தச்சன் நாடகம், ஞானக் கும்மி, ஆதியானந்தம், பராபரன்மாலை, ஞானஉலா, ஞான அந்தாதி முதலான 52 நூல்களைப் பாடியுள்ளார். தமிழகப் பக்தி நெறிப்படி கர்த்தரை வழிபட வழிகாட்டியவர்.

இசுலாமிய இலக்கியம்

இசுலாமியத் தமிழிலக்கியம்

தமிழகத்தில் 17, 18ஆம் நூற்றாண்டில் நவாபு ஆட்சி நிலவியது. அரசு மொழியாகப் பாரசீகமும் உருதும் அமைந்தன. குர்ஆன் போன்ற மத நூல்களைத் தெய்வ மொழியாகிய அரபியிலேயே படிக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் இருந்தது. எனவே, வேதத்தைப் படிப்பதற்கு அரபு மொழியையும் அரசியலை நடத்த உருது-பாரசீக மொழிகளையும் முஸ்லீம் மக்கள் பயின்றார்கள்என்கிறார் மது.. விமலானந்தம். மதச் சார்பான நூல்களில் மிகுதியான அரபுச் சொற்கள் இதனால் கலந்தன. தமிழிலும் உருது, அரபிச் சொற்கள் கலந்தன. அரேபிய, பாரசீக மொழிகளைக் கற்ற இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் அம்மொழி இலக்கிய வகைகளைக் கற்றுத் தமிழில் அவ்வாறே படைத்தனர். இதனால் இசுலாமியத் தமிழிலக்கியம் புது வடிவம் பெற்றது.

அரபி மொழியிலிருந்து பெற்ற வடிவங்கள்

படைப்போர், முனஜாத்து, கிஸ்ஸா, மசலா, நாமா என்ற இலக்கிய வகைகளைத் தமிழில் முதன்முதலில் இசுலாமியப் புலவர்கள் அறிமுகம் செய்தனர்.

பரணி இலக்கியம் போன்று இஸ்லாமியருக்கும் ஏனையோருக்கும் நடந்த போரைப் பற்றிப் பாடும் இலக்கிய வகைபடைப்போர்ஆகும்ஐந்து படைப்போர், செய்தத்துப் படைப்போர், உசைன் படைப்போர் என்பன அவற்றுள் சில.

அல்லாவின் அருள் நாடி விண்ணப்பிப்பது ‘முன ஜாத்துஆகும். செய்யது முகமது ஆலிம் இயற்றியது ’முனஜாத்து மாலை’ ஆகும்.

கதை கூறுதல் என்ற பொருளில் அமைந்த கிஸ்ஸா வகையில் மதார்சாகிபு புலவர் ’யூசுபுநபி கிஸ்ஸாவையும், அப்துல்காதர் சாகிபு ’செய்த்தூன் கிஸ்ஸாவையும் பாடியுள்ளனர்.

மசலா என்பது கேள்விகள் அல்லது பிரச்சினை என்று பொருள்படும்.

மசலா இலக்கியத்தை, பரிமளப் புலவர் ஆயிரம் மசலா என்ற நூலாகவும் செய்து அப்துல் காதிறு லெப்பை வெள்ளாட்டி மசலா என்ற நூலையும் பாடியுள்ளனர்நூறு மசலாவின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

கதை, நூல், வரலாறு எனப் பொருள்படும் நாமா என்ற இலக்கியத்தை மிஃராஜ் நாமா என்ற நூலாக மதாறு சாகிபு புலவரும்நூறு நாமாவை செய்யதகம்மது மரைக்காயரும் பாடியுள்ளனர். நாமா என்பது பாரசீக இலக்கிய வகையாகும்.

தமிழ் நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள்

பாமரரும் படித்து இன்புறும் வகையில் இனிய எளிய சொற்களைக் கொண்டு, தமிழரிடையே காலம் காலமாக வழங்கி வருகின்ற நாட்டுப்புறப் பாடல் மரபையும் கொண்டு இசுலாமியப் புலவர்கள் இலக்கியம் இயற்றியுள்ளனர். ஏசல், சிந்து, கும்மி, தாலாட்டு, கீர்த்தனை, தெம்மாங்கு, ஊஞ்சல் பாட்டு, தோழிப் பெண்பாட்டு எனப் பலவகைகளில் அவர்கள் இலக்கியம் படைத்தனர்.

காதல் பற்றியும் சமயம் பற்றியும் பள்ளு இலக்கியத்தில் ஏசல் என்ற சிறுபகுதி அமையும். அதைப் பின்பற்றிச் சமயக் கோட்பாடுகளை விளக்குவனவாய் நபிகள் நாயகம் பேரில் ஏசல் கண்ணிகள், முகியத்தீன் ஆண்டவர் பேரில் தாய்-மகள் ஏசல் என்பன இயற்றப் பெற்றன.

காவடிச் சிந்து மெட்டமைப்பில் நவநீத ரத்னாலங்காரச் சிந்து, பூவடிச் சிந்து என்பன பாடப் பெற்றன.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் சீவிய சரித்திரக் கும்மி, செய்கு முஸ்தபா ஒலியுல்லா கும்மி, திருக்காரண சிங்காரக் கும்மி என்பன கும்மி அமைப்பில் பாடப் பெற்றன.

அசலானிப் புலவர்ஞானத் தாலாட்டு, சுகானந்தத் தாலாட்டு, மணிமந்திரத் தாலாட்டு, மீறான் தாலாட்டு, பாலகர் தாலாட்டு என்பனவற்றை இயற்றியுள்ளார்.

சீறாக் கீர்த்தனை, ஆதி நூதன அலங்காரக் கீர்த்தனை என்ற இரண்டு கீர்த்தனை நூல்களும் மென்னான ஆனந்தக் களிப்பு என்ற நூலும் இந்த நூற்றாண்டில் இயற்றப் பெற்றன.

ஒழுக்க நூல்

மனிதர்களின் ஒழுக்கம், பின்பற்ற வேண்டியவை, செய்ய வேண்டிய கடமைகள், சான்றோரால் விலக்கப் பெற்றவை முதலியவற்றை விளக்கும் நூல்களே ஒழுக்க நூல்களாகும். அவ்வகையில ஆசாரக் கோவை என்ற நூலை அப்துல் மஜூதும் திருநெறி நீதம் என்ற நூலை பீர்முகம்மது சாகிபுவும் பாடியுள்ளனர்.

 

யாப்பு இலக்கணமும் அதன் உறுப்புகளும்

செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கொண்டு செய்யுள் அமைக்கும் இலக்கணத்தை விளக்குவதால் இது யாப்பிலக்கணம் எனப்படும்.

யாப்பின் உறுப்புகள் ஆறு வகைப்படும்

1.எழுத்து

2.அசை

3.சீர்

4.தளை

5.அடி

6.தொடை

1.எழுத்து

தமிழ் எழுத்துகளை யாப்பிலக்கண முறையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1.குறில் ()

2.நெடில் (கா)

3.ஒற்று (க்) என்பனவாம்.

தொல்காப்பியர் எழுத்துகளை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்று மூன்றாகப் பிரிப்பார். நன்னூல் ஆசிரியர் சார்பெழுத்துக்கள் எனப் பத்து வகைகளாகச் சுட்டுகின்றார்.

2.அசை

குறில், நெடில், ஒற்று என்னும் மூவகை எழுத்துகளால் அசைக்கப்படுவது அசை எனப்படும். எழுத்துகள் ஒன்று சேர்ந்து வருவது அசை (சொல்) ஆகும். அசை இரண்டு வகைப்படும்.

1.நேர் அசை

2. நிரை அசை

நேரசை

1.குறில் தனித்து வருதல்

2.குறிலும் ஒற்றும் இணைந்து வருதல்கல்

3.நெடில் தனித்து வருதல்பா

4.நெடிலும் ஒற்றும் இணைந்து வருதல்பால்

நிரையசை

1.இரண்டு குறில்கள் இணைந்து வருதல்பல

2.இரண்டு குறில்கலோடு ஒற்றும் இணைந்து வருதல்பலர்

3.குறிலும் நெடிலும் இணைந்து வருதல்படா

4.குறிலும் நெடிலும் ஒற்றும் இணைந்து வருதல் -படாம்

குறிப்பு

§  * முதல் எழுத்து நெடில் வந்தால் தனித்துதான் வரும்.

§  * ஓற்றுகள் அசையாகாது. ஓன்றுக்கும் மேற்பட்ட ஒற்றுகள் சேர்ந்து வரினும் அவை ஒரு ஒற்றாகவே கருதப்படும். (உம்-ங்ங்ங்ங்)

§  * இரண்டு நெடில் எழுத்துக்கள் சேர்ந்து வராது. அப்படி வந்தால் பிரிக்க வேண்டும்.

§  * நெடில் எழுத்தை அடுத்து குறில் சேர்ந்து ஓர் அசையாக வராது.

3.சீர்

செய்யுளில் ஓர் அசை தனியாகவோ, பல அசைகள் சேர்ந்தோ அமைந்து வருவது சீர் எனப்படும். அசைகள் ஒன்று சேர்ந்து வரவது சீர் ஆகும். (சீர்- ஒழுங்கு). சீர் நான்கு வகைப்படும். அவை,

1.ஓரசைச்சீர்

2.ஈரசைச்சீர்

3.மூவசைச்சீர்

4.நாலசைச்சீர்

1.ஓரசைச்சீர்

அசைச்சீர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. வெண்பாவின் ஈற்றில் நேரசை அல்லது நிரையசையென தனித்து நின்று சீராய் அமையும். இவை நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்ப்பாட்டைக் கொண்டு முடியும்.

நேர்நாள்

நிரைமலர்

நேர் + நேர் =  நேர்புகாசு

நிரை + நேர் = நிரைபுபிறப்பு

2.ஈரசைச்சீர்

இயற்சீர், ஆசிரிய உரிச்சீர் என வேறுபெயர்கள் உண்டு. நேர்,நிரை என்னும் அசைகள் இரண்டிரண்டாக இணைந்து வரும் சீர்கள் ஈரசைச்சீர்கள் எனப்படும். வெண்பா, ஆசிரியப்பாவில் வரும். இவை

மாச்சீர் (தேமா,புளிமா),

விளச்சீர் (கூவிளம்,கருவிளம்) என இரண்டு வகைப்படும்.

அசையின் அமைப்பு வாய்ப்பாடு

நேர் +நேர் = தேமா

நிரை+ நேர்  = புளிமா

நேர் + நிரை = கூவிளம்

நிரை + நிரை = கருவிளம்

3.மூவசைச்சீர்

ஈரசைச்சீர்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் நேர் என்னும் அசையைத் சேர்த்தால் காய்ச்சீர் நான்கு இடம்பெறும். இதனை வெண்சீர்,வெண்பா உரிச்சீர் என அழைக்கப்படும்.

நேர் +நேர் + நேர்தேமாங்காய்

நிரை +நேர் +நேர்புளிமாங்காய்

நேர்+ நிரை +நேர்கூவிளங்காய்

நிரை +நிரை+ நேர்கருவிளங்காய்

மேற்கூறிய நான்கும் நேரீற்று மூவசைச்சீர் என்று அழைக்கப்படுகிறது.

ஈரசைச்சீர்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் நிரை என்னும் அசையைத் சேர்த்தால் கனிச்சீர் நான்கு இடம்பெறும். இதனை வஞ்சிச்சீர், வஞ்சி உரிச்சீர் என அழைக்கப்படும்.

நேர் +நேர் + நிரைதேமாங்கனி

நிரை+ நேர்+ நிரைபுளிமாங்கனி

நேர்+ நிரை +நிரைகூவிளங்கனி

நிரை +நிரை +நிரைகருவிளங்கனி

மேற்கூறிய நான்கும் நிரையீற்று மூவசைச்சீர் என்று அழைக்கப்படுகிறது. மூவசைச்சீர்களாகிய காய்ச்சீர்கள் நான்கும், கனிச்சீர்கள் நான்கும் சேர்த்து மொத்தம் எட்டு வகைப்படும்.

4.நாலசைச்சீர்

பொதுச்சீர் என்ற வேறுபெயரும் உண்டு. மூவசைச்சீர் எட்டுடன் நேரசையைச் சேர்க்க வேண்டும். அவை தண்பூ, நறும்பூ எனக் கொண்டு முடியும். இவை எட்டும் பூச்சீர் என்றும், நேரீற்றுப் பொதுச்சீர் எனவும் வழங்கப்பெறும்.

பூச்சீர் எட்டின் அமைப்பு வாய்ப்பாடு

நேர் +நேர் +நேர் +நேர்தேமாந்தண்பூ

நிரை +நேர் +நிரை +நேர் -புளிமாந்தண்பூ

நேர் +நிரை +நிரை+ நேர் -கூவிளந்தண்பூ

நிரை +நிரை +நிரை +நேர் -கருவிளந்தண்பூ

நேர் +நேர் +நேர் +நேர் -தேமாநறும்பூ

நிரை +நேர் +நிரை+ நேர் -புளிமாநறும்பூ

நேர் +நிரை +நிரை +நேர் -கூவிள நறும்பூ

நிரை +நிரை +நிரை +நேர் -கருவிள நறும்பூ

மூவசைச்சீர் எட்டுடன் நிரையசையைச் சேர்க்க வேண்டும். அவை தண்ணிழல், நறுநிழல் எனக் கொண்டு முடியும். இவை எட்டும் நிழற்சீர், நிரையீற்றுப் பொதுச்சீர் என வழங்கப்பெறும்.

நிழற்சீர் எட்டின் அமைப்பு வாய்ப்பாடு

நேர் +நேர் +நேர் +நிரை -தேமாந்தண்ணிழல்

நிரை +நேர் +நிரை+ நிரை -புளிமாந்தண்ணிழல்

நேர் +நிரை +நிரை +நிரை- கூவிளந்தண்ணிழல்

நிரை +நிரை +நிரை +நிரை -கருவிளந்தண்ணிழல்

நேர்+ நேர் +நேர் +நிரை -தேமாநறுநிழல்

நிரை +நேர் +நிரை+ நிரை -புளிமாநறுநிழல்

நேர் +நிரை +நிரை+ நிரை -கூவிளநறுநிழல்

நிரை +நிரை +நிரை +நிரை -கருவிளநறுநிழல்

இவ் பூச்சீர் எட்டும், நிழற்சீர் எட்டும் ஆகிய பதினாறும் நாலசைச்சீர்களாக கருதப்படும்.

4.தளை

சீர்கள் ஒன்றோடொன்று கட்டுப்பட்டு நிற்கும் நிலை தளை எனப்படும். சீர்கள் ஒன்றி வருவது தளை ஆகும். (தளைகட்டு). நின்ற சீரின் ஈற்றசையும், வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது தளை எனப்படும். தளை கூறும்போது முதல்சீர் இறுதி அசையின் வாய்ப்பாட்டோடு அடுத்த சீரின் முதல் அசையைச் சேர்த்துக் கூற வேண்டும். தளை ஏழு வகைப்படும். அவை,

1.நேரொன்றாசிரியத்தளை

2.நிரையொன்றாசிரியத் தளை

3.இயற்சீர் வெண்டளை

4.வெண்சீர் வெண்டளை

5.கலித்தளை

6.ஒன்றிய வஞ்சித்தளை

7.ஒன்றா வஞ்சித்தளை

1.நேரொன்றாசிரியத்தளை: ( மா முன் நேர் )

நிலைமொழியின் ஈற்றசைமாஎன முடிந்து வரும்மொழியின் முதலசைநேர்என வருமாயின் அது நேரொன்றாசிரியத்தளை எனப்படும்.

(உம்) பரிசில் வென்றான்

பரிசில் = நிரை நேர் = புளிமா , வென்றான் =நேர் நேர் = தேமா

2.நிரையொன்றாசிரியத்தளை: ( விள முன் நிரை )

நிலைமொழியின் ஈற்றசைவிளம்என முடிந்து வரும்மொழியின் முதலசைநிரைஎன வருமாயின் அது நிரையொன்றாசிரியத்தளை எனப்படும்.

(உம்) மாம்பழம் விழுந்தது

மாம்பழம்நேர் நிரைகூவிளம், விழுந்ததுநிரை நிரைகருவிளம்

3.இயற்சீர் வெண்டளை: (மா முன் நிரை, விள முன் நேர்)

நிலைமொழியின் ஈற்றசைமாஎன முடிந்து வரும்மொழியின் முதலசைநிரைஎன வந்தாலும், நிலைமொழியின் ஈற்றசைவிளம்என முடிந்து வரும்மொழியின் முதலசைநேர்என வந்தாலும் அது இயற்சீர் வெண்டளை எனப்படும்.

(உம்) கன்று குதித்ததுமா முன் நிரை

பணிவுடன் சென்றான்விள முன் நேர்

4.வெண்சீர் வெண்டளை : (மா முன் நேர்)

நிலைமொழியின் ஈற்றசைகாய்என முடிந்து வரும்மொழியின் முதலசைநேர்என வருமாயின் அது வெண்சீர் வெண்டளை எனப்படும்.

(உம்) கல்விக்கு கம்பன்மா முன் நேர்

5.கலித்தளை: (மா முன் நிரை)

நிலைமொழியின் ஈற்றசைகாய்என முடிந்து வரும்மொழியின் முதலசைநிரைஎன வருமாயின் அது கலித்தளை எனப்படும்.

(உம்) வள்ளுவரின் திருக்குறள்மா முன் நிரை

6.ஒன்றிய வஞ்சித்தளை : ( கனி முன் நிரை)

நிலைமொழியின் ஈற்றசைகனிஎன முடிந்து வரும்மொழியின் முதலசைநிரைஎன வருமாயின் அது ஒன்றிய வஞ்சித்தளை எனப்படும்.

(உம்) செந்தாமரை முகத்துடையாள்

7.ஒன்றா வஞ்சித்தளை : (கனி முன் நேர் )

நிலைமொழியின் ஈற்றசைகனிஎன முடிந்து வரும்மொழியின் முதலசைநேர்என வருமாயின் அது ஒன்றா வஞ்சித்தளை எனப்படும்.

(உம்) மாமுனிவரே அகத்தியர்

5.அடி

சீர்கள் பல தொடர்ந்து வந்து ஓர் அடியாக அமைந்து செய்யுளுக்கு உறுப்பாவது அடி எனப்படும். ஓர் அடியில் சீர்கள் தொடர்ந்து வருவது சீர் அடிகள் ஆகும். அடிகள் ஐந்து வகைப்படும். அவை,

1.குறளடி

2.சிந்தடி

3.அளவடி

4.நெடிலடி

5.கழிநெடிலடி

1.குறலடி :

இரண்டு சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆன இரண்டு அடிகள் ஆனது குறளடிகள் எனப்படும். இவ்வடிகள் வெண்பாவில் பயின்று வரும்.

(உம்) “இனிய உளவாக இன்னாது கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” – இரண்டு அடிகளால் ஆன குறலடி.

காயும் கனியும்” – சீர்களால் ஆன குறலடி.

2.சிந்தடி :

மூன்று சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆன மூன்று அடிகள் ஆனது சிந்தடிகள் எனப்படும். வெண்பாவின் ஈற்றடிகள் சிந்தடிகளாக இருக்கும். இவ்வடிகள் ஆசிரியப்பா, வஞ்சிப்பாவிலும் பயின்று வரும்.

(உம்) “அகவன் மகளே! அகவன் மகளே!

மனவுக் கோப்பு அன்ன நல்நெடுங் கூந்தல்

அகவன் மகளே! பாடுக பாட்டே”  – மூன்று அடிகளால் ஆன சிந்தடி.

ஞானத்தின் மாணப் பெரிது” – சீர்களால் ஆன சிந்தடி.

3.அளவடி :

நான்கு சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆன நான்கு அடிகள் ஆனது அளவடிகள் எனப்படும். நேரடி என்றும் அழைக்கப்பெறும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, மருட்பாவிலும் இடம்பெறும்.

(உம்) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்மைநான்கு சீர்களால் ஆன அளவடி

தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி

பன்றியருவா வதன்வடக்குநன்றாய

சீதமலாடு புனனாடு செந்தமிழ்சேர்

ஏதமில் பன்னிரு நாட் டெண்” – நான்கு அடிகளால் ஆன அளவடி.

4.நெடிலடி:

ஐந்து சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆன ஐந்து அடிகள் ஆனது நெடிலடிகள் எனப்படும்.

(உம்) மங்குவென் உயிரோடென்றுன் மலரடி சென்னி வைத்தாள்ஐந்து சீர்களால் ஆன நெடிலடி.

கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய

ஆன் நீhப் பந்தல் யானை வெளவும்

கல்லதர்க் கவலை செல்லின், மெல் இயல்

புயல் நெடும் கூந்தல் புலம்பும்

வயமான் தோன்றல்! வுல்லாதீமே. (ஐங்.304)- ஐந்து அடிகளால் ஆன நெடிலடி

5.கழிநெடிலடி :

ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆனதும் ஐந்துக்கும் மேற்பட்ட பல அடிகள் கொண்டது நெடிலடிகள் எனப்படும்.

(உம்) “மூலையில் கிடக்கும் வாலிபனேதினம்

முதுகிலா வேலையைத் தேடுகிறாய்!

பாலை வனம்தான் வாழ்க்கையெனவெறும்

பல்லவி எதற்குப் பாடுகிறாய்?

வெறுங்கை என்பது மூடத்தனம்உன்

விரல்கள் பத்தும் மூலதனம்!

கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் -உன்

கைகளில் பூமி சுழன்று வரும்!” – ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் ஆன அறுசீர் கழிநெடிலடி.

6. தொடை :

தொடைதொடுக்கப்படுவது. ஒரு செய்யுளில் எழுத்துக்களை அசைகளாக்கி, அசைகளைச் சீர்களாக்கி, சீர்களையெல்லாம் அடிகளாகக் கொண்டது மட்டுமல்லாமல் ஓசையின் இன்பமும், செய்யுளில் தோன்றும் பொருட்பயனும் முழுமையாக தொடுக்கப்படுவது தொடை எனப்படும். தொடை எட்டு வகைப்படும். அவை,

1. மோனைத் தொடை

 2. எதுகைத் தொடை

3. முரண் தொடை

4.இயைபுத்தொடை

5. அளபெடைத் தொடை

6.அந்தாதித் தொடை

7.இரட்டைத்தொடை

8. செந்தொடை என்பதாகும்.

1.மோனைத்தொடை :

செய்யுளின் முதலெழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும். இவ்வகைகளில் முதலெழுத்துகளின்றி அதற்குரிய இனவெழுத்துகளும் ஒன்றி வரும். இதனை இணை மோனை, கிளை மோனை என்றும் கூறுவர். (மோனைமுதன்மை). மோனைத் தொடை இரு வகைப்படும். அவை,

1.அடி மோனை

2. சீர் மோனை என்பன.

1.அடி மோனை:

அடிகள் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.

(உம்) “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

இங்கு, முதலடியின் முதலெழுத்தும் (சொ) இரண்டாமடியின் முதலெழுத்தும் (சொ) ஒன்றி வந்துள்ளன. ;வ்வாறு அடிகளில் முதலெழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.

2. சீர் மோனை :

சீர்கள் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர் மோனை எனப்படும்.

(உம்) “கற்க கசடற கற்றவை கற்றபின்

இங்கு, நான்கு சீர்களிலும் முதலெழுத்தாக () வந்துள்ளது. இதுபோல் ஓர் அடியில் சீர்கள் தொறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர் மோனை எனப்படும்.

2.எதுகைத் தொடை:

செய்யுளின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை எனப்படும். எதுகைத் தொடை இரு வகைப்படும். அவை,

1.அடி எதுகை

2. சீர் எதுகை

1.அடி எதுகை:

அடிகள் தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.

(உம்) “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

இங்கு, முதலடியின் இரண்டாம் எழுத்தும் () இரண்டாமடியின் இரண்டாம் எழுத்தும் () ஒன்றி வந்துள்ளன. ;வ்வாறு அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.

2.சீர் எதுகை :

சீர்கள் தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை எனப்படும்.

(உம்) “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல

இங்கு, மூன்று சீர்களிலும் இரண்டாம் எழுத்தாக (ன்) வந்துள்ளது. இதுபோல் ஓர் அடியில் சீர்கள் தொறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை எனப்படும்.

3.முரண் தொடை :

செய்யுள் அடிகளில் உள்ள முதற்சீர்களோ அல்லது ஓர் அடியில் உள்ள சீர்களோ சொல்லாலும், பொருளாலும் முரண்பட்டு (எதிர்மாறாக) நிற்பது முரண்தொடை எனப்படும். இவையும் அடி முரண், சீர் முரண் என இரண்டு வகைப்படும்.

§  ஒரு செய்யுளில் அடிகளில் முரண்படுவது அடிமுரண் ஆகும்.

§  ஓர் அடியில் உள்ள சீர்களில் முரண்படுவது சீர் முரண் எனப்படும்.

(உம்) “துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை

இக்குறட்பாவில் துன்பம்இன்பம் என அடிகளில் முரண்பட்டு நிற்பதைக் காண்கிறோம். இவை அடிமுரண் ஆகும்.

(உம்) “இனிய உளவாக இன்னாது கூறல்

இவ்வடியில் இனியஇன்னாத என சீர்கள் முரண்படுவதால் இவை சீர்முரண் எனப்படும்.

4.இயைபுத் தொடை :

ஒரு செய்யுளின் அடிகளிலும், சீர்களிலும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, ஒன்றி வருவது இயைபுத்தொடை எனப்படும்.

§  ஒரு செய்யுள் அடிகளில் இயைபு அமைவது அடிஇயைபு ஆகும்.

§  ஓர் அடியில் உள்ள சீர்களில் இயைபு அமைவது சீர் இயைபு எனப்படும்

(உம்) “திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை

தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை

இங்கு மலை என இரண்டு அடிகளிலும் இயைந்து வந்ததால் இவை அடி இயைபு எனப்படும்.

(உம்) “பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்

இவ்வடியில் உள்ள சீர்களில் மின் என இயைந்து வந்துள்ளதால் இவை சீர் இயைபு எனப்படும்.

5.அளபெடைத்தொடை :

ஒரு செய்யுளின் அடிகளிலும், சீர்களிலும் அசைகள் அளபெடுத்து வருவது அளபெடைத்தொடை எனப்படும்.

§  ஒரு செய்யுள் அடிகளில் அளபெடை அமைவது அடிஅளபெடை ஆகும்.

§  ஓர் அடியில் உள்ள சீர்களில் அளபெடை அமைவது சீர் அளபெடை எனப்படும்.

(உம்) “கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

இங்கு கெடுப்பதூஉங்எடுப்பதூஉம் என இரண்டு அடிகளிலும் அளபெடுத்து வந்துள்ளதால் இவை அடி அளபெடை எனப்படும்.

(உம்) “அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

இவ்வடியில் உள்ள சீர்களில் அழிவதூஉம்ஆவதூஉம் என அளபெடுத்து வந்துள்ளதால் இவை சீர் அளபெடை எனப்படும்.

6.அந்தாதித்தொடை :

செய்யுளில் ஓர் அடியின் இறுதிச்சீரின் இறுதி எழுத்தோ அல்லது அசையோ அல்லது சீரோ அடுத்த அடியின் தொடக்கமாக வருவது அந்தாதித் தொடை எனப்படும்.

(உம்) “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

7.இரட்டைத்தொடை:

செய்யுளில் ஓர் அடி முழுவதும் ஒரே சொல்லை தொடர்ச்சியாக வருமாறு அமைத்துப் பாடுவது இரட்டைத் தொடை எனப்படும்.

(உம்) “வாழி வாழி வாழி வாழி

அம்ம கோவே வாழி

8.செந்தொடை :

மோனைத் தொடை முதல் இரட்டைத் தொடை வரையிலான ஏழு தொடைகளுக்கும் சொல்லப்பட்ட இலக்கணங்கள் எதற்குள்ளும் பொருந்தாமல் தனித்து நிற்கும் தொடை செந்தொடை எனப்படும்.

(உம்) “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு

தொடையின் வகைகள் அமையும் முறை

மோனை  – முதல் எழுத்து ஒன்றுபடல்

எதுகைஇரண்டாம் எழுத்து ஒன்றுபடல்

இயைபுஇறுதி எழுத்து ஒன்றுதல்

முரண்முரண்பட்டு நிற்றல்

அளபெடைஅளபெடுத்து வருதல்

அந்தாதி இறுதிமுதலாக வருதல்

இரட்டைத் தொடைஒரே சொல்லே அடிமுதல் வருதல்

செந்தொடைஇவற்றில் பொருந்தாமல் தனித்து

தொடை விகற்பத்தின் வகைகள்

விகற்பங்கள் தொடைகளுடன் சேரும் முறை

விகற்பங்கள்

1.இணை                              = 1, 2 சீர்கள்                                         

2.பொழிப்பு                         =  1, 3  சீர்கள்                          

3.ஒருஉ                                 =  1, 4   சீர்கள்  

4.கூழை                                =  1, 2, 3  சீர்கள்                  

5.மேற்கதுவாய்                =  1, 3, 4  சீர்கள்      

6.கீழ்க்கதுவாய்                =   1, 2, 4  சீர்கள்  

7.முற்று                                =   1, 2, 3, 4 சீர்கள்  

உதாரணம் :

ஐந்து தொடைகளுடன் ஏழு விகற்பங்களும் ஒன்றாய்ச் சேரும்.

01.இணை மோனைத் தொடை

02.பொழிப்பு மோனைத் தொடை

03.ஒருஉ மோனைத் தொடை

04.கூழை மோனைத் தொடை

05.மேற்கதுவாய் மோனைத் தொடை

06.கீழ்க்கதுவாய் மோனைத் தொடை

07.முற்று மோனைத் தொடை

இது போன்று ஒவ்வொரு விகற்பமும்  தொடையுடன் சேர்ந்து வரும்.

குறிப்பு :

§  அந்தாதித் தொடை,  இரட்டைத் தொடை, செந்தொடை ஆகிய மூன்றுக்கும் தொடை விகற்பங்கள் இல்லை.

§  இதன் அடிப்படையில் தொடை விகற்பங்கள் மொத்தம் (7x 5=35) 35 ஆகும்.

உவமையணி

by admin | Posted on 05/31/2021

தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது.
சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை

திருக்குறள் உள்ள ஒரு குறளும் உவமை அணியை எடுத்து காட்டுவன. இத்தொடரில் வரும் உவமை உருபு அற்றே.

இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்

பண்பு உவமையணி

உதாரணம்: முத்துப்பல், பவளவாய், கயல்விழி
பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.

தொழில் உவமையணி

உதாரணம்: புலிமறவன், குரங்குமனம்
செயலை விளக்குவது
புலியின் வீரம், தாவும் மனம்.

பயன் உவமையணி

உதாரணம்: மழைக்கை
மழை போல பொழியும்(கொடுக்கும்) கை

உவமையணியில் உவமானம் ,உவமேயம், உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.

உவமானம்

ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்

உவமேயம்

ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்

உவம உருபுகள்

ஒப்புவமைப்படுத்துவதற்காக போன்ற என்று பொருள் தரும் சொற்கள் உவம உருபுகள் எனப்படும். உதாரணம்: போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய, அற்றே

(.கா.) உவம உருபுதொடர்

போலகிளி போலப் பேசினாள்.
புரையவேய்புரை தோள்.
ஒப்பதாயொப்ப பேசும் மகள்.
உறழமுறவு உறழ் தடக்கை.
அன்னமல்ரன்ன சேவடி.
போலப் புரைய ஒப்ப உறழ
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே.

பொதுத்தன்மை

இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை)

சான்று: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை

இங்கு,

உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு: போல

உவமைத்தொகை

வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும். அதாவது உவமை தொக்கி நிற்பது.

உதாரணம்: கயல்விழிகயல் போல் விழி
இங்கு உவமை உருபு (போல்) மறைந்து நிற்கிறது.

இதே போல இன்னொரு உதாரணம்:
மதிமுகம்மதி போன்ற முகம்
உவமை உருபு (போன்ற) மறைந்து நிற்கிறது.

உவமையணியை இன்னொரு விதத்தில் இன்னும் இரண்டாகப் பிரிக்கலாம்.
அவையாவன:
1-
எடுத்துக்காட்டு உவமையணி
2-
இல்பொருள் உவமையணி

எடுத்துக்காட்டு உவமையணி

இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது
இதில் உவைமை உருபுகள் வெளிப்ப்ட வருவதில்லை.உவமை,உவமேயம் தனித்தனித் தொடர்களக வருகின்றன. உதாரணம்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு
மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.

இல்பொருள் உவமையணி

இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.

உதாரணம்:
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று

அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது. அதாவது வலிமையான பாலைவனத்திலே பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும்.

நாட்டார் பாடலில் உவமை

நாட்டார் பாடல்களிலும் உவமைகள் பொருத்தமுற, அழகாக, இயல்பாகக் கையாளப்பட்டுள்ளன. இவை ஏட்டுக் கவிதைகளில் புலவர்களால் பொதுவாகக் கையாளப்படும் உவமைகளிலும் பார்க்கச் சுவையுடைத்தாய் உள்ளன. ஓரிரு உதாரணங்கள் வருமாறு

ஈச்சம் குருத்துப்போல இருந்துமுகம் வாடலாமா? (மாவிலங்க மரத்தின் பட்டையையும் மானிறைச்சியையும் ஈச்சம் குருத்தையும் நாட்டு மக்கள் வெயிலிலே காயவைத்து வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம். இந்த இயற்கையான நிகழ்ச்சியையே நாட்டுப்புறக் கவிஞன் உவமையாகக் காட்டுகின்றான்)

உருவக அணி என்றால் என்ன?

உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்

·         இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும்

கவிஞன், தான் ஒரு பொருளைச் சிறப்பிக்க எண்ணி, அதற்கு உவமையாகும் வேறொரு பொருளோடு ஒன்றுபடுத்திக் கூறுவான். உவமையின் தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக்கூறும் இத்தன்மையே 'உருவகம்' எனக் கூறப்படும். உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.

·         'தண்டி' என்பவர், உருவகத்தைப் பற்றி 'உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்' என்று எழுதியிருக்கிறார்

·         'முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன` என்று உருவகமாக எழுதுகிறார்கள்.

உருவக அணி எடுத்துக்காட்டு

'தேன் போன்ற தமிழ்' என்று கூறுவது உவமை அணி   

·          வெள்ளம் போன்ற இன்பம்

·          கடல் போன்ற துன்பம்

·         மதிபோன்ற முகம் - மதிமுகம்


 '
தமிழ்த்தேன்' என்று கூறுவது உருவகம்

·         இன்ப வெள்ளம்

·         துன்பக்கடல்

·         முகம் ஆகிய மதி - முகமதி

எடுத்துக்காட்டு 1

  வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

  சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே

என்று இப்பாடலில்

·         பூமி அகல்விளக்காகவும்

·         கடல் நெய்யாகவும்

·         கதிரவன் சுடராகவும் 

உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே. இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்

எடுத்துக்காட்டு 2

  இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக 
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
  
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.

இப்பாடலில்

·         இன்சொல் - விளைநிலம்

·         ஈதல் - விதை

·         வன்சொல் - களை

·         வாய்மை - உரம் (எரு); 

·         அன்பு - நீர்

·         அறம் - கதிர் 

என உருவகிக்கப் பெற்றுள்ளதனால், இப்பாடல் உருவக அணியாகும்.

இவ்வாறு உவமானம் வேறு, உவமேயம் வேறு எனத் தோன்றாத வகையில்உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின்மேல் ஏற்றிக் கூறுவது உருவக அணி யாகும்.  



ஏகதேச உருவக அணி விளக்கம்

கவிஞர், தாம் எடுத்துக்கொண்ட பல பொருள்களை உருவகப்படுத்திக் கூறும்போது ஒன்றனை மட்டும் உருவகப்படுத்தி, அதனோடு தொடர்புடைய மற்றொன்றனை உருவகப்படுத்தாமல் விடுவது, ஏகதேச உருவக அணி எனப்படும்.

இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

·         ஏகதேசம் - ஒரு பகுதி

ஏகதேச உருவக அணி எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு 1

அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்

·         இத்தொடரில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டு உள்ளது

·         அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை

இவ்வாறு கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.  

எடுத்துக்காட்டு 2

  பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் - திருக்குறள் 

வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்னின் தரத்தை அறிய உதவும் உரைகல்லாக உருவகம் செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை. எனவே இக்குறளில் இடம்பெற்றிருப்பது ஏகதேச உருவக அணியாகும்

எடுத்துக்காட்டு 3

  பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடிசேரா தார் - திருக்குறள் 

இக்குறட்பாவில் பிறவியைக் கடலாக உருவகப்படுத்திவிட்டு, அதனைக் கடக்க உதவும் இறைவனடியைத் தெப்பமாக உருவகப்படுத்தாமையால், இஃது ஏகதேச உருவக அணி ஆயிற்று

முற்றுருவகம் 

உவமானம் உவமேயம் இரண்டும் தனித்தனியாக நின்று பொருள் தருவது உவமை அணி என்றால், உவமானம் வேறு உவமேயம் வேறு என்னும் நிலை இல்லாமல் இரண்டும் ஒன்று எனக் காட்டுவது உருவகம் ஆகும்

இதில் ஒரு பகுதியை உருவகப்படுத்துவதும் உண்டு. ஒரு பகுதி எனப்பொருள்படும் வடமொழிச் சொல்லான ஏகதேசம் என்னும் சொல்லால் அதனை ஏகதேச உருவக அணி என்பர்

அவ்வாறு இல்லாமல் ஒரு பொருளின் அனைத்துப் பகுதிகளையும் உருவகப்படுத்திக் கூறுவது முற்றுருவகம் ஆகும்

  "நற்குணமு நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா

  ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும் 

  வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்

  ஆளுமே பெண்மை அரசு" - நளவெண்பாச் செய்யுள் 

என்னும் நளவெண்பாச் செய்யுள் ஒரு நாட்டின் படை முதலிய உறுப்புகளைத் தமயந்தியின் உறுப்புகளோடு முழுமையாக உருவகப்படுத்தியுள்ளமையால் இது முற்றுருவகம் ஆகிறது.

நினைவுகூர்க:

உவமை அணி, உருவக அணி வேறுபாடு

உவமை அணி

உருவக அணி

ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர் கற்றோம்

உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்.  

'தேன் போன்ற தமிழ்' என்று கூறுவது உவமை அணி 

'தமிழ்த்தேன்' என்று கூறுவது உருவகம் 

·         வெள்ளம் போன்ற இன்பம்

·         கடல் போன்ற துன்பம்

·         மதிபோன்ற முகம் - மதிமுகம் 

·         இன்ப வெள்ளம்

·         துன்பக்கடல்

·         முகம் ஆகிய மதி - முகமதி 

வேற்றுமை அணி

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம்

·         தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்

வேற்றுமை அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அணி இலக்கணம்

பாடத்தலைப்புகள் 

வேற்றுமை அணி 

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்

புலவர் ஒரு செய்யுளில் இரண்டு பொருள்களைக் கூறி முதலில் அவற்றிற்கு இடையே உள்ள ஒற்றுமையையும், பின்னர் ஒரு காரணம் பற்றி அவ்விரண்டிற்கும் இடையே உள்ள வேற்றுமையையும் சுட்டிக்காட்டிப் பாடுவது வேற்றுமை அணி

"கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள் வேற்றுமைப் படவரின் வேற்றுமை யதுவே"  - தண்டி -நூ. 46

வேற்றுமை அணி எடுத்துக்காட்டு

தேனும் வெள்ளைச்சர்க்கரையும் இனிப்புச்சுவை உடையவை

அவற்றுள்

·         தேன் உடலுக்கு நன்மை செய்யும்

·         வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும்

இப்பகுதியைக் கவனியுங்கள்

வெள்ளைச்சர்க்கரைக்கும் தேனுக்கும் இடையே ஒற்றுமையும் உண்டு; வேற்றுமையும் உண்டு

·         இரண்டும் இனிப்புச்சுவை உடையவை என்பது ஒற்றுமை

·         ஒன்று உடலுக்கு நன்மை செய்யும்; இன்னொன்று தீங்கு செய்யும் என்பது வேற்றுமை

இவ்வாறு இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.

எடுத்துக்காட்டு 1

இத்திருக்குறளில் முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்படுகிறது. பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது. எனவே இது வேற்றுமை அணி ஆகும்.

திருவள்ளுவர் நெருப்பு, நாக்கு என்னும் இருபொருள்களை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

ஒற்றுமை

·         நெருப்பு வெம்மையால் சுடுகிறது

·         நாக்குக் கடுஞ்சொற்களால் சுடுகிறது என இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை முதலில் குறிப்பிட்டார்.

வேற்றுமை

பின்னர்த் தீயால் சுட்டது ஆறும் என்றும் நாவால் சுட்டது ஆறாது என்றும் அவற்றிற்கு இடையே உள்ள வேற்றுமையையும் சுட்டிக் காட்டியுள்ளார்

இவ்வாறு அமையப் பாடுவது வேற்றுமை அணி எனப்படும்

பின்வருநிலை அணி என்றால் என்ன?

ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதலே பின்வருநிலை அணியாகும். 

·         செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ, பொருளோ, சொல்லும் பொருளோ மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்க்கும்.

பின்வருநிலை அணி எத்தனை வகைபடும்?

பின்வருநிலை அணியின் வகைகள் - இது மூன்று வகைப்படும். 

1.        சொல் பின்வருநிலையணி 

2.        பொருள் பின்வருநிலையணி 

3.        சொற்பொருள் பின்வருநிலையணி

Description: பின்வருநிலை அணிகள் - பின்வருநிலை அணி வகைகள்



சொல் பின்வருநிலையணி விளக்கம்

ஒரு செய்யுளில் வந்த சொல்லே பல முறை திரும்பத் திரும்ப வந்து வெவ்வேறு பொருள் தருமாயின் சொல் பின்வருநிலை அணி எனப்படும்.

சொல் பின்வருநிலையணி என்றால் என்ன?

முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது சொல் பின்வருநிலை அணியாகும். 

·         செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது

சொல் பின்வருநிலையணி எடுத்துக்காட்டு 1

இக்குறளில் 'துப்பு' என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது. 

·         துப்பார்க்கு - உண்பவர்க்கு

·         துப்பு - நல்ல, நன்மை

·         துப்பு - உணவு 

என்று பல பொருள்களில் வருவதைக் காணலாம். 

எடுத்துக்காட்டு 2

என்னும் திருக்குறளில் பொருள் என்னும் சொல் நான்கு முறை வந்துள்ளது. 

·         முதல் இரண்டு இடங்களில் தகுதி அல்லது மதிப்பு என்னும் கருத்திலும்

·         பின் இரண்டு இடங்களில் செல்வம் என்னும் கருத்திலும் 

அச்சொல் இடம் பெற்றுள்ளது. சொல் மட்டும் பலமுறை வந்து அச்சொல்லிற்கான பொருள் வெவ்வேறாக இருப்பதால் இச்செய்யுளின் அணி சொல்பின் வருநிலையணி ஆயிற்று.  

பொருள் பின்வருநிலையணி விளக்கம்

ஒரு பொருள் குறித்த பல சொற்கள் ஒரு செய்யுளில் இடம் பெறுவது பொருள் பின்வருநிலைஅணி ஆகும்.

பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன?

செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது பொருள் பின் வருநிலையணி ஆகும்.  

·         செய்யுளில் ஒரே பொருள்தரும் பல சொற்கள் வருவது

பொருள் பின்வருநிலையணி எடுத்துக்காட்டு 1

இச்செய்யுளில் 

·         அவிழ்ந்தன

·         அலர்ந்தன

·         நெகிழ்ந்தன

·         விண்டன

·         விரிந்தன

·         கொண்டன 

ஆகிய சொற்கள் மலர்ந்தன என்ற ஒரு பொருளையே தந்தன. 

எடுத்துக்காட்டு 2

என்னும் கம்பராமாயணப் பாடலில், 

ஒலி என்னும் பொருள்படும் சொற்களான, 

·         அரவம்

·         அமலை

·         ஓசை

·         ஓதை

·         தமரம்

·         துழனி 

ஆகியன இடம் பெற்றுள்ளன. இதனால் இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள அணி 'பொருள் பின்வருநிலை அணி' ஆகும்.  

எடுத்துக்காட்டு 3

இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றன. 

சொற்பொருள் பின்வருநிலையணி விளக்கம்

அணி செய்யுளில் இடம் பெறும் ஒரு சொல் அதே பொருளில் பலமுறை பயின்று வருதல் சொற்பொருள் நிலை அணி எனப்படும். 

சொற்பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன?

முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.  

·         செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது

சொற்பொருள் பின்வருநிலையணி எடுத்துக்காட்டு 1

இக்குறட்பாவில் 'விளக்கு' என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும். 

எடுத்துக்காட்டு 2

இப்பாடலில், தீய என்னும் சொல் தீமை என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது. 

எனவே, இது சொற்பொருள் பின்வருநிலையணி.

எடுத்துக்காட்டு 3

என்னும் திருக்குறளில் நாடி என்னும் சொல் அறிந்து என்னும் பொருளில் மூன்றுமுறை வந்துள்ளது. இதனால் இக்குறளில் இடம் பெற்றுள்ள அணி சொற்பொருள் பின்வருநிலை ஆகும்.

தற்குறிப்பேற்ற அணி 

 தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.

.கா.1:

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
                                
சிலப்பதிகாரம்

விளக்கம்:

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.

.கா.2:

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
கூவினவே கோழிக் குலம்.
                                
நளவெண்பா

விளக்கம்:

நளன்தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாகக் கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.

.கா.3:

காரிருளில் கானகத்தே காதலியைகீ கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதேன்றோ - நாதம்
அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
ஒழிக்கின்ற தென்னோ உரை.
                                
நளவெண்பா

விளக்கம்:

நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிப்பட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதைக் கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனைப் பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார்



 

 

No comments: