Friday 6 November 2015

வைணவச் சிற்றிலக்கியங்களின் தொன்மைக்கூறுகள்



முனைவர் ஜ.பிரேமலதா
தமிழ் இணைப்பேராசிரியர்,
அரசு கலைக் கல்லூரி, சேலம்-7
வைணவச் சிற்றிலக்கியங்களின் தொன்மைக்கூறுகள்
முன்னுரை
      தொல்காப்பியர் செய்யுளியலின் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றான வனப்பு பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த வனப்புகள் எட்டு என்று குறிப்பிடப்படுகிறது. அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பவை. இவற்றுள் தொன்மை என்பதற்கு,
""""தொன்மை தானே சொல்லுங்காலை
உரையொடு  புணர்ந்த யாப்பின் மேற்றே "" (தொல்-செய்-229) 


என்ற நூற்பாவில் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
         பழமை வாய்ந்த பொருளைக் குறித்து உரையில் கூறுவது
தொன்மை கூறுகள் என்பவை இராமாயணம், மகாபாரதம் முதலிய புராணச் செய்திகளைக் கூறுவதாகும்.  சென்னைப் பல்கலைக்கழகக் கலைக்களஞ்சியம்  பழமைஎன்னும்  உரை விரவி பழமையாகிய கதைப் பொருளாக வருவது என்று குறிப்பிடுகிறது. அபிதான சிந்தாமணி பழமைத் தாய் நிகழ்ந்த பெற்றி உரைக்கப்படுவது என்று யாப்பருங்கல விருத்தியை மேற்கோள் காட்டி விளக்கம் தந்துள்ளது.
பழந்தமிழில் தொன்மைஎன்றும்  இந்திய மொழிகளின் சம்பு காவியம்என்றும் அழைக்கப்படும்  உரையிடைப்பட்ட பாட்டுடைச் செய்யுள் அமைப்புடைய தொன்மைக் கதைகள் தமிழிலிருந்து பிற மொழிகள் பெற்ற கொடையாகும்.
அஷ்டப் பிரபந்தம்
அழகிய மணவாளதாசர் திருவரங்கப் பெருமாளையே பாடுவதென்று உறுதி  பூண்டு எட்டு பிரபந்தங்களைப் பாடியருளினார்.  இவர் பிள்ளைப்  பெருமாளையங்கார் என்றும் அழைக்கப்படுவர். எட்டு நூல்களும் `அஷ்டப் பிரபந்தம்` என அழைக்கப்பட்டன.  அவை
1. திருவரங்கத் தந்தாதி
2. திருவரங்கத்துமாலை
3. திருவரங்கக் கலம்பகம்
4. திருவேங்கடமாலை
5. திருவேங்கடதந்தாதி
6. அழகரந்தாதி
7. சீரங்கநாயகரூசல்
8. நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

வைணவச் சிற்றிலக்கியங்களில் அஷ்டப்பிரபந்தங்தங்கள் தனிச்சிறப்பு பெற்றவையாகும். இந்த அஷ்டப் பிரபந்தங்களின் சிற்றிலக்கிய வகைகளாக அந்தாதி, மாலை, கலம்பகம், உளசல் போன்றவை இடம் பெற்றுள்ளன.
அந்தாதி- 4
கலம்பகம் -1
ஊசல் -2
மாலை -1
சரிபாதி அந்தாதி   இடம் பெற்றுள்ளது. இந்நூல்களுள் திருவரங்கத்தந்தாதி, கோயிலந்தாதி  என்றும் பிறபெயர்களாக அழைக்கப்படுவதுண்டு. அஷ்டப் பிரபந்தத்தில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 790.
   மேற்கூறிய அஷ்ட பிரபந்தங்களுள் திருமால் தொடர்பான 66 தொன்மைக்கதைகள் இடம் பெற்றுள்ளன.
அவை,

1. கஜேந்திரன்-முதலை கதை
2. ஹம்சாவதரகதை
3. ஆலிலை பள்ளி கொண்ட கதை
4. கடல் கடைந்த கதை
5. துருவன் கதை
6. மத்ஸ்யாவாதர வரலாறு
7. கூர்மவதாரகதை
8. வராகவதாரகதை
9. நரசிங்கஅவதாரகதை
10. வெள்ளி நாட்டங் கெடுத்த கதை

11. கார்த்த வீரீயன் இராவணனைக்கொன்ற கதை
12. கார்த்த வீரியன் - பரசுராமனைக் கொன்ற கதை

13. அகலிகை சாப விமோசன கதை
14. தசரதராமன் - பரசுராமன்கதை
15. இராமன் கதை
16. காகன் கதை
17. மாரீசன் கதை
18. மராமரம் எய்தகதை
19. கஷக்கு முடிகவித்தகதை
20. சூர்பணகை கதை
21. கரனைக் கொன்றகதை
22. இராமபிரான் - சடாயு கதை
23. கபந்தனைக்கொன்ற கதை
24. கடலைச் சுட்டகதை
25. பர்வதமலை  - அனுமன் கதை
26. இராமபிரான் - வைகுந்தம் கதை
27. பலராமன் அஸ்தினாபுரக்கதை
28. பலராமன் - யமுனா நதி கதை
29. கண்ணன் - பூதக்கதை
30. சகடாசுரன் கதை
31. ததிபாண்டன் கதை
32. ஐந்துதலை நாகம் கதை
33. சகடாசுரன் கதை
34. மந்தரை கதை
35. ஆயமகளிர் கதை
36. எருது அடங்கிய கதை
37. உரலில் கட்டிய கதை
38. கன்றால் விலிவெறிந்தகதை
39. பகாசுரன் கதை
40. கேசி கதை
41. பிரமன் - திருமால் கதை
42. கண்ணன் - காட்டுத் தீகதை
43. கோவர்த்தனகிரிகதை
44. ஆயர் -பரமபதக்கதை

45. கண்ணன் - பாரிஜாத தருவைக் கொணர்ந்த வரலாறு
46. கண்ணன் - பிள்ளைகளை மீட்டகதை

47. குருந்தமரக்கதை
48. நாரதர் கதை
49. யானை கொன்ற வரலாறு
50. உக்கிரசேனராசன் வரலாறு
51. கண்டாகர்ணன் முக்தி கதை
52. வாணன் கதை
53. சிசுபாலனைக் கொன்ற வரலாறு
54. திரௌபதி  துகில் கொடுத்த கதை
55. மல்லரைக் கொன்றக் கதை
56. சூரியனை மறைத்த கதை
57. அசுவத்தாமன் கதை
58. அறுபுரஞ் செற்ற கதை
59. இறந்த அரசர்களைக் காட்டிய வரலாறு
60. ஆண்டாள் கதை
61. இராவணன் கதை
62. சிவபிரான் திரிபுரமெரித்த கதை
63. சிவபிரான் பிறை சூடிய கதை
64. சிவபிரான் - காக்கை வரலாறு
65. அரவம் பூண்ட கதை

66. சிவபிரான் பிச்சையைத்திருமால் ஒழித்த கதை
வாமன அவதாரம்
மலர் உந்தி மேல் விழ நெரித்தான் வையம் ஏழும் துஞ்சா
மல் அருந்தினபின் அரங்கன் குறள் ஆய் மண் அளந்த அந்நாள்
மலரும் திவாக்கதிர் வண்குடை ஆய்முடி மாமணியாய்
(தி. அ. அ. பா-71)
     ஏழுவகை உலகங்களையும் அழியாத படி உட்கொண்டவனான அரங்கன் முதலில் வாமன  மூர்த்தியாய்ச் சென்று, பெருவடிவாகி உலகத்தை அளந்து கொண்ட அக்காலத்திலும் என்று வாமன அவதார நிகழ்ச்சியை இப்பாடல்  கூறுகிறது.
1.மச்சவதாரம்
உழிக்காலத்தில் ஒப்பற்றதொரு மீன் வடிவமாகி, கடல் வெள்ளத்தில் வேதங்களைக் கவர்ந்து சென்ற
சோமுகாசுரனைத் தேடும் திருமாலின் சிறப்பு இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.
ஊழிப் பொழுகொடு சேலாய்
ஒரு செலுவுட் கரந்த
ஆழிப் பெரும் புனல் காணாது
தேடுவர் அவ்விடத்தே
(தி.அ.மா.பா22)
2.கூர்மாவதாரம்
அமுதம் பெறுவதற்காகக் கடையப்படுகின்ற திருப்பாற் கடலில் உயர்ந்த சிறந்த ஆமை வடிவமாகி வலிய தனது முதுகில் மந்திர பர்வதம் என்றும் மலையில் தாங்கி யோக நித்திரை கொண்டு அமுதம் பெறுவதற்கு உதவினார்.
""மோட்டுக் கமடத் திருவுருவாகி முது முதுகிற்
கோட்டுச் சயிவம் உழுவதென்னாத் துயில் கொண்டனரே""
(தி.அ.மா.பா-23)
""திரிக்கின்ற பொற்குன்று அழுந்தாமல் ஆமைத் திருவுருவாய்ப்
பரிக்கின்ற திற்பெரும் பாரமு ண்டே பண்டு நான்மன நூல்""
(தி.அ.மா.பா.24)
மேற்கூறிய இரண்டு பாடல்களிலும் திருமால் ஆமை வடிவமாகிய தொன்மைக் கதை கூறப்பட்டுள்ளது.
3.வராக அவதாரக் கதை
பூமிக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்காகக் குற்றமில்லாத வராக அவதாரமெடுத்து மேருமலையை சிறிய பொருளாகும்படி விளையாடினார். இதை விளக்குகின்ற பாடல்கள்,
""சீருற்ற செங்கண் கரும்பன்றி யாகித் திருக்குளம்பில்
மேருக் கணகண மடத்தலை நாளில் வினோதிப்பரே""
(தி.அ.மா.26)
கருமுகிற் கோலப் பெரும்பன்றியை களேபரத்தின்
ஒருமயிர்க் காலடி யூடே கடல்புக்கு ஒளித்தனவே
(தி.அ.மா.27)
4.நரசிம்ம அவதாரக்கதை
யில் வேழமு மரவு மாயையும் வெற்புங்க கடலு
மேல் வீழ் படையும் விடமும் போய்ப்-பால
எனருப்புட் குளிர நின்றதுங் கேட்டோதார்
(நூ.எ.தி.அ.பா.88, பக்க-1147)
இரணியன் தன் மகன் பிரகலாதனை நெருப்பு குழியில் விடுத்தும், யானைகளை விட்டு அவனைக் கொல்ல விடுத்தும், கொடிய சர்ப்பங்கள் விடத்தை கக்கிக் கொண்டு அவனைக் கடிக்க ஏவியும் பிரகலாதனுக்கு அவை எதுவும் செய்யாததால்? திருமாலின் பெருமையைப் புகழ்ந்துரைக்கும் வழியிலான பாடல் இது.
மாதம் பத்துக் கொங்கையும் அல்குல்  தேரும் வயிறும் இல்வள
மாதம்பத்துக் குறியும் கண்டிலேம் வந்து தோன்றினை பூ
மாது அம்பத்து எதிர்பார்பா! அரங்கத்து வாழ்பரந்தா
(தி.அ.சு.பா.62)
நரசிம்ம அவதாரமெடுத்த திருமால் தூணிலிருந்து தோன்றினார். தூணில் வயிறும் இல்லை. அல்குலும இல்லை. கர்ப்ப காலத்திற்குரிய கர்ப்ப சின்னங்களையும் தூணில் காணவில்லை. அவ்வாறிருக்க  தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக வந்த அவதரித்த நுட்பம் யாது என வினவுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது.
5.வாமன அவதாரம்
உலகங்களை அளந்த திருவடிகளை உடையவனும், நந்த கோபன் வளர்த்த குமாரனுமான திருமால் திருக்கோலமாய் எழுந்தருளியிருககும் மலை திருவேங்கடம் எதை லத்தின் கூறுமிடத்து கிருஷ்ணாவதார வாமன அவதாரங்கள் பற்றிய தொன்மைக்கதைகள் இடம்பெற்றுள்ளன. (பாரளந்த திருப்பதனம்) என்ற வரிகள் வாமன அவதார நிகழ்ச்சிகளைச் சுட்டுகின்றது,
""தாளத் தனத்தத்தைத் தீர்த்தான ரங்கன் சகடுதைத்த""
(தி.அ.ச. பா.7 ப-46)
என்ற வரிகள்  சகடாசுரனை உதைத்து அழித்த வரலாற்றை எடுத்துரைக்கிறது,
தாரணி தான வயிராங்குதமுந் தருகினுமே
(தி.அ.சு.பா-5, பா-43)
முதலையிடமிருந்து அயிராவதமெனும் யானையை மீட்ட யானைக்கதை இங்கு சுட்டப்படுகிறது,
அக்கரவம்புவி மேல் வேழமே வெளியாக்கியதே
(தி.அ.அ. பா-28, ப-79)
6..பரசுராமர் அவதாரக்கதை
பரசுராமனின் தந்தை ஜமதக்கினி முனிவர். கார்த்தாவீரியன் என்னும் மன்னன் முனிவரது ஆசிரமத்திலிருந்த காமதேனுவைக் கவர்ந்து கொண்டு சென்றுபோன பொழுது, பரசுராமர் கோபம் கொண்டு கார்த்தாவீரினை நிலைகுலைத்து அவனது ஆயிரந்தோள்களையும் தலையையும் கோடாலிப் படையால் வெட்டிவீழ்த்தி வெற்றி கொண்டான். இது,
""""செறிக்கும் புயஞ்செற்ற ஆயிரம் திண்புயமோ அவற்றைத்
தறிக்கும் திற மழுவோ அரங்காசயத் தாருடைத்தே""
(பா.38)
7.பலராம  அவதாரக்கதை
          பரசுராமர் கலப்பையின் கூர்மையான நுனி கொண்டு யமுனையாற்றை இழுத்துவிட்ட வரலாறு  இப்பாடலில் சுட்டப்படுகிறது.
  நதிபட்ட பாடு நவின்றிடலாகும் நலங்கெழுகூர்
நுதிபட்ட  நெம்டெலத்தாலே இழுத்திட நூற்றுவர்தம்
                                         (தி.அ.மா.பா-48)
என்று கருமையான  அலைகளையுடைய யமுனையாறு கலப்பையைக் கொண்டு  இழுத்திட்டதனாள் பெரும் வருத்தத்தையடைந்தது.
          ஒரு  தாய்  உதரத்தில் ஓரறு திங்கள்  உறைந்த பின்னை
          ஒரு  தாய்  வயிற்றில் வந்துற்ற  தெம்மாயம்  உரைத்திருளே
                                                                    (தி.அ.மா.பா-47)
பலராமன்  தேவசியின் வயிற்றில் ஆறுமாதம்  வசித்தபின்பு,  மற்றொரு  தாயான  ரோசிணியின்  வயிற்றில் வந்து சேர்ந்தான்.  வசுதேவரின் மற்றொரு மனைவி  ரோகிணி. ரோகிணியின்  வயிற்றில்  பிறந்ததினால்  கிருஷ்ணணுக்கு அண்ணன்  முறையாகிறான்.
8.இராமாவதாரம்
தாடகை வதம்
. .  . . . . .  போருடுத்த
பாவை குந்தம் பண்டொசித்தான் பச் சைத் துழாய் நாடுஞ்
சீ வைகுந்தம் பாடுந் தெளித்து
(நூ.எ.தி.அ. பா  53, ப.1101)
விசுமாமதீரனின் வேண்டுகோளின்படி தசரத சக்ரவர்த்தி இராம இலக்குவனர்களை, அவன் செய்த யாகத்தை பாதுகாக்கும் பொருட்டு அனுப்பினார். அப்போது யாகம் நடத்த விடாமல் தடை செய்த தாடகையென்பாள் தன்மீது வீசிய சூலாயுதத்தைத் தனது வில்லினால் முறித்துத் தள்ளிய வீரத்தை இப்பாடல் சுட்டுகிறது,
இராமாயணத்தை
தலமகிமை கூறுமிடத்து
""இருபது மந்தரத் தோளு மிலங்கைக் கிறைவன் சென்னி
யொருபது மந்தரத் தேயறுத் தோ னப்ப னுந்தி முன்னா
டருபது மந்தர வந்தன நான்முகன்றான்""""`
 (தி.வே.அ.பா.21, பா-712)
இலங்கை அரசனான இராவணனுடைய இருபது தோளும், பத்து தலைகளையும் அந்தரத்தே அறுத்தவனும், தன் நாபிக் கமலத்தே பூத்த தாமரை மலரிலிருந்து பிரமன் முதலான உயிர்களும், பிராணி வர்க்கங்களும் தோன்றிய பெருமையுடையவனும் என
உலகத்தோற்றத்திற்கு ஆதி திருமால் எனவும், இராவணன் என்ற அரக்கனை அழித்தவனும் எனத் திருமாலின் அவதார நோக்கமும், இராம அவதாரக் கதைகளும் கூறப்பட்டுள்ளன.
9.கிருஷ்ணாவதார நிகழ்ச்சி
1. வெண்ணெய் உண்டு மகிழ்தல்
2. குடக்கூத்தாடல்
3. காளியன் பாம்பின் மீது ஆடுதல்
4. சகடாசுரன் அழிவு
5. கோவர்த்தனகிரி
6.  வருணன் கிருஷ்ணன் போர்
7. கிருஷ்ணாவதாரம்
8. கம்சன்
9. நப்பின்னை
10. வசுதேவகி-நந்தன் போன்றவை இடம் பிடித்துள்ளன.

திருவேங்கடத்தந்தாதி
""இருப்பதனந்தன் வெண்ணலில் வைகுந்தத் தென்பர் வெள்ளிப்
பருப்பதனந் தண் மலரோனறி சிலர் பாரளந்த
திருப்பனந்தன் மதலை நிற்குந் திருவேங்கட""
(தி.வே.அ. பா-17, ப.105)
கிருஷ்ணாவதாரம்
பாலனம் செய்யமர் நாடாண்டு பூரணாடு பட்டணிந்து
பாலனம் செய்ய கலத்துண்டு மாதர் பல் போகத்தையும்
பாலனஞ் செய்ய இருப்பதில் ஐயம் பருகி நந்தன்
பாலனம் செய்யவள் கோமான் அரங்கம் பயில்கை நன்றே
(தி.அ.அ.பா.48, பா-101)
இப்பாடலில் வசுதேவன்-தேவகிக்கு பிறந்த கிருஷ்ணன்-வசுதேவரால் தலையில் எடுத்துச் செல்லப்பட்டு யசோதையிடம் சேர்த்துவிட்டு, யசோதைக்குப் பிறந்திருந்த மாயையின் அம்சமான பெண் குழந்தையை மதவஇயிடம் கொடுத்த வரலாறு சொல்லப்படுகிறது.
மதயானையான கஜேந்திரன் என்னும் யானையை முதலையிடமிருந்து விடுவித்த வரலாறு பல இடங்களில்
""மதயானைக் கோள்விடுத்து மாமுதலை கொன்ற""
(நூ.எ.தி.அ.பா-44)
பல அவதாரங்கள்
வாராக வாமனனே அரங்கா வட்ட நேமி வல
வா ராகவா உன் வடி வவு கண்டால் (தி.அ.சு.பா.60)
பாணாசுரனைக் கொன்ற வரலாறு
ஆமருவி மேயத் தரவரங்க ளுதிரார் நிற்பார்
தாமரு வி வாணனைத் தோள் சாய்த்த நாள்- சோம
முறுபுவியூர் வன்றோலுடை யானுடந்தான்
(நூ.எ.தி.அ.பா-11, ப.1042)
பலிச்சக்ரவர்த்தியின் சந்ததிகளுள் ஒருவரான பாணன் சிவபிரானின் நடனத்திற்கு மத்தளம் கொட்டுபவன். அவன் மகன் உணவு கிருஷ்ணனின் பேரனான அநிருத்தனை விரும்பி தன் மாளிகைக்கு தூக்கி வந்து விட்டாள். கிருஷ்ணன் அவனை மீட்க படையெடுத்து வர பாணன் தன் படைகளோடு எதிர்க்கிறான். கிருஷ்ணன் பாணனின் கைகளை நான்கினை விடுத்து மீதியை அறுத்துத்தள்ளி சிவனின் வேண்டுகோளினாலும் அவனை விடுத்து, உஷை அநிருத்தனை மணமுடித்துக் கொடுத்தான். இதுவே பாணணை வiத்த கதையாகும்.
10.கல்கி அவதாரக் கதை
          தருமங்கள் உலகை விட்டு நீங்கி,  பொறுமை அழிந்து,  உண்மை ஒழிந்து,  அருள் நிலைகலங்கிய கலியுகக் காலத்திலும்,  கல்கி அவதாரம்  எடுத்து  திருமாள் உலகை நிலை பெறச் செய்தார்.  இந்த வரலாறு ,இப்பாடலில் சுட்டப்படுகிறது.
          தருமம் தவிர்ந்து பொறை கெட்டுச் சத்தியம் சாய்ந்துதயை
          தெருமந்து  தன் பூசனை  முழுதுஞ்சிதையக்  கலியே
          பொரும்  அந்தக் காலக்  கடையினில் எம்பொன் அரங்கன்  அல்லாரும்
          அருமந்த  கற்கி  யென்றாரே  அவை நிலை  ஆக்குவரே?
                                                                                (தி.அ.மா.பா-75)

முடிவுரை
மகாபாரத! இராமாயண நிகழ்ச்சிகளின் மூலம் புராணக்கதைகளின் மூலமும் தசாவதாரக் கதைகளின் மூலமும் திருமாலின் பெருமைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இத்தொன்மைக் கூறுகள் தொன்றுதொட்டு பாரத நாட்டில் வழங்கி வருபவையாகும். அஷ்டப் பிரபந்தங்களில் இவை மிகுதியாக இடம்பிடித்துள்ளன. வனப்பு என்னும் தொல்காப்பியர் குறிப்பிடும் செய்யுள் உறுப்புகளில் ஒன்றான தொன்மைக்கூற்றினைப் பிள்ளைப் பெருமாளையங்கார் மிகச் சிறப்பாக அஷ்டப் பிரபந்தத்தில் கையாண்டுள்ளார்.

No comments: