Saturday 11 January 2014

உ.வே.சா. அவர்களின் குறுந்தொகைப் பதிப்பு

கட்டுரை-2

உ.வே.சா. அவர்களின் குறுந்தொகைப் பதிப்பு

ஆ.கலைச்செல்வி,முனைவர் பட்ட ஆய்வாளர்,அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),சேலம் - 636 007.

உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படுவது தமிழ் மொழியாகும். அது தம்மகத்தே சிறப்புடைய பல்வகை இலக்கண, இலக்கியங்களை அணியாகக் கொண்டு திகழ்கிறது. தமிழ் மொழி இத்தகு பொலிவு பெற முதற்கண் காரணமாக விளங்கியோர்  சங்க காலம் தொடங்கி அதில் இலக்கணங்களையும் இலக்கியங்களையும் எழுதிக்குவித்த புலவர் பெருமக்களாவர். அவர்களுக்கு இணையான பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றோர் அவற்றுக்கு உரைவகுத்த உரையாசிரியர்களும் அவற்றைத் தேடித்தொகுத்துப் பதிப்பித்த பதிப்பாசிரியச் சான்றோருமாவர். அவர்களுள் அனைவரும் எண்ணி வியக்கும் வண்ணம்  மண்ணோடு மண்ணாக மட்கிப்போகாமல் தடுத்துக் காத்து, சங்க இலக்கியங்களையும்
காப்பியங்களையும் தேடிக் கண்டுபிடித்து, அவற்றைச் செம்பதிப்புகளாகக் கொணர்ந்தவர்களுள் முதலிடத்திலும் தலைமையிடத்திலும் வைத்துப் போற்றத்தக்கவர் டாக்டர் உ.வே.சாமிநாதையராவார். அவரது தமிழ்ப்பணிக்கடலின் ஒரு முத்தாகிய குறுந்தொகைப் பதிப்பின் மேன்மை இக்கட்டுரை வழி மதிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பப் பதிப்பு

    உ.வே.சாமிநாதையரவர்கள், 1937 ஆம் ஆண்டு குறுந்தொகையை நூலாராய்ச்சி, மூலம் மற்றும் விரிவான உரையுடன்  பதிப்பித்து வெளியிட்டார். அவர்தம் மகனார் ஸ்ரீ கலியாண சுந்தரையர் அவர்களால் காகிதப்பஞ்சம் காரணமாகக் குறுந்தொகை, சுருக்கமான நூலாராய்ச்சியுடன் 1947 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முதற்பதிப்பின் சாயலாகச் சில திருத்தங்களுடன் உ.வே.சா.வின் பெயரனார் க.சுப்பிரமணியன் 1955 இல் குறுந்தொகையின் மூன்றாம் பதிப்பை வெளியிட்டார். 

முன்னோடிகள்

    உ.வே.சா. அவர்களின்  குறுந்தொகைப்    பதிப்பு   மற்றும்   உரையானது  தமக்கு முன்னால் பலர் செய்த உரை மற்றும் சிலரின் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு அவர்தம் கடின உழைப்பின் மூலமாகச் செய்யப்பட்டதாகும்.  குறுந்தொகையின் முதல் 380 பாடல்களுக்குப் பேராசிரியரும் மீதமுள்ள 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரையெழுதி உள்ளதை உ.வே.சா. தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.  மேலும் ஏட்டுச் சுவடிகளாகவும் கையெழுத்துப் பிரதிகளாகவும் கிடைத்த ஒன்பது பிரதிகளையும் மனமுவந்து வழங்கியோரைக் குறிப்பிட்டு அவர்தம் பிரதிகளிலுள்ள குறைகளையும் திருத்தம் செய்துள்ளார். அப்பிரதிகளாவன,

i.        திருநெல்வேலி  ஸ்ரீ அம்பலவாணக்கவிராயரவர்கள் ஏட்டுப் பிரதி.
ii.       மந்தித் தோப்பு  மடத்திற்  கிடைத்த ஏட்டுப் பிரதி.
iii.    செங்கோல் மடத்திற் கண்ட குறைவான ஏட்டுப் பிரதி.
iஎ.    திருமயிலை வித்வான் ஸ்ரீ சண்முகம் பிள்ளையவர்கள் கடிதப் பிரதி.
எ.    சோடசாவதானம் ஸ்ரீ சுப்புராய செட்டியாரவர்கள் ஏட்டுப் பிரதி.
எi.    தொழுவூர் ஸ்ரீ வேலாயுத முதலியாரவர்கள் ஏட்டுப் பிரதி.
எii.    சென்னை இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலை ஏட்டுப் பிரதி.
எiii.    புதுக்கோட்டை ஸ்ரீராதா கிருஷ்ணையரவர்கள் கடிதப் பிரதி.
iஒ.    திருக்கோணமாலை ஸ்ரீ தி.த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் கடிதப்பிரதி.
ஆகியன ஆகும்.
    இப்பிரதிகள் எட்டுத்தொகையுள் கலித்தொகை, பரிபாடல் தவிர ஏனைய ஆறு நூல்களையும் உள்ளடக்கியன ஆகும்.  1915 ஆம் ஆண்டு அரங்கசாமி ஐயங்காரென்பவர் எழுதிய குறுந்தொகை மூலம் மற்றும் உரை, 1933 ஆம் ஆண்டு       ஸ்ரீ மான் வித்வான் சோ.அருணாசல தேசிகரவர்களின் குறுந்தொகையின் மூலப்பதிப்பு ஆகியனவற்றை முன்னோடியாகக் கொண்டு குறுந்தொகையை உ.வே.சா. பதிப்பித்துள்ளார்.

நன்றி மறவாப் பண்பு

    தம் உழைப்பிற்கு உதவியவர்களை மறவாமல் குறிப்பிடுவது பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர் மற்றும் ஆய்வாளர் ஆகியோருக்குரிய பண்பு ஆகும்.  உ.வே.சா அவர்கள் தம் பதிப்பிற்கு உதவியவர் குறித்து """"இந்நூலை ஆராய்ந்து வந்த காலங்களிலும் பதிப்பித்த காலத்திலும் பல அன்பர்களுடைய உதவியைப் பெற்றிருக்கின்றேன்.  அவர்களுள் முக்கியமானவர்கள் என்னுடைய இளைய சகோதரர் சிரஞ்சீவி வே. சுந்தரரேசையரும், சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி.மு.சுப்பிரமணிய ஐயரும், சிரஞ்சீவி வித்துவான் கி.வா.ஐகந்நாதையரும் ஆவார்""  (குறுந் – உக) என தம் முகவுரையில் நன்றி மறவாப் பண்புடன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னுரைச் செய்திகள்
    நூலின் முன்னுரை, அந்நூல் குறித்த மிகச் சுருக்கச் செய்தியாக அமைகிறது.  ஆனால் உ.வே.சா. அவர்கள் தம் குறுந்தொகைப் பதிப்பில் மிக விரிவான முன்னுரையை அளித்துள்ளார்.  தொல்காப்பியர், அகப்பாடல்களுள் முதல், உரி, கரு ஆகிய பொருட்கள் உட்பொருண்மையாக அமைந்திருத்தல் சிறந்தது என்பதனை,
        """"முதல்கரு  உரிப்பொருள்  என்ற  மூன்றே
          நுவலுங்  காலை  முறைசிறந்  தனவே
          பாடலுட்  பயின்றவை  நாடுங்  காலை""   (தொல். அகத். 4)
என்ற நூற்பா வழி உரைக்கிறார்.  முதல் பொருளுள் நிலமும், பொழுதும் அடங்கும்.  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்கள் குறித்தும் அவற்றுள் செழித்து விளங்கும் இயற்கைவளம் குறித்தும்  உ.வே.சா. தெளிவாக விளக்குகிறார்.  ஆறு பெரும் பொழுது குறித்தும், சிறுபொழுது ஆறாக வழங்கப்படுவது மட்டுமன்று ஐந்து எனவும் வழங்கப்படும் நிலை குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.  மேலும் அவற்றிற்குரிய பருவங்கள் குறித்தும், அப்பருவத்தில் நிகழும் இயற்கை மாறுதல்கள் குறித்தும் எடுத்தியம்பியுள்ளார்.  ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள், பயிர்வகைகள், பறவைகள், விலங்குகள், மலைகள், ஆறுகள், காடுகள், ஊர்கள் ஆகிய கருப்பொருள் நிலை குறித்து மிக விரிவாக விளக்கியுள்ளார்.  ‘நுளம்பு’ எனும் பூச்சியினத்தை, மாட்டீயின் பெயர் எனவும், இவ்வீ இரவில் பசுக்களைக் கடித்துத் துன்புறுத்தக் கூடியது எனவும் விளக்கியுள்ளார். ‘மரல்’ என்பது வயல் பகுதியில் விளையக் கூடிய தேவையற்ற களை என்பதையும், ‘வருடை’ என்பது மலை வாழ் பறவை எனவும் எடுத்துரைப்பது அறியாததைப் பிறர் அறிய உதவுவதாக உள்ளது.  இயற்கைப் பொருள் சார்ந்த உண்மைகளை உணர்ந்து குறுந்தொகைப் புலவர்கள் தம் பாடல்களைப் படைத்துள்ளனர் என்பது இவர்தம் முன்னுரையால் அறியப்படுவதாகும்.
    குறுந்தொகைப் பாடல்களிலுள்ள தலைவன், தலைவி ஆகியோர் தம்முள் நட்புக்கொண்டு வாழும் வாழ்க்கை நிலையை மணத்திற்கு முன்னதாகிய களவொழுக்கம் எனவும், அதன்பின் மணம் புரிந்து வாழும் கற்பொழுக்கம் எனவும் இருவகையாகப் பிரித்து அவர் விளக்கியுள்ளார்.  இவ்விரு நிலைகளில் உரிப்பொருள் நிலைக்களனாக விளங்கும் புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய நிலைகளை உணர்வு பூர்வமாக அவர் சித்தரித்துள்ளார்.  களவு, கற்பு நிலைகளில் கூற்று நிகழ்த்துவோர் குறித்து விளக்கியுள்ளார்.  குறுந்தொகைப் பாடல்களில் கூறப்படும் மன்னர், குறுநில மன்னர்களை ‘உபகாரிகள்’ என உரைத்து அவர்களின் பெருமைகளை விளக்கியுள்ளார்.

    பண்டைக்காலத்து மக்கள் வாழ்க்கையில் உள்ள அரசியல், அறம், ஊர்களின் அமைப்பு, பொருள், சாதிகள், ஆடவர், மகளிர், நிமித்தம், வழக்கங்கள், கருவிகள், ஊர்திகள், உணவுவகை, மக்கள் உரைவளம், இசை, கடவுள் வழிபாடு, நீதிநெறி ஆகியன குறித்து அவர் விளக்கியுள்ளார்.  மேலும் குறுந்தொகையில் பயின்றுள்ள இலக்கணச் செய்திகள், பாடிய புலவர்களின் சிறப்பு, அவர்களின் ஊர், சாதி, தொழில் குறித்தும் சிறப்புப் பெயர்கள், உறுப்பால் வந்த புலவர்பெயர்கள், புலவர்க்குரிய அடைமொழிகள், பெண்பாற்புலவர், வழக்காற்றுப்பெயர்கள், தெய்வப்பெயர்கள், பிறபெயர்கள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.  மேலும் பாடினோர் வரலாற்றை அகர வரிசையிலும் அவர்கள் பாடிய பாடல்களின் எண்களையும் அமைத்துள்ளார்.  எட்டுத் தொகையுள் அவர்கள் இயற்றிய பிற பாடல்களையும் குறிப்பிட்டுள்ளார். 

உரை எழுதிய பாங்கு

    உ.வே.சா, குறுந்தொகைப் பாடல்களுக்குப் பொருளை மட்டும் விளக்காது  விரிவான விளக்கவுரையை அளித்துள்ளார்.  அவர் தமது விளக்கவுரையைக் கூற்று, கூற்று விளக்கம், மூலம், பழைய கருத்து, ஆசிரியர் பெயர், பிரதிபேதம், பதவுரை, முடிவு, கருத்து, விசேடவுரை, மேற்கோளாட்சி, ஒப்புமைப்பகுதி என்னும் விதமாக அமைத்துள்ளார்.  ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு, பாடினோர் வரலாற்றில் அமைக்கப்பட்டுள்ளது. 

அகராதி

    செய்யுள்    முதற்   குறிப்பகராதி,   அரும்பதம்   முதலியவற்றின்   அகராதி   ஆகிய அகராதிகளை இறுதியில் கொடுத்துள்ளார்.
1.    அகர வரிசைப்படி பாடலின் முதல்சீரைக் கொடுத்து செய்யுள் எண்ணையும் குறிப்பிட்டுள்ள படி அமைத்திருப்பது ‘செய்யுள் முதற்குறிப்பகராதி’ ஆகும்.
2.    சில சிறப்பான சொற்களைக் குறிப்பிட்டு, பாடல் எண்களையும் குறிப்பிட்ட படி எழுதுவது ‘அரும்பதம் முதலியவற்றின் அகராதி’ ஆகும்.
இதன் மூலம் பாடல்களை நூலில் தேடும் சிரமம் குறைக்கப்படுகிறது.

முடிவுரை

    உ.வே.சா. அவர்கள், தமிழ் இலக்கியத்தை, தான் படித்து இன்புற்றது மட்டுமின்றி, பலரும் படித்து இன்புறும் வகையில் தம்முடைய உழைப்பைக் கொடுத்து, சங்க இலக்கியங்களையும், பிற நூல்களையும் உரையுடன் பதிப்பித்துப் பரிசளித்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.  பலரின் துணையுடன் குறுந்தொகைப் பதிப்பைச் செம்பதிப்பாகப் பதிப்பித்தது, போற்றுதற்குரியதாகும்.  பல அரிய குறிப்புகளை முன்னுரையில் தந்துள்ளமை வியப்பிற்குரியதாகும்.  மேலும் பாடல்களுக்குப் பொழிப்புரை மட்டும் வகுக்காது, விரிவான விளக்கத்தையும், பிற உரையாசிரியரின் கருத்துகளையும், இலக்கணக்குறிப்புகளையும், பிற நூல்களிலிருந்து ஒப்புமைப் பகுதிகளையும் காட்டியுள்ளமை அவர் தமிழ்மொழி மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும்  கொண்ட பற்றினையும், தமிழ் மொழிக்காக அவர் செய்த அரும்பணியையும் வெளிக்கொணர்வதாய் உள்ளது.
   




No comments: