Sunday 17 June 2018

2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்



Unit-2

சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் /இரண்டாம் காண்டம்
சருக்கம்


சாக்கிய நாயனார் புராணம் (3636 - 3653)
திருச்சிற்றம்பலம்
3636
அறு சமயத் தலைவராய் நின்றவருக்கு அன்பராய்
மறு சமயச் சாக்கியர்தம் வடிவினால் வரும் தொண்டர்
உறுதிவரச் சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து
மறுவில் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம்

7.1.1
3637
தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவுடைய
வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து
கேளாகிப் பல் உயிர்க்கும் அருள் உடையார் ஆய்க் கெழுமி
நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார்
7.1.2
3638
அந் நாளில் எயில் காஞ்சி அணிநகரம் சென்று அடைந்து
நல்ஞானம் அடைவதற்குப் பலவழியும் நாடுவார்
முன்னாகச் சாக்கியர் தாம் மொழி அறத்தின் வழி சார்ந்து
மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார்
7.1.3
3639
அந் நிலைமைச் சாக்கியர்தம் அரும் கலை நூல் ஓதி அது
தன்னிலையும் புறச் சமயச் சார்வுகளும் பொருள் அல்ல
என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறில் சிவ
நன்னெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார்
7.1.4
3640
செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும்
மெய் வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே
இவ்வியல்பு சைவநெறி அல்ல வற்றுக்கு இல்லை என
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார்
7.1.5
3641
எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே
துன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம்
தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார்
7.1.6
3642
எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார்
பொல்லா வேடச் சாக்கியரே ஆகிப் புல்லர் ஆகுவார்
அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன
வல்லார் இவர் அவ் வேடத்தை மாற்றாது அன்பின் வழிநிற்பார்
7.1.7
3643
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
நாணாது நேடியமால் நான் முகனும் காண நடுச்
சேணாரும் தழல் பிழம்பாய்த் தோன்றிது தெளிந்தாராய்
7.1.8
3644
நாள் தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து
மாடோ ர் வெள் இடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம்
நீடோ டு களியுவகை நிலைமை வரச் செயல் அறியார்
பாடோ ர் கல் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார்
7.1.9
3645
அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால்
மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரிசெயலினால்
இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே
நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார்
7.1.10
3646
அன்றுபோய் பிற்றைநாள் அந்நியதிக்கு அனையுங்கால்
கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்புஅதனை
நின்றுணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே
என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார்
7.1.11
3647
தொடங்கிய நாள் அருளிய அத்தொழில் ஒழியா வழிதொடரும்
கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவராடைப்
படம் புனை வேடம் தவிரார் பசுபதியார் தம் செயலே
அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மாதவர்தாம்
7.1.12
3648
இந் நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய
முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில்
துன்னிய மெய் அன்புடனே எழுந்தவினை தூயவர்க்கு
மன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால்
7.1.13
3649
கல்லாலே எறிந்த அதுவும் அன்பான படி காணில்
வில்வேடர் செருப்பு அடியும் திருமுடியில் மேவிற்றால்
நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை
அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலராமால்
7.1.14
3650
அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார்
எங்கள் பிரான் தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து
பொங்கியது ஓர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு
வெங்கர்஢யின் உரி புனைந்தார் திருமுன்பு மேவினார்
7.1.15
3651
கொண்டதொரு கல்எடுத்துக் குறிகூடும் வகை எறிய
உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கை ஓடும்
கண்டருளும் கண்நுதலார் கருணை பொழிதிருநோக்கால்
தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவி ஓடும் தோன்றினார்
7.1.16
3652
மழ விடைமேல் எழுந்து அருளி வந்த ஒரு செயலாலே
கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி
விழ அருள் நோக்கு அளித்து அருளிமிக்க சிவலோகத்தில்
பழ அடிமைப் பாங்கு அருளிப் பரமர் எழுந்து அருளினார்
7.1.17
3653
ஆதியார் தம்மை நாளும் கல் எறிந்து அணுகப் பெற்ற
கோதில் சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும்
சோதியார் அறிதல் அன்றித் துணிவது என் அவர்தான் சூடித்
தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரைச் செப்பி
7.1.18




ஆறுவகைப்பட்ட சமயங்களுக்கும் தலைவராய் விளங்கும் சிவபெருமானுக்கு அன்பராகிப் புறச்சமய சாக்கியர்களின் வடிவுடன் வரும் தொண்டராகி, சைவ சமயமே மெய்ச் சமயம் என்ற துணிவு கொள்வதால் சிவலிங்கத்தைப் பார்த்து மகிழ்ந்து, அதன்மீது கலெறிந்து குற்றம் நீக்கும் த்ருவடியைப் பெற்ற தன்மையை நாம் அறிந்த அளவினால் வணங்குவோம்.(3636)

அச்சாக்கிய நாயனார், திருச்சங்க மங்கை என்ற பதியில் முயறிசியுடையவர்களாக வாழ்கின்ற வேளாளர் மரபில் தோன்றினார். உண்மைப் பொருளைத் தெரிந்தும் அதன் பயனை உணர்ந்தும் அன்புடையவராயும் எல்லா உயிர்களிடத்தும் அருள் உடையவராயும் ஒழுகிப் பிறந்தும் இறந்தும் வரும் நிலையின் தன்மை மேலும் செல்லாது இந்தப் பிறவியிலேயே அதனின்றும் நீங்குவேன் என்ற கருத்துடனே அவ்வொழுக்கத்தில் நிற்பாராயினார். ( சங்க மங்கை - காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள பதி ) (3637)
அவ்வாறு சாக்கியர் ஒழுகி சரும் நாளில் தன் பொருட்டுத் தம் ஊரைவிட்டு, மதிலையுடைய காஞ்சிநகர்க்குச் சென்று அடைந்து உண்மை ஞானத்தை அடைதற்குரிய பலவழிகளையும் ஆராய்பவராய் அதன் பொருட்டு முதலில் பௌத்த தருமங்களின் வழியில் சேர்ந்து நிலைபேற்ற பிறப்பை அறுக்கும் உறுதிப்பாட்டின் வழியினை ஆராய்பவராய் ஆனார்.(3638)
அந்நிலையில் அவர் பௌத்தர்களின் அரிய திரிபிடகம்என்ற கலை நூலைக் கற்று அதன் துணிபாகப் பெறப்பட்ட முடிபும் இன்னும் மற்றப் புறச்சமயங்களின் சார்பாகக் கூறும் முடிவுகளும் உண்மைப் பொருள் அல்ல என்ற உண்மையைத் தெளிந்தார்.சிவனின் திருவருள் கூடப் பெற்றமையால் அளவில்லாத நல்ல சிவ நெறியே உண்மைப் பொருளாவதுஎன்ற உணர்வை மனத்தில் நிலை பெற நிறுத்தினார்.(3639)

செய்யும் வினை ஒன்று. செய்பவனான கருத்தா ஒன்று. பயன் ஒன்று. அதனைத் தந்து ஊட்டுபவனான முதல்வன் ஒன்று என உண்மை காணும் வகையினால் - விதியினால் கிடைக்கும் பொருள்கள் நான்காகும் என்ற தெளிவு கொண்டார். இந்தச் சிறப்பு இயல்புநிலை சைவநெறி அல்லாத மற்ற நெறிகளுக்கு இல்லை என்ற துணிபையும், உய்தி பெறும் தவத்தால் சிவபெருமானின் துணையால் பொருளாவது சிவனே ஆவார் என்பதனையும் அவர் உணர்ந்து அறிந்து கொண்டார்.(3640)

எந்த நிலையில் ஒருவர் நின்றாலும், எந்தக் கோலத்தைக் கொண்டாலும், நிலையான் சிறப்புடைய சிவ்னின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப் பொருளாகும் எனத் துணிந்தார். தாம் மேற்கொண்டு பூண்ட பௌத்த துறவுக் கோலத்தை நீக்காமலேயே தூய்மை செய்யும் சிவலிங்கக் குறியினை மிக்க அன்புடன் மறவாத நிலையில் சிறந்து விளங்கலானார். (3641)

உலகம் பலவற்றையும் தம் வடிவாக உடைய ஈசன் என்ற சொல்லுக்குப் பொருளாகி சிவபெருமானே முழுமுதலாம் தலைவர் என்ற உண்மையை அறிய மாட்டாதவர்களே பொல்லாங்கு துய்க்கும் பொறியிலிகளாய்த் தம் கோலத்தை அவனில் வேறு எனக் கொள்ளும் சாக்கியர்களாகிப் புன்மையின் நின்று ஒழுகுவர். கரிய நஞ்சுடைய கண்டத்தையுடைய சிவபெருமானுக்கு இந்த உலகம் எல்லாம் ஆளவதே அல்லாது வேறில்லை என்று, இவர் அந்த பௌத்த சமயத்தவர் தாங்கும் கோலத்தை )மாற்றாமலேயே சிவன்பால் அன்பின் வழியில் நின்றார்.(3642)

கண்ணுக்குத் தெரியாத அருவமாய் உள்ள மேனிக்கும், கண்ணுக்குத் தெரியும் உருவ மேனிக்கும் மூலமான இருப்பிடமாகி, நீண்ட பாம்பினை அணிந்த எம்பெருமான் சிவனை அறிந்து வழிபட சிறந்த அடையாளமான குறியாய் விளங்கும் சிவலிங்கம் தேடிய திருமாலும், நான்முகனும் காணுமாறு அவர்கள் நடுவே அனல் தூணாகித் தோன்றிய வடிவமே ஆகும் எனத் தெளிவு கொண்டார்.(3643)

நாள்தோறும் சிவலிஙத்தைக் கண்டு வணங்கிய பின்பே உணவு உண்ண வேண்டும் என்று வழக்கத்தை மேற்கொள்ள விரும்பினார். பக்கத்தில் ஒரு வெளியிடத்தில் நிலைபெற்ற சிவலிங்கத்தைப் பார்த்து மனதில் கொண்டு, என்ன செய்வது என்று அறியாதவராய்ப் பக்கத்தில் ஒரு கல்லைப் பார்த்து அதையே மலராய், அன்பி; உண்டான பதை பதைப்புடன் எடுத்து அச் சிவலிங்கத்தின்மீது எறிந்தார்.(3644)

உள்ளம் நிறைந்து பெருகிய பெருமகிழ்ச்சியால் வந்த அளவற்ற அன்பினால் தம் குழந்தையை மகிழ்ந்து மகிழ்ச்சி கொள்பவர்கள், அக்குழந்தை செய்யும் எச்செயலும் அதற்கு அச்செயலால் இன்பமே உண்டாக்குமே அன்றி அச்செயலால் துன்பம் ஏற்படுவதில்லை. அது போன்றே நாயனார் செய்த கல்லெறிந்த வன்மைச் செயலுக்கு நீண்ட சடைமுடியினையுடைய அண்ணலார் மகிழ்வே அடைந்தார்.(36445)

அன்று போய் பின்வரும் நாள்களிலும் சிவலிஙத்தைக் கண்டபின் உணவு உட்கொள்வது என்று தாம் மேற்கொண்ட வழக்கத்தின்படி லிங்கத் திருமேனியைக் காணச் சென்றார். கொன்றை மாலைசூடிய சடையுடைய சிவபெருமானின் திருமேனியின் மீது தாம் முன்பு கல் வீசிய அடையாளத்தைப் பற்றி நின்று உணர்வில் கொள்பவராய், “அப்போதுஎனக்கு இத்தகைய எண்ணம் உண்டானது இறைவர் அருளால் ஆகும்என்று துணிந்தார். அதனையே தாம் செய்யும் தொண்டாய் மேற்கொண்டு நாள்தோறும் இச்செயலையே செய்யலானார்.(3646)

சாக்கிய நாயனார் அச்செயல் தொடங்கிய நாளில் இறைவர் அருள் செய்த அச்செயல் இடையறாது தொடர்ந்து செல்லும் கடமையை எண்ணுபவராய்க் கல்லைச் சிவலிங்கத்தின்மீது எறிபவராய்த் துவராடையை அணிகின்ற பௌத்த வேடத்தையும் விடாது அணிவார். பெருந்தவமுடைய நாயனார் சிவபெருமானின் அருட் செயலே எல்லாம் ஆகும் என்ற உணர்வுடையராய் விளங்கினார்.(3647)

இத்தகைய நியதிச் செயலை அன்புடன் செய்து வந்தார். அச்செயல் மதிக்கப்படும் திருத் தொண்டேயாகி முடிந்த தன்மையைச் சொன்னால், அன்பினால் எழுந்த நெறியின் நியாயத்தால் பொருந்திய மெய்யன்பு காரணமாகத் தொடங்கிச் செய்த செயல் தூயவரான இறைவர்க்கு நிலைபெற்ற சிறப்புமிக்க பூசனையே ஆகும். (3648)
கல்லால் எறிந்த செயலும் அன்பால் செய்யும் தொண்டே ஆன தன்மையை ஆராய்ந்தால், வில்வேடரான கண்ணப்பரின் செருப்படியும், இறைவரின் திருமுடியில் பொருந்தப்பெற்றதாயின் தன்மையைப் பார்த்தோம் ஆதலின் நல்லவரான அவர் அன்பால் விரும்பிய அச்செயலை, அல்லாதவர், “அவர் எறிந்தது கல்என்பர். அந்து எம்பெருமான் சிவனுக்கு மன்மிக்க மலரேயாகும். (3649)
அவ்வாறான ஒழுக்கத்தை மேற்கொண்டு வரும் நாள்களில், ஒரு நாள், இறைவன் திருவருளால் தம் வழக்கத்தை மறந்து உண்ணத் தொடங்கினார். உடனேயே அவர், “எம்பெருமானைக் கல் எறிந்து வழிபடாது நான் மறந்தேனேஎன்று எண்ணி, உண்ணாமல் எழுந்து, மென்மேலும் எழுகின்ற பெருவிருப்புடன் மிகவும் விரைந்து புறப்பட்டுக் கொடிய யானையின் தோலை உரித்த அண்ணலாரின் முன் சென்றார்.(3650)
அங்கு கிடைத்த ஒரு கல்லை எடுத்து வழிபாட்டின் குறிக்கோள் நிறைவேறும் வகையில் அவர் எறிந்தார்.உண்னும் செயலையும் கைவிட்டு அச்சத்துடன் ஓடி வரும் பெருவிருப்புடன் அவரைக் கண்டு அருள் செய்கின்ற நெற்றிக் கண்ணரான இறைவர் அத் தொண்டரின் எதிரே பெரிய வானில் தம் துணைவியான உமையம்மையுடன் தோன்றினார். (3651)
இளமையுடைய காளையின் மீது எழுந்தருளி வந்த ஒப்பில்லாத செய்கையால் இறைவரின் திருவடியினை அடைந்த குற்றமற்ற சிறப்புடைய தொண்டரான சாக்கிய நாயனார் கண்டு, கைகள் கூப்பி நிலத்தில் விழுந்து பணிந்து விழுந்தார். அவரை அருள் நோக்குக் கொண்டருளிச் சிறப்பு மிக்க சிவலோகத்தில் பழைய அடிமைத்திறத்தை இறைவர் அளித்தருளினார்.(3652)

 

 

 

No comments: